Skip to main content

"பா.ம.க பகுதிக்குள் நீங்க போக வேண்டாம், அதை திமுக பார்த்துக் கொள்ளும்'' - எதற்காக சொன்னார் திருமா? கடந்த காலத் தேர்தல் கதைகள் #3

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

தமிழகத்தில் கவனிக்கப்படும் தொகுதிகளில் சிதம்பரம் தொகுதியும் ஒன்று. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து போட்டியிடுவதால் இது ஸ்டார் தொகுதியாகியிருக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் இதே திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பிறகு, தனித்துப்போட்டி என தொண்டர்கள் முழக்கம், மக்கள் நலக் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் போட்டி என சென்ற பயணம் மீண்டும் தற்போது இந்த முறையும் திமுக கூட்டணியுடன் அதே சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் இந்தத் தொகுதியில் ஏற்கனவே ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராக  இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . கடந்த தேர்தலில் சிதம்பரம் தேர்தல் களம் எப்படி இருந்தது? கொஞ்சம் சென்று பார்க்கலாம்.

அப்போதும் தமிழகத்தின் ஹாட்டஸ்ட் தொகுதிகளில் ஒன்றாக சிதம்பரம் தகித்தது. தொகுதியில், வன்னிய சமூக மக்களும், தலித் சமூக மக்களும் ஏறத்தாழ சம பலத்தில் இருக்க, இவர்களையடுத்து இஸ்லாமியத் தரப்பும், கிறிஸ்தவத் தரப்பும், மூப்பனார் சமூகத்தினரும் ஓரளவு கணிசமாக உள்ளனர். பிற சமூக மக்களும் கலந்துகட்டி இருக்கிறார்கள். 

 

thiruma



கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலில் அரியலூரில் அறிமுகக் கூட்டத்தைக் கலக்கலாகத் தொடங்கிய திருமா, முதற்கட்டமாக தன் கட்சித் தொண்டர்களை அழைத்து "சாதீய மோதலுக்கு வழி வகுத்து, நம்மைப் பலிகடா ஆக்கப் பார்ப்பார்கள். அதனால் பா.ம.க.வினர் இருக்கும் வன்னியப் பகுதிகளுக்குள், நீங்கள் வாக்கு சேகரிக்கப் போக வேண்டாம். அதை சூரியத் தரப்பு பார்த்துக் கொள்ளும்'' என எச்சரிக்கையாகக் கடிவாளம் போட்டார். இதைத்தொடர்ந்து பல தொகுதிகளில் இருந்தும் திருமாவுக்காக களவேலை பார்க்கச் சென்றிருந்த சிறுத்தைப் பிரமுகர்கள், தலித் மக்கள் வாழும் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று "பா.ம.க.வில் சேர்ந்து சீட் வாங்கியிருக்கும் மணிரத்தினத்தை ஓரம்கட்டுங்க. அவருக்கு சரியான பாடம் புகட்டுங்க. அ.தி.மு.க. வேட்பாளரோ கரன்ஸியை மட்டுமே நம்பி நிக்கிறார். அவரையும் தோற்கடிச்சி அனுப்புங்க. ஈழத்தமிழர்களுக்காக உறுதியாக் குரல் கொடுக்கிறவர் நம்ம திருமாதான்'’ என்றெல்லாம் திண்ணைப் பிரச்சாரம் செய்தார்கள் . இந்த நிலையில் உ.பி.க்கள் திருமாவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று ஒரு தகவல் அப்போதும் கிளம்பியது. குன்னம் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்த திருமா "சிறுத்தைகள் போட்டியிடும் இரு தொகுதிகளிலும் தி.மு.க. சரியாக களப்பணி செய்யவில்லை என்று சிலர் வதந்தி பரப்புகிறார்கள். ஆனால் இங்கே பாருங்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.வும் மா.செ.வுமான சிவசங்கர், பெரம்பலூர் மா.செ.துரைசாமி போன்றோர் இங்கே வந்து, அந்த வதந்தியை முறியடித்துவிட்டார்கள்'' என்று  உற்சாகமாகப் பேசி அதை முடித்துவைத்தார்.

முன்னாள் அமைச்சரும் தி.மு.க. மா.செ.வுமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அடிக்கடி தொகுதி முழுக்க விசிட் அடித்து, உ.பி.க்களை உசுப்பிவிட்டபடியே இருந்தாராம். ஒரு முறை குமராட்சி பகுதிக்கு திடீர் விசிட் அடித்த அவர், ஒ.செ. மாமல்லனைக் கூப்பிட்டு "நம்மக் கட்சியில் இருக்கும் வன்னிய வாக்குகளை இலைத் தரப்பு அறுவடை பண்ணலாம்னு பாக்குது. யாரும் ஜாதிப் பாசத்துக்கு இடம் கொடுத்துடாம பார்த்துக்கங்க. தேர்தல் முடிந்ததும் ஒன்றிய வாரியா, நமக்கு எவ்வளவு வாக்குன்னு பார்ப்பேன். ஓட்டு குறைஞ்சா யாரா இருந்தாலும், கட்சிப் பதவிக்கு ஆப்புதான்'' என செல்லமாக எச்சரித்துள்ளார். முஸ்லிம்கள் அதிகமுள்ள லால்பேட்டை, பரங்கிப் பேட்டை பகுதிகளில் ம.ம.க. ஜாகிர் உசேன் டீம், திருமாவுக்கு வாக்குகளை அறுவடை செய்தது. 
2014இல் இலைத்தரப்பில் நல்ல மனிதர் என்று பெயரெடுத்துள்ள சந்திரகாசு வரிந்து கட்டினார். "இங்கு திருமாவை தோற்கடித்துவிட்டு வாருங்கள்" என ஜெ., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தேர்தல் பொறுப்பாளராக அனுப்பிவைக்க அவர், பர்ச்சேஸிங் பாலிஸியைக் கையில் எடுத்தார். தொகுதியில் இருக்கும் வன்னிய வாக்குகளைக் குறிவைத்த அவர், பா.ம.க.வில் இருந்து யார் யாரை இழுக்கலாம் என அண்ணாமலை நகர் வாடகை வீட்டில் ஆலோசனை நடத்தினார். முதலில் வன்னிய தலைவர்களில் முக்கியமானவரான பு.த.இளங்கோவனை ஜெ.’தலைமையில் ஐக்கியமாக்கினார். இளங்கோவன் மூலம் பாட்டாளிப் பிரமுகர்களை இழுக்க முயன்றார். டாக்டர் ராமதாஸுக்கு முதலில் அரசியல் அட்வைசராக இருந்த கங்கைகொண்ட சோழபுரம் பொறியாளர் கோமகனை சந்தித்த அதிமுக முக்கியஸ்தர்கள் "நீங்க எங்கக் கட்சிக்குக் கூட வர வேணாம். நீங்க தேர்தல் வேலை செய்யாமல் இருந்தாலே போதும்'’என்று கூற அவரும், "நான் ஒதுங்கிக்கிறேன்" என்று சொல்லிவிட்டார். செங்கோட்டையனின் ஆட்கள் சிதம்பரம் அ.தி.மு.க. பூத் ஏஜெண்டுகளை எல்லாம் செல்போனில் தொடர்புகொண்டு "உங்க பகுதியில் மாற்று கட்சிக்காரர்கள் யார் நம்ம பக்கம் வருவாங்க. பட்ஜெட் என்ன?" என தூண்டில் வீசியபடியே இருந்தார்கள்.

 

thiruma 1



காங்கிரஸில் பசை பார்ட்டியான தொழிலதிபர் மணிரத்தினம், சீட்டை பலமாக எதிர்பார்த்திருக்க, கட்சியோ எக்ஸ் எம்.பி. வள்ளல்பெருமானை அறிவித்தது. மணிரத்தினத்துக்கு காங்கிரஸில் சீட் இல்லை என்று தெரிந்ததும், சிறுத்தையினர் வெடிவெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். காரணம் தலித் வாக்குகளை மணிரத்தினம் பிரிப்பார் என்று அவர்கள் நம்பினர். இதனால் டென்ஷனான மணிரத்தினம், பா.ம.க. காடுவெட்டி குருவைத் தொடர்புகொண்டு சீட்டுக்குப் பேசினார். க்ரீன் சிக்னல் கிடைக்க, 100 கார்கள் புடைசூழச் சென்று குருவைப் பார்த்தார். இவரைப் பார்த்ததும் குரு "என்னை காதலுக்கு எதிரின்னு எல்லோரும் நினைச்சிக்கிட்டிருக்கீங்க. நான் எதிரி இல்லை. ஏமாற்றுக் காதலைத்தான் எதிர்த்தேன்" என்றார். "தெரியும்ணே" என்ற மணி, குருவுக்கு சால்வை போட்டார். அங்கிருந்து டாக்டர் ராமதாஸை குரு தொடர்பு கொள்ள, அவரும் ஓ.கே. சொன்னார். இதைத்தொடர்ந்து, மணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

"சீட் கிடைக்காததால் இன்னொரு கட்சியில் சேர்வது சந்தர்ப்பவாதம் இல்லையா?' என மணிரத்தினத்திடம் அப்போது நக்கீரன் கேட்டபோது "விசுவாசமான தொண்டனின் முதுகில் கட்சியே குத்திவிட்டால் அது சரியா? உனக்குதான் சீட் என்று நம்பவைத்து கடைசி நேரத்தில் கட்சி, கழுத்தை அறுப்பது சரியா? சீட் தருவோம் என்ற பெயரில், காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் என்னிடம் எவ்வளவோ ஆதாயம் அடைந்தார். நான் மதித்த கட்சி என்னை மதிக்கவில்லை. என்னை மதித்த கட்சியை நான் மதித்து சேர்ந்திருக்கிறேன்'' என்றார் அதிரடியாகவே. ஞானதேசிகன், அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக சில காலம் இருந்தார். பின்னர், வாசன் அணி பிரிந்து மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானது. காங்கிரஸ் வள்ளல்பெருமானோ, சிதம்பரத்தில் செயல்வீரர் கூட்டத்தைக் கூட்டி "பா.ம.க.வுக்கு போன மணிரத்தினம் துரோகி" என ஆரம்பித்து ஒருமையில் அர்ச்சனை செய்தார். இலைத் தரப்போ "இங்கு நான்குமுனைப் போட்டி என்றபோதும், உச்ச ஃபைட் எங்களுக்கும் திருமாவுக்கும்தான்''’ என்றது அழுத்தமாக.

இப்படி வி.ஐ.பி. தொகுதியான சிதம்பரத்தில் 2014யிலும் சம பலத்தில் போட்டி நிலவியது. போட்டி என்பதைத் தாண்டி ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் என்பது போர் போலத்தான். வியூகங்கள், ஆக்ஷன், துரோகம், ட்விஸ்ட் எல்லாம் கலந்து தற்போதும் தகிக்கிறது தேர்தல் களம். மக்களுக்கு இந்த ஒரு மாதம் கேளிக்கைதான். அதன் பின்பு வென்றவர்களுக்கு கேளிக்கை. மக்களுக்கு வாடிக்கையான வாழ்க்கை.  

 

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.