Skip to main content

தண்டனை முடித்து வந்த அப்பா; அடையாளம் மறந்த குழந்தை - சிறையின் மறுபக்கம் : 06

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

siraiyin-marupakkam-05

 

'சிறையின் மறுபக்கம்' தொடரில் 15 வருட சிறைத் தண்டனை பெற்ற மணிகண்டன் தன்னுடைய சிறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்...

 

நட்பால் தான் நான் சிறைக்குச் சென்றேன். அறியாத வயதில் பசங்களோடு சேர்ந்து செய்த தவறு அது. கொலை செய்ய வேண்டும் என்கிற நோக்கில் செய்யவில்லை. அந்த சம்பவத்தில் நாங்கள் ஆறு பேர் ஈடுபட்டோம். சில நாட்கள் கழித்து நானாகவே சென்று காவல் நிலையத்தில் ஆஜரானேன். மரண வாக்குமூலம் கிடைத்ததால் எங்களுக்கு 90 நாட்களில் பெயிலும் கிடைக்கவில்லை. என்னுடைய திருமணம் காதல் திருமணம். பெண்ணின் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்தது. இதனால் பெண்ணின் ஊருக்கு பல நாட்கள் நான் செல்லாமலேயே இருந்தேன்.

 

ஒருநாள் நாங்கள் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த சிலர் எங்களோடு இருந்த ஒருவரைத் தாக்கினர். அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். நண்பர்களோடு சென்ற நானும் அந்தக் கொலையில் ஈடுபட்டேன். அவரை வெட்டிவிட்டு அனைவரும் தப்பினோம். இந்த வழக்கில் சம்பந்தப்படாதவர்களும் பாதிக்கப்பட்டனர். அந்த வழக்கில் சிறை சென்று வந்த பிறகு எந்தத் தவறான காரியங்களிலும் நான் ஈடுபடவில்லை. ஆனால் காவல்துறையினர் அடிக்கடி என்னிடம் வந்து விசாரிப்பார்கள்.

 

சிறை என்பது கொடுமையான ஒரு இடம்தான். உள்ளே செல்லும்போது அட்மிஷன் அடி என்று ஒன்று இருக்கும். குடும்பத்தை நினைத்து தான் நான் அதிகம் பயந்தேன். நான் சிறை சென்றபோது என்னுடைய பெண் குழந்தை பயங்கரமாக அழுதாள். அது என்னை மிகவும் பாதித்தது. நான்கு வருடங்கள் கழித்து பரோலில் நான் வந்தேன். அப்போதுதான் வாழ்க்கை குறித்த புரிதல் எனக்கு வந்தது. என்னுடைய இரண்டாவது பெண் குழந்தை ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போது நான் சிறை சென்றதால் நான் திரும்பி வரும்போது அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.

 

நான் சிறையில் இருந்த சமயத்தில் என்னுடைய மனைவி வீட்டு வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார். என்னுடைய குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளித்தவர் என் மனைவி தான். சிறையில் இருக்கும்போது நமக்கு பிரச்சனையும் வரும். சிலர் நமக்கு ஆறுதலாகவும் இருப்பார்கள்.

 

 

Next Story

“சிறையில் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கின்றன” - சிறையின் மறுபக்கம் : 07

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

S

 

'சிறையின் மறுபக்கம்' தொடரில் 11 வருடங்கள் சிறை தண்டனை பெற்ற மைதீன் தன்னுடைய சிறை அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அப்போது எனக்கு வயது 28. நண்பர்களுக்காக செய்த கொலை அது. நாங்கள் மொத்தம் ஆறு பேர். கொலை செய்யும்போது எங்களுடைய குடும்பத்தைப் பற்றி நாங்கள் யோசிக்கவில்லை. நம்முடைய குடும்பம் கஷ்டப்படும்போது தான் நண்பர்கள் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. நான் சிறையில் இருந்தபோது என்னைப் பார்க்க என்னுடைய நண்பர்கள் யாரும் வரவில்லை. என்னுடைய தாய், தகப்பன், மனைவி மட்டும்தான் எனக்கு உதவி செய்தனர். ஒரு சாராய வியாபாரியிடம் எங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. எங்களைக் கொன்றுவிடுவேன் என்று அவர் மிரட்டினார். கொடூரமான நபர் அவர். 

 

அவரைக் கொன்றுவிடலாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். அதன்படியே கொன்றோம். ஒரு வாரம் கழித்து தான் நான் சரண்டர் ஆனேன். நமக்கு பரோல் வழங்கப்படும்போது அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதேனும் தவறோ அல்லது தாமதமோ செய்தால், அடுத்த முறை பரோல் வழங்க மாட்டார்கள். சிறையில் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கின்றன. படிக்காமலேயே நிறைய விஷயங்கள் தெரிந்த நபர்கள் சிறையில் இருக்கின்றனர். கிட்டத்தட்ட அது ஒரு கல்விக்கூடம் போல் தான். சட்டம் உட்பட பலவற்றையும் அங்கு கற்றுக்கொள்ளலாம். 

 

பலருடைய அனுபவங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு சிறையில் கிடைக்கும். சிறையில் சில அதிகாரிகள் எங்களோடு நன்கு பழகுவார்கள். நாங்கள் செய்யும் வேலைக்கு ஒரு நாளைக்கு எங்களுக்கு 10 ரூபாய் சம்பளம். இந்த விஷயத்தில் நம்மைத் துன்புறுத்த மாட்டார்கள். அங்கு இருப்பவற்றில் நமக்குப் பிடித்த வேலையை நாம் செய்யலாம். பெரிய ஆட்களும் சின்ன ஆட்களும் சிறையில் ஒன்றுதான். அனைவருக்கும் சாப்பாடு ஒரே அளவில் தான் வழங்கப்படும். யாருக்கும் தனி மரியாதை என்பதெல்லாம் கிடையாது.

 

குடிப்பழக்கத்திற்கு அடிமையான பலரையும் சிறையில் காண முடியும். தெரியாமல் போன் பேசினால் அதற்கான தண்டனையாக வேறு சிறைக்கு மாற்றிவிடுவார்கள். சிறைக்குள் பெரிய குற்றங்கள் செய்தால் அடி விழும். சிறை தான் எனக்கான பாடமாக இருந்தது. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் பலர் குறித்தும் நம்மால் சிறையில் இருக்கும்போது அறிய முடியும். சிறையில் கற்ற பாடங்களை வைத்து தான் இப்போது திருந்தி வாழ்கிறேன். சிகிச்சை கொடுக்க நேரமாவதால் சிறையில் மாரடைப்பு ஏற்பட்டு பலர் மரணமடைந்திருக்கின்றனர். சிறையில் தற்கொலைகளும் நடைபெறும். கைதிகளுக்குள் நிறைய சண்டைகளும் ஏற்படும்.

 

 

Next Story

ஜெயிலுக்குள் வாழ்க்கை புரிந்தது; வெளியே வந்ததும் உலகமே மாறி இருந்தது - சிறையின் மறுபக்கம்: 05

Published on 05/07/2023 | Edited on 05/07/2023

 

 siraiyin-marupakkam-05

 

'சிறையின் மறுபக்கம்' தொடரில் 18 வருட சிறை தண்டனை பெற்ற தாமோதரன் தன்னுடைய சிறை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

 

உண்மை என்பது நிச்சயம் ஒரு நாள் வெளிவந்தே தீரும். இப்போது ஊரில் உள்ள அனைவருக்கும் நான் தவறு செய்யவில்லை என்பது தெரிந்திருக்கிறது. சிறையில் இருந்து வெளியே வந்தபோது உலகமே மாறியிருந்தது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. சிறையில் போதை வஸ்துக்கள் கிடைப்பது உண்மைதான். ஆனால் எப்போதாவது தான் அவை கிடைக்கும். சிறையில் இருக்கும்போது பேரறிவாளன் அவர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு பாடல் பாடுவதிலும் எழுதுவதிலும் ஆர்வம் உண்டு. அவர் கிடார் வாசிப்பார். உண்மையில் அவர் மென்மையான ஒரு மனிதர்.

 

அவரின் மென்மையான இயல்பைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். சிறையில் எப்போது என்ன பிரச்சனை வரும் என்பது தெரியாது. நான் ரிலீசாகி வந்து ஆறு மாதத்தில் என்னுடைய அம்மா இறந்துவிட்டார். அவர் சுயநினைவு இல்லாமல் இருந்தபோது அவரை நான்தான் கவனித்துக்கொண்டேன். அவரை அந்த நிலையில் பார்ப்பது எனக்கு வேதனையாக இருந்தது. இந்த உலகத்தில் நிலைப்பதற்கு பணம் தேவைப்படுகிறது. சிறை சென்று வந்ததால் எனக்கு இதுவரை எந்த வேலையும் கிடைக்கவில்லை. வாழ்வாதாரத்திற்கும் வழியில்லை. ஆனால் உழைப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

 

ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும், வாழக்கூடாது என்று அனைத்தையும் சிறையில் கற்றுக்கொள்ளலாம். அறிவுரை செய்வது இப்போதிருக்கும் தலைமுறைக்கு பிடிப்பதில்லை. இப்போதிருப்பவர்கள் அறிவாளிகளாகவும், தெளிவாகவும் இருக்கிறார்கள். நான் பட்ட கஷ்டங்களை வேறு யாரும் படக்கூடாது. இப்போது கூட நான் சிறையில் இருப்பதுபோல் கனவு கண்டு அடிக்கடி எழுந்து பார்ப்பேன். வீட்டில் இருக்கிறோம் என்பதை உணர்ந்த பிறகு தான் நிம்மதியாக இருக்கும். எதிர்காலத் திட்டம் என்று எதுவும் இல்லை. நேர்மையாக வாழ வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய எண்ணம். 

 

சிறையில் இருக்கும்போது குடும்ப நிகழ்ச்சிகளில் நம்மால் பங்கேற்க முடியவில்லையே என்கிற ஏக்கம் இருக்கும். சிறையில் அனைத்து மத வழிபாடுகளுக்கான வாய்ப்பும் இருக்கிறது. அல்-உம்மா தீவிரவாதிகளையும் சிறையில் நான் சந்தித்திருக்கிறேன். முக்கியமான விஷயங்கள் குறித்து அவர்கள் நம்மோடு பேச மாட்டார்கள். ஆண்களை விட பெண்கள் சிறையில் அதிகம் பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்று கேள்விப்பட்டதுண்டு. மறுவாழ்வுக்கான வாய்ப்புகளும் அவர்களுக்கு மிகவும் குறைவு. சிறையிலிருந்து வருபவர்களுக்கு ஒரு வாழ்வாதாரத்தை அரசாங்கம் ஏற்படுத்தித் தர வேண்டும். அப்போதுதான் வெளியே வந்ததற்கான முழுமையான அர்த்தத்தை அவர்கள் உணர்வார்கள்.