Skip to main content

குற்றம் புரிந்தோரின் சிந்தனையை விரிவாக்கும் ஓர் இடம்  - சிறையின் மறுபக்கம்: 04

Published on 27/06/2023 | Edited on 27/06/2023

 

siraiyin-marupakkam-04

 

'சிறையின் மறுபக்கம்'  தொடரில் 18 வருட சிறைத் தண்டனை பெற்ற தாமோதரன் தன்னுடைய சிறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

 

1994 ஆம் வருடம். அப்போது எனக்கு மிகவும் இளம் வயது. சின்ன பிரச்சனைகளுக்குக் கூட கை வைக்கும் மனநிலை அப்போது இருந்தது. ஊரில் ஒரு இடத்தில் பிரச்சனை நடந்துகொண்டிருந்தபோது என்னுடைய நண்பன் ஒருவன் அங்கு சென்று அடிதடி ஏற்பட்டிருக்கிறது. அப்போது நான் வீட்டில் தான் இருந்தேன். என் மீதும் வழக்கு பதியப்பட்டது. என்னுடைய அண்ணன் தான் அப்போது எங்கள் குடும்பத்தைத் தாங்கும் தூணாக இருந்தார். நான் தவறு செய்யவில்லை என்றாலும் ஸ்டேஷனுக்கு சென்ற உடனேயே என்னை அடித்து உதைத்தனர். 

 

உண்மையில் கொலை நடந்த இடத்திலேயே நான் இல்லை. என்னுடைய நண்பனும் நான் எதுவும் செய்யவில்லை என்று கூறினான். உண்மை என்ன என்பது கடவுளுக்குத் தான் தெரியும். அந்த நிகழ்வு நடந்தபோது நான் வீட்டில் தான் இருந்தேன். நான் தவறு செய்யவில்லை என்று என் அம்மாவுக்குத் தெரியும். ஆனால் அண்ணன் அப்போது வீட்டில் இல்லாததால் அவர் அதை நம்பவில்லை. ஏற்கனவே சிறு சிறு தவறுகளை நாங்கள் செய்து வந்ததால் ஊர் மக்களுக்கு எங்கள் மீது வெறுப்பு இருந்தது. எனவே இந்தக் கொலை சம்பவம் நடந்தபோது அனைவரும் எங்களுக்கு எதிராக இருந்தனர்.

 

என்னுடைய அண்ணன் தான் என்னை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னை அடி அடி என்று அடித்தனர். மற்ற குற்றவாளிகள் சரணடைந்த பிறகு என்னையும் ரிமாண்ட் செய்தனர். சிறையில் நான் அடைக்கப்பட்ட போது என்னுடைய நண்பர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். கடலூர் சிறையில் எங்களுக்கு மிகுந்த பயம் ஏற்பட்டது. தூங்கும்போது அடித்துத் தான் எழுப்புவார்கள். அந்த ஒரு நாளை என்னால் என்றும் மறக்க முடியாது. சட்டம் என்றால் என்ன, போலீஸ் என்றால் என்ன என்று எதுவும் தெரியாத வயது அது. வயதும் போய்விட்டது, வாழ்க்கையும் போய்விட்டது.

 

பூமியிலேயே இருக்கும் நரகம் என்றால் அது சிறை தான். வாழ்க்கையில் அனைவரும் ஒருமுறை சிறைக்கு சென்று வர வேண்டும். ஆனால் சிறையே வாழ்க்கையாகி விடக்கூடாது. சிறையில் தான் நம்முடைய சிந்தனை அதிகமாகும். செய்த தவறு குறித்து வருந்தவும் திருந்தவும் முடியும். பரோல் மூலம் கிடைக்கும் வெளியுலகத் தொடர்பு என்பது மிகவும் முக்கியம். நம்முடைய நன்னடத்தை மூலம் தான் அதைப் பெற முடியும். அதை என்னால் பெற முடிந்தது. சிறையில் இரண்டு பேருக்கு இடையில் சண்டை ஏற்பட்டால் இருவரையும் தனித்தனி அறையில் அடைப்பார்கள். சிறைக்குள் சென்ற பிறகும் குற்றம் செய்பவர்களைத் தான் அடிப்பார்கள். உள்ளே வரும்போதே அடிப்பதற்கு அட்மிஷன் அடி என்று பெயர். உள்ளே வந்த பிறகு தவறு செய்யக்கூடாது என்பதற்காக அடிக்கும் அடி அது.

 

நான் சிறையில் அனுபவித்த வேதனையை விட என் குடும்பத்தினர் அனுபவித்த வேதனை தான் அதிகம். நான் சிறையில் இருந்த காலத்தில் என்னுடைய குடும்பத்தினர் ஒவ்வொருவராக மறைந்தனர். என் தந்தை இறந்த தகவல் எனக்குத் தாமதமாகத்தான் கொடுக்கப்பட்டது. சிறை நடைமுறைகள் தெரியாததால் என்னால் அப்போது வெளியே வர முடியவில்லை. என்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் இழந்ததால் எதற்காக நான் வெளியே வந்தேன் என்று எண்ணி தினம் தினம் வேதனைப்படுகிறேன். தவறே செய்யாமல் நான் சிறைக்குச் சென்றதால் கடவுள் என்னோடு இருப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

 

 

Next Story

“சிறையில் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கின்றன” - சிறையின் மறுபக்கம் : 07

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

S

 

'சிறையின் மறுபக்கம்' தொடரில் 11 வருடங்கள் சிறை தண்டனை பெற்ற மைதீன் தன்னுடைய சிறை அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அப்போது எனக்கு வயது 28. நண்பர்களுக்காக செய்த கொலை அது. நாங்கள் மொத்தம் ஆறு பேர். கொலை செய்யும்போது எங்களுடைய குடும்பத்தைப் பற்றி நாங்கள் யோசிக்கவில்லை. நம்முடைய குடும்பம் கஷ்டப்படும்போது தான் நண்பர்கள் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. நான் சிறையில் இருந்தபோது என்னைப் பார்க்க என்னுடைய நண்பர்கள் யாரும் வரவில்லை. என்னுடைய தாய், தகப்பன், மனைவி மட்டும்தான் எனக்கு உதவி செய்தனர். ஒரு சாராய வியாபாரியிடம் எங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. எங்களைக் கொன்றுவிடுவேன் என்று அவர் மிரட்டினார். கொடூரமான நபர் அவர். 

 

அவரைக் கொன்றுவிடலாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். அதன்படியே கொன்றோம். ஒரு வாரம் கழித்து தான் நான் சரண்டர் ஆனேன். நமக்கு பரோல் வழங்கப்படும்போது அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதேனும் தவறோ அல்லது தாமதமோ செய்தால், அடுத்த முறை பரோல் வழங்க மாட்டார்கள். சிறையில் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கின்றன. படிக்காமலேயே நிறைய விஷயங்கள் தெரிந்த நபர்கள் சிறையில் இருக்கின்றனர். கிட்டத்தட்ட அது ஒரு கல்விக்கூடம் போல் தான். சட்டம் உட்பட பலவற்றையும் அங்கு கற்றுக்கொள்ளலாம். 

 

பலருடைய அனுபவங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு சிறையில் கிடைக்கும். சிறையில் சில அதிகாரிகள் எங்களோடு நன்கு பழகுவார்கள். நாங்கள் செய்யும் வேலைக்கு ஒரு நாளைக்கு எங்களுக்கு 10 ரூபாய் சம்பளம். இந்த விஷயத்தில் நம்மைத் துன்புறுத்த மாட்டார்கள். அங்கு இருப்பவற்றில் நமக்குப் பிடித்த வேலையை நாம் செய்யலாம். பெரிய ஆட்களும் சின்ன ஆட்களும் சிறையில் ஒன்றுதான். அனைவருக்கும் சாப்பாடு ஒரே அளவில் தான் வழங்கப்படும். யாருக்கும் தனி மரியாதை என்பதெல்லாம் கிடையாது.

 

குடிப்பழக்கத்திற்கு அடிமையான பலரையும் சிறையில் காண முடியும். தெரியாமல் போன் பேசினால் அதற்கான தண்டனையாக வேறு சிறைக்கு மாற்றிவிடுவார்கள். சிறைக்குள் பெரிய குற்றங்கள் செய்தால் அடி விழும். சிறை தான் எனக்கான பாடமாக இருந்தது. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் பலர் குறித்தும் நம்மால் சிறையில் இருக்கும்போது அறிய முடியும். சிறையில் கற்ற பாடங்களை வைத்து தான் இப்போது திருந்தி வாழ்கிறேன். சிகிச்சை கொடுக்க நேரமாவதால் சிறையில் மாரடைப்பு ஏற்பட்டு பலர் மரணமடைந்திருக்கின்றனர். சிறையில் தற்கொலைகளும் நடைபெறும். கைதிகளுக்குள் நிறைய சண்டைகளும் ஏற்படும்.

 

 

Next Story

தண்டனை முடித்து வந்த அப்பா; அடையாளம் மறந்த குழந்தை - சிறையின் மறுபக்கம் : 06

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

siraiyin-marupakkam-05

 

'சிறையின் மறுபக்கம்' தொடரில் 15 வருட சிறைத் தண்டனை பெற்ற மணிகண்டன் தன்னுடைய சிறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்...

 

நட்பால் தான் நான் சிறைக்குச் சென்றேன். அறியாத வயதில் பசங்களோடு சேர்ந்து செய்த தவறு அது. கொலை செய்ய வேண்டும் என்கிற நோக்கில் செய்யவில்லை. அந்த சம்பவத்தில் நாங்கள் ஆறு பேர் ஈடுபட்டோம். சில நாட்கள் கழித்து நானாகவே சென்று காவல் நிலையத்தில் ஆஜரானேன். மரண வாக்குமூலம் கிடைத்ததால் எங்களுக்கு 90 நாட்களில் பெயிலும் கிடைக்கவில்லை. என்னுடைய திருமணம் காதல் திருமணம். பெண்ணின் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்தது. இதனால் பெண்ணின் ஊருக்கு பல நாட்கள் நான் செல்லாமலேயே இருந்தேன்.

 

ஒருநாள் நாங்கள் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த சிலர் எங்களோடு இருந்த ஒருவரைத் தாக்கினர். அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். நண்பர்களோடு சென்ற நானும் அந்தக் கொலையில் ஈடுபட்டேன். அவரை வெட்டிவிட்டு அனைவரும் தப்பினோம். இந்த வழக்கில் சம்பந்தப்படாதவர்களும் பாதிக்கப்பட்டனர். அந்த வழக்கில் சிறை சென்று வந்த பிறகு எந்தத் தவறான காரியங்களிலும் நான் ஈடுபடவில்லை. ஆனால் காவல்துறையினர் அடிக்கடி என்னிடம் வந்து விசாரிப்பார்கள்.

 

சிறை என்பது கொடுமையான ஒரு இடம்தான். உள்ளே செல்லும்போது அட்மிஷன் அடி என்று ஒன்று இருக்கும். குடும்பத்தை நினைத்து தான் நான் அதிகம் பயந்தேன். நான் சிறை சென்றபோது என்னுடைய பெண் குழந்தை பயங்கரமாக அழுதாள். அது என்னை மிகவும் பாதித்தது. நான்கு வருடங்கள் கழித்து பரோலில் நான் வந்தேன். அப்போதுதான் வாழ்க்கை குறித்த புரிதல் எனக்கு வந்தது. என்னுடைய இரண்டாவது பெண் குழந்தை ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போது நான் சிறை சென்றதால் நான் திரும்பி வரும்போது அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.

 

நான் சிறையில் இருந்த சமயத்தில் என்னுடைய மனைவி வீட்டு வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார். என்னுடைய குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளித்தவர் என் மனைவி தான். சிறையில் இருக்கும்போது நமக்கு பிரச்சனையும் வரும். சிலர் நமக்கு ஆறுதலாகவும் இருப்பார்கள்.