Skip to main content

'கை'விட்ட தந்தை... நம்பிக்'கை' வைத்த தாய்... ஓங்கியது யார் கை? திருப்பி அடி #2   

Published on 15/04/2019 | Edited on 22/04/2019

நடுராத்திரியில் அடியாட்களோடு வந்து எங்களைக் கடத்திச் செல்ல முயன்ற என் அப்பா, என்னை என்னவெல்லாம் பேசினார் என்று சொன்னேன் அல்லவா? அதற்கு என் தாய் என்ன பதிலளித்தார் தெரியுமா?

 

inspiring ilango with students



என் தாய் தன்னம்பிக்கையில் சளைத்தவர் அல்ல. எனவே, “அப்படியொரு நிலைமை எங்களுக்கு வராது, என் மகன் எங்களை நன்றாகப் பார்த்துக்கொள்வான், அப்படி நாங்கள் நன்றாக இல்லையென்றாலும் உன்னிடம் வரமாட்டோம்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். இப்போது நான் இருக்கும் நிலையின் எந்த சின்ன அறிகுறியும் தெரியாத ஆளாகத்தான் அப்போது நான் இருந்தேன். ஆனாலும் என் தாய் என்னை நம்பினார், நம்பி அப்படி சொன்னார். அதற்குக் காரணம் இருந்தது.

மனைவி எப்பவும் தனக்கு ஏவலாளியாகவும், சேவையாளராகவும்தான் இருக்கவேண்டுமே தவிர சுயமாக சிந்தித்து இயங்கக் கூடாது என்ற மனுநீதி அடிப்படையால் ஆட்கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான ஆண்களில் என் அப்பாவும் ஒருவர். இந்த இடத்தில் என் தாய் பற்றி மகிழ்ச்சியோடு சில தகவல்களைச் சொல்லவேண்டும். கல்விக்கூடங்களுக்குச் சென்று கற்கவில்லையென்றாலும் கூட என்னை வளர்க்கும் முறையில் அவர் காட்டிய அக்கறையும், ஈடுபாடும் அவர் அறியாமலே அவரது வாழ்க்கைமுறை மூலமாகவும், அறிந்து சொல்லிக்கொடுத்தவை மூலமாகவும் நான் ஒரு பார்வையற்ற சிறுவனாக இருந்தபோதும் சுயமாக வாழவேண்டும், அடுத்தவரின் பச்சாதாபத்தில் பரிதாபத்தில் வாழக்கூடாது என்பனவெல்லாம் வலியுறுத்தப்படும். என் அம்மா எளிதில் நட்பு பாராட்டி பழகிவிடக்கூடியவர். இண்டர்பர்ஸ்னல் ஸ்கில் அவரிடம் இயல்பாக இருந்தது. சவுதி அரேபியாவிலிருந்து என் தாய் மாமா வெங்கடேசன் தார்மீக அடிப்படையில் என் படிப்புக்கு உதவி செய்தனர். நானும் கல்லூரி படிக்கும்போதே ஆங்கிலம் சொல்லிக்கொடுத்து பணம் சம்பாதித்து என் தாயின் சுமையைக் குறைத்தேன். இப்படி காலங்கள் உருண்டோடின.

என்னுடைய வெளிநாட்டுப் பயணங்களுக்காகவும், கல்வியில் தொடர்ச்சியாக நான் பெற்றுவந்த முதலிடத்திற்காகவும், 3500 பாடல்களை மனப்பாடமாக பாடிய சாதனைக்காகவும், சென்னை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியில் அமர்ந்து துறைத் தலைவர் மற்றும் துணைவேந்தர் அறிவுறுத்தல்படி நானே எஃபெக்டிவ் கம்யூனிகேஷன் இன் இங்க்லீஷ் என்ற பாடத்தைத் தொடங்கியதற்காகவும், ஒரு வாழ்க்கைத் திறன் பயிற்சியாளனாக எனக்கு கிடைத்த வெற்றிகளுக்காகவும், அடிக்கடி தொலைக்காட்சிகளும், அச்சு ஊடகங்களும் என்னை கவனித்தார்கள். என்னைப் பற்றி எழுதினார்கள், என் நேர்காணலை  ஒளிபரப்பினார்கள். எனக்கு பல விருதுகளும் அந்தக் காலகட்டத்தில் வந்துகொண்டிருந்தது. இதையெல்லாம் கேள்விப்பட்ட என் தந்தை என்னைப் பற்றிய செய்திகள் வரும்போதெல்லாம் அதைக் கத்தரித்து ஃப்ரேம் செய்து வைத்துக்கொள்கிற அளவுக்கு அவருக்கு பெருமையாக இருந்திருக்கிறது. பல உறவினர்கள் என் தந்தை எங்களுடன் சேர விரும்புகிறார் என்ற தூது செய்தியுடன் வந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் நான் சொல்லுவேன் “அவர் திரும்ப வருவதும் வராததும் என் விருப்பம் இல்லை, அது என் தாயின் விருப்பம்” என்றேன். ஆனால், என் தாய் கடைசிவரையில் அதற்கு சம்மதிக்கவே இல்லை. காலங்கள் உருண்டோடின, அவரின் பல முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு அவர் இறந்துவிடுகிறார்.

 

inspiring ilango in sea



அவரின் இறுதி நிகழ்ச்சிக்கு செல்லவேண்டும் என தனிப்பட்ட விருப்பம் இருந்தாலும் என் தாய் அதை விரும்பவில்லை. அதற்கு உட்பட்டு நான் போகாமல் இருந்துவிட்டேன். 90களில் பார்த்த என் தந்தையை இறுதிவரை பார்க்காமலே அவர் இறந்துவிட்டார். 90களில் என்னைப் பார்த்த என் தந்தை அதன்பிறகு பார்க்காமலே இறந்துவிட்டார். ஒவ்வொருமுறையும் என் தந்தை எனது வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியடைகிறார், எங்களுடன் சேரவிரும்புகிறார் என்று சொல்லும்போதெல்லாம் அது என் தாயின் காதுகளில் வெற்றிச் செய்தியாகவே விழுந்துகொண்டிருந்தது. வாழும் காலத்திலேயே தன் கணவனை வெற்றிக்கொண்ட பெருமையில்தான் அவரும் மே 27, 2013 ஆம் ஆண்டு இறந்துபோனார். வாழ்க்கை நமக்கு பல்வேறுவிதங்களில் பாடங்களை கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறது. கணவன் மனைவி, அப்பா மகன், அக்காள் தம்பி, அண்ணன் தங்கை, நண்பர்கள் இப்படி எந்த நெருக்கமான உறவுகளாக இருப்பவரும் கூட பின்பு வேறுவிதமாக விரும்பத்தகாத வகையில் மாறலாம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், முன்னெடுத்த காலை பின் வைக்காமல் நடைபோட்டுக்கொண்டே இருந்தால் நாம் செல்லும் பாதையை காலமே அமைத்துக்கொடுக்கும், இயற்கை அதற்கு துணை நிற்கும்.

ஒரு செவ்வாய் கிழமை ஜூலை 13, 2010-ல் புனித தோம்னிக் பள்ளியில் நடந்த மாணவர்களுக்கான பதவியேற்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்றேன். சென்னை கிண்டியில் ஏறத்தாழ 3000 மாணவிகள் படிக்கக் கூடிய அந்த மேல்நிலைப் பள்ளியில் 'தலைவர்கள் பிறக்கிறார்களா அல்லது உருவாகிறார்களா?' என்ற தலைப்பில் பேசிவிட்டு மேடையில் இருந்து இறங்கியதுதான் தாமதம், ஆயிரக்கணக்கான மாணவிகள் என்னிடம் கேள்விகள் கேட்பதற்கும், கை குலுக்கவும் என்னை சூழ்ந்து கொண்டனர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி அவர்களிடமிருந்து மீட்கும் தோரணையில் ஆசிரியர்கள் என்னை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். நான் ஓட்டமும் நடையுமாக எனக்காக காத்திருந்த ஆட்டோவில் ஏறினேன். ஓட்டுனர் ஆட்டோவை எடுக்கிற நேரத்தில் ஒரு கை என்னைத் தொட்டது.

அந்தக் கை என் முன் ஒரு பெரிய சவாலை எளிதாக வைத்துச் சென்ற கை...  

என்னுடன் பேச...  inspiringilango@gmail.com

முந்தைய பகுதி :

நடுராத்திரியில் வந்து மகனையும் மகளையும் கடத்த முயன்ற அப்பா! -  இன்ஸ்பையரிங் இளங்கோ எழுதும் திருப்பி அடி #1 

அடுத்த பகுதி :

என்னை உறங்கவிடாமல் ஒலித்துக்கொண்டே இருந்த ஒரு கேள்வி... திருப்பி அடி #3  

 

 

 

 

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்

Next Story

குடும்பம் கைவிட்டதும் கலையை கையில் எடுத்தேன் - டிரெண்டிங் நடன பிரபலம் ஷர்மிளா உற்சாகம்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 LETS DANCE SHARMILA interview

 

சினிமா பாடல்களை அப்படியே ரீ-கிரியேசன் செய்து இணையத்தில் உலாவவிட்டு பிரபலமடைந்து வருகிறார்கள் இன்றைய இளைய தலைமுறையினர்; பலர் இதனை கொண்டாட்டமாகவே செய்தாலும் சிலருக்கோ அது தனது வலியினை மறைப்பதற்கான ஒன்றாக உள்ளதாகவும் இருக்கிறது என்கின்றனர் சிலர். அந்த வகையில் தன்னுடைய அனுபவங்கள் பலவற்றையும் நம்முடைய நேர்காணலின் மூலம் டான்ஸர் ஷர்மிளா நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 

ஏதாவது ஒன்று சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் சிறுவயதிலிருந்தே எனக்கு இருந்தது. சென்னை வந்த பிறகு ஆக்டிங், டான்ஸ் என்று பலவற்றிலும் ஈடுபட்டு வருகிறேன். பள்ளிக்காலங்களில் பல்வேறு போட்டிகளில் நான் கலந்துகொள்வேன். இதுதான் செய்வேன் என்று எப்போதும் என்னை நான் சுருக்கிக்கொண்டது கிடையாது. அனைத்து விதமான கலைகளிலும் என்னால் என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியும். சமூக வலைதளங்களால் இன்று வாய்ப்புகள் கிடைப்பது எளிமையாகி இருக்கிறது. 

 

அம்மா, அப்பாவுக்கு இடையில் பிரச்சனைகள் இருந்ததால் சிறுவயது முதல் நான் ஹாஸ்டலில் இருந்தேன். தலைமையாசிரியரின் உதவியால் தான் என்னுடைய பள்ளிப்படிப்பை நான் முடித்தேன். அடுத்தகட்ட படிப்புக்கு கோர்ட் உத்தரவு மூலம் என்னுடைய தந்தை மாதாமாதம் கொடுத்த ஜீவனாம்ச பணம் உதவியது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வீடியோக்கள் செய்ய ஆரம்பித்து சென்னை வந்தேன். எனக்கு கிடைத்த ஆயுதம் போன் தான். இரவெல்லாம் கண்விழித்து வீடியோக்கள் செய்வேன். 

 

 

நம்பிக்கையும் உழைப்பும் தான் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயங்கள். கொரோனா காலத்தில் என்னுடைய திறமைகளைப் பார்த்து எனக்குக் கிடைத்த வாய்ப்பு தான் லெட்ஸ் டான்ஸ் 360. ஒவ்வொருவருக்கும் என்னுடைய ஒவ்வொரு பர்ஃபாமன்ஸ் பிடிக்கும். சிலருக்கு என்னுடைய நடிப்பும் சிலருக்கு என்னுடைய நடனமும் பிடிக்கும் என்று சொல்வார்கள். என்னுடைய டீமிடமிருந்து எனக்கு எப்போதும் நல்ல சப்போர்ட் கிடைக்கும். என்னை அவர்கள் நன்றாக ஊக்குவிப்பார்கள். 

 

பறை இசை வாசிக்கும்போது எமோஷனலாக இருக்கும். நெகட்டிவ் கமெண்டுகள் வரும்போது அதைப் புறந்தள்ள வேண்டும் என்று தோன்றும். ஆனால் அது கடினம். பள்ளியில் இருக்கும்போது மற்ற மாணவர்கள் அவர்களுடைய பெற்றோருடன் பேசுவதைப் பார்க்கும்போது எனக்கு ஏக்கமாக இருக்கும். ஆனால், எனக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தால் தான் என்னால் நிறைய சாதிக்க முடிகிறது என்று நினைக்கிறேன். எனக்கு இரண்டு நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் எனக்கு எப்போதும் ஆதரவு. என்னுடைய வீடியோக்கள் பற்றி என் பெற்றோரிடம் சிலர் கூறியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு யூடியூப் குறித்து தெரியாது. 

 

என்னுடைய வீடியோக்களைப் பார்த்துவிட்டு என்னுடைய ஆசிரியர்கள் பாராட்டுவது பெருமையாக இருக்கும். என்னுடைய வீடியோக்களுக்காக அதிகமான முன்தயாரிப்புகளில் நான் எப்போதும் ஈடுபடுவேன். யூடியூபில் சில்வர் பட்டன் கிடைத்த நாள் மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. என்னைப் போன்று இந்தத் துறைக்குள் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் பாலா சாரின் 'இவன்தான் பாலா' என்கிற புத்தகத்தைப் படிக்க வேண்டும்.