Skip to main content

பாதுகாப்பு அதிகாரியின் மர்ம மரணம்; கழிவுநீர் பாதையில் ஆணுறைகள் - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 21

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
 rajkumar-solla-marantha-kathai-21

இன்சூரன்ஸ் பெறுவதற்காக நடத்தப்படும் பல்வேறு மோசடி, திருட்டு குறித்து தொடர்ச்சியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் நம்மிடையே பகிர்ந்து வருகிறார். பாதுகாப்பு துறையைச் சேர்ந்த அதிகாரியின் வழக்கு பற்றி நம்மிடையே விவரிக்கிறார்.

பாதுகாப்பு துறையில் உயர்ந்த பதவியில் இருக்கும் அந்த அதிகாரி பணி மாற்றம் ஆகி சென்னைக்கு வருகிறார். நல்ல நேர்மையான அதிகாரி, வேலையில் அதிகமான பதக்கங்கள் பெற்று அமைதியான குடும்பமாக மனைவி மற்றும் பள்ளி சென்று கொண்டிருக்கும் ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். அவரது வேலை ரிஸ்க்கான வகையைச் சேர்ந்தது. அவருக்கு மருத்துவ இன்சூரன்ஸ் என்பது இந்திய அரசே பெற்றுத் தந்துவிடும். 

ஒருநாள் இரவு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அந்த அதிகாரி திடீரென்று மர்மமான முறையில் இறந்துவிட்டதாக அவர் மனைவியிடம் இருந்தே அழைப்பு வந்தது. அவரது துறை சார்ந்த காவலர்களும் வந்தனர். நாங்களும் சென்றோம். தடயவியல் நிபுணர்களும் வந்தனர். அவர்கள் வந்ததும் வழக்கம் போல முதல் கேள்வியாக, இன்சூரன்ஸ் இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டனர். அந்த இறந்த அதிகாரி எல்.ஐ.சி மற்றும் பொதுவான ஒரு இன்சூரன்ஸ் கம்பெனி என்று இரண்டு இன்சூரன்ஸ் எடுத்திருந்தார். மேற்கொண்டு தடயவியல் நிபுணர்கள் தங்கள் பணியை செய்யும்போது, ஒரு நிபுணர் அந்த சடலத்தின் வலது காலில் ஒரு மஞ்சள் நிறத்தில் ஏதோ ஒன்று படிந்திருந்ததை பார்த்துச் சொன்னார்.

பின்னர், இவருக்கு யாரோ இந்த விபரீத கெமிக்கலை அறியாமல் கொடுத்து, மாரடைப்பு வரவைத்திருக்க வேண்டும் என்று சொன்னவுடன், அந்த இடத்தின் சூழலே பரபரப்பாக மாறுகிறது. இயற்கை மரணம் அல்லாது கொலை என்று கேஸ் ஆகிறது. ஒரு பிரபலமான தேர்ந்த வட மாநில அசிஸ்டண்ட் கமிஷ்னர் வருகிறார். இவர் குடும்பத்திடம் தகவல்களை வாங்கி விசாரணை நடைபெறுகிறது. மோப்ப நாய் கொண்டு அந்த பழைய பங்களாவை நோட்டம் விடப்பட்டது. அந்த நாயும் விசித்திரமாக ஒரு மர்ம நபரைக் கண்டு குரைத்துவிட்டு நேராகப் படி ஏறி கழிவு நீர் செல்லும் பாதையிடம் வந்து நின்று குரைத்தது. பாரென்சிக் துறையும், ஆராய்ந்ததில் அந்த கழிவு நீர் செல்லும் பாதையை அடைத்து நிறைய ஆணுறைகள் கிடைத்தன. ஆதாரங்களை எடுத்துக் கொண்டனர்.

அடுத்தகட்டமாக மூன்று நாள் கழித்து அதிகாரியின் விந்துகளும், ஆதாரத்தில் கிடைத்த விந்துகளும் பொருந்தவில்லை என்று பாரென்சிக் துறை தகவலை கொடுத்தது. உடனடியாக சந்தேகத்திற்கு உரிய மரணமாக மாற்றப்பட்டு, விசாரணையை ஆரம்பித்தோம். அக்கம்பக்கத்தில் விசாரித்தோம். அவர்கள் கூறியதை வைத்து அந்த அதிகாரியின் துறையில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட நபரின் மேல் சந்தேகம் வந்தது. உரிய முறைகளில் அவரது கால்ஸ், டவர் லொகேஷன் வைத்தும், அந்த நபருக்கும் குடும்பம் ஒன்று இருக்க, அவர்களை கூப்பிட்டு விசாரித்ததும், அவரும் உண்மையை ஒத்துக்கொண்டார். அதாவது அவருக்கும் அந்த அதிகாரியின் மனைவிக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. அதன் விளைவாக எதிர்பாராமல் இந்த அதிகாரியை கொலை செய்யும்  அளவுக்கு சென்றிருக்கிறது. இருவரையும் கைது செய்து அவர் மனைவியிடம் விசாரித்ததில் அவரிடம் பதிலன்றி மௌனமான திகைப்பு மட்டுமே கிடைத்தது.

பாலிசிக்கு உண்டான பணத்திற்கு, அவரது பெற்றோர் ஒரு கேஸ் போட்டார்கள். அவரது சட்ட வாரிசுக்கே அந்த பணத்தை கொடுக்குமாறு எங்களுக்கு உத்தரவு வந்ததின் பேரில், அப்படியே அதை செய்தோம். எனக்கு மிகவும் பாதித்த விஷயம் என்னவென்றால், ஒரு பாதுகாப்பு துறைக்கே பாதுகாப்பு இல்லை என்பதுதான். இந்த வழக்கிற்கு பின்னர் இந்த சம்பவத்தை எங்கள் நிறுவனத்தில் ஒரு கேஸ் ஸ்டெடியாகவே வைத்திருக்கிறோம்.

Next Story

ஆறு கோடி இன்சூரன்ஸ்; அதிகாரிகளை ஏமாற்ற நடந்த நாடகம் - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 28

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
rajkumar-solla-marantha-kathai-28

நண்பர்கள் மூவர் இணைந்து போலி லைப் இன்சூரன்ஸ் வாங்கி மாட்டிக்கொண்ட சம்பவம் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் விவரிக்கிறார் 

கடந்த வருடம் பேப்பரில் வந்த பிரபலமான வழக்கு இது. அந்த நபர் அமெரிக்காவில் நல்ல பெரிய பதவியில் வேலை செய்து கொண்டிருந்தவர். கொரோனா காலத்தில் வேலை இழந்து ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்தும் தோல்வி அடைந்து ஊருக்கு திரும்புகிறார்.

வந்தவர் ஆறு  கோடி ரூபாய்க்கு லைஃப் இன்சூரன்ஸ் வாங்குகிறார். மூன்று நண்பர்களுடன்  சேர்ந்து திட்டம் செய்கின்றனர். அதாவது அவரைப் போலவே உள்ள போலி நபர் ஒருவரை கொலை செய்து இறந்ததாக லைஃப் இன்சூரன்ஸ் வாங்க திட்டமிடுகின்றனர். அதற்காகவே போலி நபரை கிராமத்திற்கு அழைத்துச் சென்று பாம்பாட்டியை வைத்து பாம்பை கடிக்க வைத்து அந்த நபரை கொன்று விடுகின்றனர்.  

இன்னொரு கூடுதல் போலி நபர் இறந்த உடலை வாங்குகிறார். இறந்த நபரை வைத்து இன்சூரன்ஸ் க்ளைம் வாங்க வருகிறார்கள்.  எங்கள் கம்பெனி இன்வெஸ்டிகேசனை ஆரம்பிக்கிறது. எதற்காக அமெரிக்காவிலிருந்து இங்கே வந்தார், ஏன் பாலிசி எடுத்த மூன்று மாதத்தில் இறந்தார் என்று விசாரித்தோம். பாலிசி எடுத்த உண்மையான அமெரிக்கா நபர் காணவும் இல்லை. அந்த உடலை வாங்கியவர் தன்னை நாமினியில் போட்டிருக்கிறார். 

ஆனால் எல்லாமே முரண்பாடாக இருந்ததில் எங்களுக்கு சந்தேகம் வந்தது. பின்னர் விசாரித்ததில் இறந்தது நிஜ நபரும் இல்லை, பாடியை வாங்கியவரும் போலி. உண்மையான நபர் ஏற்கெனவே இறந்தும் வேறு இருக்கிறார் என்று தெரியவந்தது. மூன்று போலிகள் சேர்ந்து இந்த போலி இன்சூரன்ஸ் நாடகத்தை நடத்தி இருக்கின்றனர். உண்மையைக் கண்டுபிடித்த போலீஸ், விசாரணைக்கு உட்படுத்தி எல்லாரையும் கைது செய்து ரிமாண்டும் செய்து விட்டனர். இந்த வழக்கு இன்னும் ட்ரயலில் தான் இருக்கிறது. 

Next Story

கொள்ளை அடித்து உதவி; மும்பையை கலக்கிய பெண் தாதா - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 27

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
rajkumar-solla-marantha-kathai-27

இன்சூரன்ஸ் பெறுவதற்காக நடத்தப்படும் பல்வேறு மோசடி, திருட்டு குறித்து நம்மிடையே தொடர்ச்சியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கொள்ளை அடித்து உதவும் ஒரு சம்பவம் குறித்து விவரிக்கிறார்.

மும்பையில் (money in Transit) என்று சொல்லப்படும் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட வழக்கு இது.  75 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு நிறுவனம் சம்பளம் கொடுக்க எடுத்து செல்கிறது. அந்த வண்டியை மறித்து ஒரு மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து மும்பை மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்திருந்தும், யார் குற்றவாளிகள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

பிரதீப் என்ற நபர் மீது சந்தேகம் எழுந்து விசாரிக்கின்றனர். விசாரணையில், கிரிஷ்மா என்ற பெண்ணின் அறிவுரையின் பேரில் இந்த கொள்ளைகள் நடந்ததாக தெரியவந்தது. கிரிஷ்மா காட்கோபரில் வசித்து வந்தார். அவருக்கு பல வாகனங்கள் மற்றும் பங்களாக்கள் இருந்தன. அந்த பகுதியில் பெரிய ஆளாக மக்கள் பலருக்கு உதவி செய்பவராக இருக்கிறார். இதனால் மும்பை போலீசார் கிரிஷ்மாவாக இருக்கும் என்று ஆரம்பத்தில் நம்பவில்லை. ஆனால், விசாரணையில், மர்ம கும்பல் நடத்திய அனைத்து கொள்ளைகளுக்கும் கிரிஷ்மாதான் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. இவர், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 50 சதவீதத்தை உதவி செய்வதற்கு பயன்படுத்தினார். யாரை வைத்து கொள்ளையடித்தார்களோ அந்த கும்பலை 40 நாட்கள் கிரிஷ்மா வெளியில் விடாமல் தன் உடனேயே வைத்திருப்பார். இப்படி வித்தியாசமான முறையில் வழிப்பறி செய்து வந்திருக்கிறார். இந்த வழக்கு 'மனி இன் டிரான்சிட்' என்ற இன்சூரன்ஸ் பெயரில் மும்பையில் இருந்து எங்களுக்கு வந்தது.

இதே போல மும்பையில் 54 வயதான பேபி என்பவர் போதைப்பொருள் கடத்தலில் சிறந்து விளங்கினார். காவல்துறை அதிகாரியை திருமணம் செய்து கொண்டிருந்ததால் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் அவருக்கு சில சலுகைகள் கிடைத்தது. இவர் குறிப்பாக மெட்ரோபில் என்ற போதைப்பொருள் தயாரிப்பில் பிரபலமானவர். நார்கோட்டிக் சட்டம் வந்த பிறகு, போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபடுவது கடினம் ஆகி இவர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு, மும்பை, காஜா, தூத்துக்குடி, தேனி, கம்பம், வடசென்னை போன்ற இடங்களில் அதிகமாக போதைப்பொருள் விற்பனை நடக்கின்றன. 

போதைப்பொருள் தொழில் எளிமையாக பணம் வந்து சேரக்கூடியது. எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டியதில்லை என்று தாதாக்கள், ரவுடிகள் இதை செய்கிறார்கள். ஆனால் இதை செய்து மாட்டிக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.