
டாஸ்மாக்கில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு முன்பு சென்னை உட்பட தமிழகத்தில் மொத்தம் 12 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த சோதனையில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடும் அடங்கும். டாஸ்மாக் முறைகேடு பணத்தில் இவர் நடத்தி வரும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனம் படங்களை தயாரிக்கிறதா என்ற சந்தேகத்தின் பேரில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறைத் துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனை முடிவில் விக்ரம் ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அமலாக்கத்துறை ஆகாஷ் பாஸ்கரனுக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் நேரில் ஆஜராகாமல் இருந்தார்.
இந்த நிலையில், அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வீடு அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அமர்வு முன்பு இன்று (13-06-25) வந்தது. அப்போது ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘டாஸ்மாக் முறைகேட்டிற்கும் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எந்த தொடர்பு இல்லை. அவர் திரைப்பட தயாரிப்பாளர் தான். ஆகாஷ் பாஸ்கரனது 2 செல்போன் மற்றும் லேப்டாப் ஒன்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்’ என்று வாதிட்டார். அதனை தொடர்ந்து விக்ரம் ரவீந்திரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘விக்ரம் ரவீந்திரன் டாஸ்மாக் ஊழியரோ அல்லது எதுவுமே இல்லாத நிலையில், அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது’ என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘எதன் அடிப்படையில் ஆகாஷ் பாஸ்கரனிடம் விசாரணை நடத்தப்படுகிறது? எதன் அடிப்படையில் விக்ரம் ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது?. வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு என்ன அதிகாரம் உள்ளது?. எந்த அதிகாரத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது?. என அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும். அதே போல் சோதனை மேற்கொண்ட போது என்ன என்ன ஆவணங்களை கைப்பற்றப்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டும்’ என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.