Skip to main content

காவல்துறைக்கு சவாலாக அமைந்த சயனைடு மல்லிகா வழக்கு - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 51

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
thilagavathi-ips-rtd-thadayam-51  

பல்வேறு கொலை, குற்றச் சம்பவங்களை ‘தடயம்’ என்னும் தொடரின் வழியே தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி நம்மிடம் விளக்கி வருகிறார். அந்த வகையில் சயனைடு மல்லிகா வழக்கு பற்றி விளக்குகிறார். 

இந்த வழக்கு கர்நாடகாவில் 18. 12. 2007 அன்று வெளிச்சத்திற்கு வந்தது. ஏரியூர் சித்தேஸ்வர சுவாமி கோயிலில் தங்கும் சத்திர அறைகளின் பொறுப்பாளர் மாதவனிடம் ஒரு அறையில் இருந்து கெட்ட வாடை வந்ததின் பேரில் அந்த 28-ம் நம்பர் ரூமை திறந்து பார்த்த போது ஒரு 65 வயது மதிப்புள்ள ஒரு வயதான பெண்மணியின் அழுகிப் போன ஒரு  சடலம் கிடைக்கிறது.  விசாரித்ததில் 15ஆம் தேதி அதாவது ஒரு மூன்று தினங்களுக்கு முன் தாயும், மகளுமாக வந்து அட்வான்சை கட்டி விட்டு வழிபாட்டுக்கு  வந்திருப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டு ரிஜிஸ்டர் புக்கில் லட்சுமி பாண்டவபுரம் என்று கையெழுத்து போட்டு ரசீது வங்கியிருந்தனர்.  அடுத்ததாக அந்த ஊர் இன்ஸ்பெக்டருக்கு தகவல் செல்கிறது. 

சம்பவ இடத்தில் வழக்கமாக செய்யும் ஃபார்மாலிட்டியும் செய்து விசாரணை நடக்கிறது. அதே சமயம் கோயில் அருகே நிறைய பெண் சடலங்கள் விழுந்து கொண்டே இருக்கிறது. மேலும் அம்ருத்தூர் என்ற போலீஸ் ஸ்டேஷனில் அஞ்சனப்பா என்பவர் என் அம்மாவை மூன்று நாட்களாக காணவில்லை என்று புகார் அளித்திருந்தார். பத்திரிக்கையில் இந்த சம்பவம் பிரபலம் அடைகிறது. இன்ஸ்பெக்டர் உமேஷ் என்பவர் மூலம் டெப்டி கமிஷனர் கே.வி.சரத் சந்திரா ஐபிஎஸ் என்பவர் ஒரு குழு அமைத்து கிடைத்திருக்கும் எல்லா வழக்குகளையும் ஒன்று சேர்த்து விசாரணையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கின்றனர். பக்கத்து அறையில், அந்த வரிசையில் இருந்தவர்கள் கூறிய அடையாளங்களை வைத்து அந்த குற்றவாளியை ஒரு டிஜிட்டல் புகைப்படமாக தயாரிக்கின்றனர். நகை கடை, அடகு கடை சென்று யாரும் சந்தேகம்படும்படி நகை அடகு வைக்கிறார்களா என்று உரிமையாளர்களிடம் கண்காணிக்கும்படி தகவல் சொல்கின்றனர். 

இதற்கிடையில் கிடைத்த பிணம், தன் தாயை காணவில்லை என்ற புகார் அளித்தவரின் தாய் தான் என்று உறுதி செய்யப்படுகிறது. அவருடைய ஃபோனை காவல்துறை உதவியோடு தேடிய போது, அங்கே இருக்கும் கடைகளில் ஒரு செல்போனை விற்பனை செய்ய முயற்சி செய்திருப்பதை பார்த்து போலீஸ் பையை வாங்கி செக் செய்யும் போது அதில் ஒரு சைனைட் குப்பி பாட்டில்ஸ் நிறைய கிடைத்திருக்கிறது. ஒரு அடகு கடை ரசீது, கொஞ்சம் நகை, தங்கியிருந்த கோயில் வளாகத்து அறை சாவி, மற்றும் ரசீது இருக்கிறது. அந்த பெண்மணியை கைது செய்து மேற்கொண்டு விசாரித்ததில் கடைசியாக தான் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன் என்று வழிக்கு வர மேஜிஸ்ட்ரேட் முன்பு வாக்குமூலம் வாங்குகின்றனர். தன் கதையை சொல்கிறார். பெங்களூர் அருகே கக்கலிபுரா தான் சொந்த ஊர். ஐந்தாம் வகுப்பு வரை தான் படித்திருந்தேன். குடும்பத்தில் கடுமையான வறுமை. அதனால் நிறைய அவமானங்களை சந்தித்து இருந்தேன்.  என்னை தேவராஜ் என்ற டைலருக்கு 15 வயதில் திருமணம் செய்து வைத்து விட்டனர். 

தனக்கு மூன்று குழந்தைகள். வருமானம் குறைவு என்பதால் அருகில் இருக்கும் வீடுகளில் நான் வீட்டு வேலை செய்து வந்தேன். ஆனால் அந்த வீட்டின் வசதிகளை பார்க்கும் பொழுது, நிறைய ஏக்கம் இருந்தது. சிறிய திருட்டுகள் செய்தேன். ஒருமுறை பிடிபட்டு ஆறு மாதம் சிறை தண்டனையும் அனுபவித்திருந்ததாக சொன்னார். ஜெயிலுக்கு போய் வந்தும் மீண்டும் திருட்டை தொடர்ந்து கொண்டு செய்கிறார். கணவர் கண்டித்ததும் ஒத்து வராததால் 1998-ல் இருவரும் பிரிகின்றனர். வறுமைக்காக மீண்டும் வீட்டு வேலை செய்ய ஒரு பொற்கொல்லர் வீட்டில் முதல் முறை பொட்டாசியம் சயனைடு பார்க்கிறார். அதன் மேல் வந்த ஈர்ப்பால் பொற்கொல்லர் அனுப்பி வைத்தார் என்று பொய் சொல்லி, சயனைடு நிறைய கடைகளில் வாங்குகின்றார். இதை வைத்து தனது திட்டமிட்ட கொலையை முதல் முறை செய்ய ஆரம்பிக்கிறார். கோயிலில் மவ்த்தா ராஜன் என்ற முப்பது வயது பணக்கார பெண்மணியிடம் பேச்சு கொடுத்து அவர் தன் குடும்பத்தில் மன நிம்மதி இல்லாததால் கோயில் வந்ததாக சொல்லவும் தனக்கு சிறப்பு மண்டல பூஜை தெரியும் என்றும், தன் மேலே சாமி உத்தரவு கொடுக்கும். கடும் கஷ்டத்தை போக்க இந்த மண்டல பூஜை செய்ய வேண்டும் என்று ஏமாற்றுகிறார்.

ஆனால் அடுத்தவர்களுக்கு தெரியாமல் இதை ரகசியமாக செய்ய வேண்டிய பூஜை என்று சொல்லி வீட்டில் இருக்கும் எல்லா நகைகளையும் போட்டுக் கொண்டு சர்வ அலங்காரமாக அம்மன் முன்னாடி உட்கார வேண்டும என்று ஏமாற்றி திட்டம் போட்டு நம்ப வைத்து அவர் கண்களை மூடி வேண்ட சொல்லி விட்டு சைனைடு கலந்த நீரை வலுக்கட்டாயமாக வாயை திறக்க வைத்து ஊற்றி விடுகிறார். அந்தப் பெண்மணி உயிரை விட்டதும் போட்டிருந்த எல்லா நகைகளையும் கழட்டி எடுத்துக் கொண்டு தப்பிக்கிறார். யாரும் இந்த பெண்மணியை பார்க்கவில்லை என்பதால் அடையாளம் சொல்ல முடியாமல் போகவும் கேசை முடித்து விடுகின்றனர். இதுதான் இவரின் முதல் சயனைடு கொலையாக 1999 இல் நடந்தது. இவ்வழக்கு குறித்த மேலும் விவரங்களை அடுத்த தொடரில் காணலாம்...