Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #30

Published on 02/06/2022 | Edited on 02/06/2022

 

maayapura part 30

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ரமா  அம்மா கடிதம் கொடுத்து யாரையோ வரச் சொல்லி இருந்தார்கள். இதை அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த சங்கவி, மனதில் அந்த நபர் யாராக இருக்கும் என்ற சிந்தனையுடன் ரமா அம்மாவிற்கு சாப்பாடு கொடுத்துவிட்டு மல்லிகாவிற்கு கொடுப்பதற்காக அறைக்கு வந்தாள். அறையின் உள்ளே நுழையும்போதே யாரோ அழுதுகொண்டு விசும்புவது போல் கேட்டது. மல்லிகா முகம் தெரியாமல் திரும்பி படுத்து இருந்தாள். சங்கவி மல்லிகாவின் முகத்தை பார்த்தாள். அவள் அழுது கொண்டிருப்பது கண்ணாடி போல் தெளிவாக தெரிந்தது. இதைப்பார்த்த சங்கவி அதிர்ந்தாள்.

"என்னக்கா  ஆச்சு" என்று கவலையும் அதிர்ச்சியும் கலந்த குரலில் கேட்டாள். தன் பணிவிடையில் ஏதாவது தவறு இருக்குமோ என்ற பயம் உள்ளுக்குள் சங்கவிக்கு இருந்தது.

" ஒண்ணுமில்லை சங்கவி" என்று சொல்லிக்கொண்டே கண்களைத் துடைத்தாள் மல்லிகா.

"அக்கா உடம்பு மறுபடியும் பிரச்சனை பண்ணுதா? மனசு சரியில்லையா? எதுவாக இருந்தாலும் சொல்லுக்கா, எமனிடம் போராடி அந்த சிசுவை மீட்டு இருக்கோம். நீங்க இது மாதிரி இருந்தா நாம எல்லாரும் பட்ட கஷ்டம் எல்லாம் வீணாகி விடும்" என்று மிகவும் உருக்கமாக சொன்னாள் சங்கவி.

" அதெல்லாம் எதுவும் இல்லை சங்கவி, அம்மாவின் நினைவு வந்துவிட்டது. இந்த நேரம் பார்த்தா அவர்கள் காசி யாத்திரை செல்ல வேண்டும். அம்மா வீட்டு  சொந்த பந்தமே இல்லாமல் அனாதையாக இருப்பதை போன்ற உணர்வு சங்கவி. மனசு கஷ்டமாக இருக்கு" என்று கவலையுடன் சொன்னாள் மல்லிகா.

"அக்கா நான் உங்களை அப்படி கூப்பிடுறது வெறும் வார்த்தை இல்லை  என் மனசுல இருந்து கூப்பிடறேங்கா. நான் இருக்கேன்.  உங்க தங்கச்சி இருக்கேன். உங்களுக்கு துணையா இப்ப நீங்க எந்த கவலையும் இல்லாமல் இருக்கணும் சிரிங்க" என்று மல்லிகாவுக்கு ஆறுதல் சொன்னாள் சங்கவி. 

 

ஒரு பெண்ணுக்கு அம்மா என்ற உறவின் தேவை நொடிக்கு நொடி இருந்தாலும், அம்மாவின் கதகதப்பான அணைப்பு இரண்டு நேரங்களில் அவசியம் தேவைப்படுகிறது. பெண் தன்னுள் பெண்மையை உணரும் பூப்பெய்திய அந்த தருணம், தன் உடம்பில் நிகழும் ரசாயன மாற்றமும் மனதில் நிகழும் உணர்வு மாற்றங்களும்  அழுகை, வெட்கம் போன்ற உணர்வின் கலவையாக உருக்கிய தங்கமாய் தகதகக்கும் அந்த நேரத்தில் தன் நிலையை விளக்குவதற்கு ஒவ்வொரு பெண்ணுக்கும் அம்மா என்ற உறவை ஈடுசெய்ய வேறு ஒரு உறவு இந்த உலகில் இல்லை.

 

பூத்த மரம் காய்க்க ஆரம்பிக்கும் போது அந்த பிரசவ வேதனையிலும் அரவணைக்க அம்மாவின் கரம் தான் தேவைப்படுகிறது. அந்த வேதனையில் தான், பெண் உணர்வால் நான் விதையாக விழும் நேரம் என் அம்மா இப்படித்தான் வேரோடு சாய்ந்து இருப்பாள். என் உடல் வேதனையும் மன வேதனையும் அவளும் பட்டு இருப்பாள் என்று உணரும்போது மகளின் பிடி இறுக்கமாகும். மனம் ஆயிரம் வேதனைகளில் தத்தளிக்கும் என்றெல்லாம் அம்மா என்னும் உறவின் புனிதத்தை நினைத்துக் கொண்டிருந்தாள் சங்கவி.

 

சாப்பிட்டு முடித்து சங்கவியைப் பார்த்து லேசாக சிரித்தாள்  மல்லிகா. "ஏன்  கா சிரிக்கிறீங்க" என்று குழம்பியவாறு  கேட்டாள் சங்கவி.

" சங்கவிக்கு  எப்படி இவ்வளவு தைரியம் வந்தது" என்று நினைத்தேன் சிரிப்பு வந்தது என்றாள் மல்லிகா.

"என்ன சொல்றீங்க புரியலையே?" என்று உதட்டைப் பிதுக்கினாள் சங்கவி. "திருமணமான புதிதில் உங்க ஊரில் இருந்து ஒரு அக்கா நம்ம வீட்டிற்கு வந்தாங்க. அவர்கள் போகும் வரை நீ எப்படி பயந்து நடுங்கினாய்? இப்ப ரமா அம்மாவை வீட்டிற்கு அழைச்சிட்டு போகும் அளவுக்கு உனக்கு தைரியம் வந்திடுச்சி. அதை நினைத்து சிரித்தேன்"என்றாள் மல்லிகா.

"அக்கா அது என் மகிழ்வுக்கான நிகழ்வு அதனால் யாராவது ஏதாவது சொல்லிடுவாங்களோன்னு பயந்தேன். இது வேறு ஒரு மனுஷிக்கான  நிம்மதி. இதனால் எந்த பிரச்சனை வந்தாலும் சந்திக்கலாம் என்ற மனநிலை வந்துடுச்சுக்கா. உலகின் மிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் தனிமனித மகிழ்வாக ஏற்பட்டது இல்லையே? எப்பவும் நமக்காக பிறரிடம் கையேந்தும் போது மனசு கூனிக்குறுகி சுக்கு நூறாகும். இதே பிறருக்காக கையேந்தும் போது அதில் ஒரு ஆத்ம திருப்தி இருக்கும் என்று  சங்கவி பேசிக்கொண்டிருக்கும்போதே மல்லிகா வாயை திறந்து காற்றில் ரயில் விட்டாள்.

 

சரிங்க அக்கா உங்களுக்கு தூக்கம் வந்துடுச்சி நீங்க தூங்குங்க என்று மௌனமானாள் சங்கவி. ரமா அம்மா கடிதம் கொடுத்து வரச் சொன்ன நபர் அம்மாவை பார்க்க வந்தார். அவர்  கையில் கட்டுகட்டாக என்னமோ காகிதங்கள் இருந்தன.  அவர் வந்ததும் தன்னுடன் பேசிக் கொண்டிருந்த சங்கவியை ஒரு பார்வை பார்த்தார் ரமா. அந்த பார்வையின் அர்த்தம் புரிந்துகொண்டு சங்கவி அங்கிருந்து நகர்ந்தாள். ரமா பேங்கில் தன் பேரில் இருக்கும் பணத்தை எடுத்து வருவதற்கு காசோலையில் கையெழுத்து போட்டு கொடுத்தாள். நாளைக்கு தனக்கு ஏதாவது நேர்ந்தால் வங்கியில் இருக்கும் பணத்தை எடுக்க வாரிசு சான்றிதழ் தேவைப்படும். அதனால் எல்லா பணத்தையும் வங்கியில் இருந்து எடுத்துக் கொண்டாள்.

"என் பேரில் இருக்கும் வீட்டை மாற்றுவது பற்றி மகனிடம் பேச வேண்டும்" என்று சொன்னாள் ரமா.

"அம்மா நீங்க மாற்றாவிட்டாலும் வேறு வாரிசு இல்லாததால் மகனிடம் தான் சென்று சேரும்" என்று ரமாவை  பார்க்க வந்த வக்கீல் சொன்னார்.

"இல்லை வீட்டை பற்றி நான் வேறு யோசனை வைத்துள்ளேன். அது விவரமாக என்று மகனுடன் ட்ரங்காலில் பேசி விடுகிறேன். இன்னும் இரண்டு நாளில் இங்கிருந்து நான் கிளம்பி விடுவேன். அதற்குள் சில ஏற்பாடுகளை செய்தாக வேண்டும் என்று சிந்தனையுடன் கூறினாள்.

"சரிம்மா நாளை பணத்துடன் ரிஜிஸ்டர் ஆபீஸரையும்  அழைத்துக்கொண்டு  வருகிறேன்" என்று கூறிவிட்டு கிளம்பினார்.

 

ரமாவிற்கு ஏனோ மனம் பாரமாக இருந்தது.  "எங்கே வாழ்க்கை தொடங்கும். அது எங்கே எவ்விதம் முடியும். இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்." கண்ணதாசனை போல ஒரு சிறந்த தீர்க்கதரிசி யாரும் இருக்க முடியாது என்று நினைத்துக்கொண்டார் ரமா. நினைவுகளின் கோலங்கள் ரமாவின் கன்னங்களில் வழிந்தது.

 

மருத்துவர் மல்லிகாவை  சோதித்து பார்த்துவிட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறினார். மல்லிகாவிற்கு சில அறிவுரைகள் வழங்கினார். எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ன சாப்பிட வேண்டும் என்பதை எல்லாம் மல்லிகாவும் சங்கவியும் கவனமாக கேட்டுக் கொண்டார்கள். மருத்துவமனை போனிலிருந்து ஊரிலிருக்கும் தலைவர் வீட்டுக்கு ஃபோன் போட்டு அசோக்கை வரவழைத்து நாளைக்கு எங்களை வந்து அழைத்துச் செல்லுங்கள் என்று தகவல் சொன்னாள் சங்கவி. பிறகு ரமா அம்மாவைக்  கவனிக்கும் மருத்துவரிடம் பேசி அம்மாவை உடன் அழைத்துச் செல்லும் வேலைகளில் தீவிரமாக செயல்பட்டாள் சங்கவி. ரமா அம்மாவிற்கு தேவையான மாத்திரை மருந்துகளை வாங்கிக் கொண்டாள். அது கிராமம் என்பதால் மருந்துகள் கிடைக்காது. எனவே கவனமுடன் இங்கிருந்து அனைத்தையும் வாங்கி வைத்துக் கொண்டாள் சங்கவி. அனைத்திற்கும் பணம் ரமா அம்மா தான் கொடுத்தார். அசோக் அம்பாசிடர் காரை நண்பனிடம் கடன் வாங்கி ஓட்டி வந்திருந்தான். அசோக்கிடம் ரமா அம்மாவை உடன் அழைத்துச் செல்வதைப் பற்றி கூறினாள் சங்கவி. 

"சாரிங்க  நீங்க அருகில் இல்லாததால்  என்னால் உங்களிடம் அனுமதி கேட்க முடியவில்லை. மன்னிச்சிடுங்க நாட்டுக்காக தன் குடும்பத்தை இழந்து அனாதையாக நிற்கும் அம்மாவிற்கு உதவ வேண்டும் என்ற உணர்ச்சி. பணம் காசு யார் வேண்டுமானாலும் தருவாங்க. குடும்பம் என்ற உணர்வையும் உறவையும் நாம தரலாம்னு நெனச்சேன். அதுவும் தன் வாழ்வின் விளிம்பில் இருப்பவருக்கு நாம தரும் சிறிய சந்தோஷம் இது" என்று உணர்ச்சி மேலிட பேசினாள் சங்கவி.

"சங்கவி நீ சொல்றதெல்லாம் எனக்கு புரியுது. உன்னை போலத்தான் எனக்கும் உணர்வுகள் இருக்கு. நாம அழைச்சிட்டு போனதும் குடும்பத்தார் அவர்களை எதுவும் சொல்லாமல் கவனமாக பார்த்துக் கொள்ள  வேண்டியது நம் கடமை. நமக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் பரவாயில்லை அவர்களுக்கு எதுவும் தெரியக்கூடாது. அவர்களை சந்தோஷமாக வச்சிருக்க வேணும்னு நினைக்கிறேன். ஆனால் சங்கவி அதில் ஒரு சிக்கல் இருக்கு" என்று சங்கவியை அதிரவைத்தான் அசோக்.

 

(சிறகுகள் படபடக்கும்)

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #34

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

maayapura part 34

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ரமாவின் வரவிற்கு பிறகு சிறு மாற்றங்களுடன் காலநதி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. மல்லிகாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் மருத்துவமனையில் வந்து பார்த்து விட்டுப் போன மல்லிகாவின் அண்ணன்களும் அம்மா அப்பாவுடன் மீண்டும் இப்போது தான் இங்கு வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் காசிக்கு சென்றிருந்த அப்பா அம்மா இப்போதுதான் திரும்பி இருந்தார்கள்.

 

மல்லிகாவின் அம்மா வந்து இறங்கியதுமே புராணத்தை ஆரம்பித்துவிட்டார். 

"மானூத்து தோப்புல பாடித்திரிந்த குயிலு, வண்ணாத்தி பாறையில் ஆடி திரிந்த மயிலு, வாடி வதங்கி கட்டில்ல கிடக்கறா.. அதை பார்க்கையில வடக்கால போன பாவி மக  நான் கங்கையிலேயே போயிருக்கக் கூடாதா" என்று ஒப்பாரி  வைத்துக் கொண்டிருந்தார்.

"என்னங்க பண்றது நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. அதுவரைக்கும் அரும்பாடுபட்டு ரெண்டு உயிரையும் காப்பாற்றி ஆச்சு"ன்னு தங்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். "நீங்க என்ன பண்ணுவீங்க சொந்தம் ஆச்சே உங்க சின்ன மருமகளை விட்டுக் கொடுப்பீங்களான்னு" குத்தி காட்டினார் மல்லிகாவின் அம்மா ரஞ்சிதம்.

" அம்மா நான் வேணும்னே செய்யலை தெரியாம நடந்திருச்சு மன்னிச்சுடுங்க" என்று சங்கவி கெஞ்சும் குரலில் சொன்னாள்.

"உன் பசப்பு வார்த்தை எல்லாம் மத்தவங்க நம்பலாம். நான் நம்ப மாட்டேன் நீ முதல்ல உண்டாகலைன்னு தண்ணி ஊத்தி விழ வச்சிருக்க" என்று கோபமாக பேசினார் ரஞ்சிதம்.

"த.. ஏதோ பொண்ணை பெத்தவளுக்கு ஆதங்கம் இருக்கும்னு சும்மா இருந்தா நீ என்னடான்னா அதிகமா பேசுற. இது உன் வீட்ல நடந்திருந்தா உன் மருமக பொறாமையில் செய்தாள்னு நீ சொல்வாயா. போகாத ஊர் எல்லாம் போயி கண்ணுறக்கம் இல்லாம காலிலெல்லாம் விழுந்து உன் மவளைக் காப்பாற்றினால் வசவு பேசுற இனிமே இப்படி பேசினா அவ்வளவுதான்" என்று கோபமாக கத்தினார் தனம்மா பாட்டி.

"ஏதோ மகளை பெற்றவங்க ஆதங்கத்தில் நாலு வார்த்தை பேசி விட்டேன். அதுக்குப் போயி இப்படி கோபிக்கறீங்க" என்று குழைந்தாள் ரஞ்சிதம்.

" அம்மா புரியாம பேசாத.. சங்கவி இல்லன்னா நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். அவளை திட்டாத மா" என்று சங்கவிக்கு பரிந்து பேசினார் மல்லிகா.

 

சங்கவி எதையும் காதில் வாங்காமல் விருந்தாளிக்கு சமைப்பதற்காக கோழி அடித்து குழம்பு வைக்க சென்றாள்.

 

மணியை அழைத்துக்கொண்டு மச்சான்கள் வயக்காட்டு பக்கம் போனார்கள்.

"மாப்ள  எவ்வளவு நாளைக்குதான் வாய்க்கா வரப்புன்னு மல்லுகட்றது உங்களுக்குன்னு தொழில் வேணாமா?எப்ப தான் நீங்க கெத்தா கார்ல வந்து இறங்கறது. நாங்க கார் கதவை திறந்து விடுவது" என்று மணிக்கு புகழ் போதையை கோப்பையில் ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

"அட போங்க மச்சான் விவசாயத்திற்கு முதல் போட முடியாம மூச்சு முட்டுது. இதுல எங்க இருந்து தொழிலுக்கு முதல் போடறது" என்று ஆதங்கப்பட்டான் மணி.

 

ஒரு மனிதனுக்கு புகழை போல போதை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை. அதில் மிதக்கும் வரையில் அவன் வாழ்வு தப்பியது. மூழ்க ஆரம்பித்தால் அவனும் சேர்ந்து மூழ்கி விட வேண்டியதுதான். லேசாக துளிர்விட்டு இருந்த தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள் மல்லிகாவின் அண்ணன்கள். "மாப்பிள்ளை எங்க ஊர்ல டூரிங் டாக்கீஸ் லீசுக்கு வருது அதை எடுத்து நடத்துவோம். ஜம்முனு தியேட்டர் ஓனர் மாதிரி காரில் வந்து இறங்கி கல்லாப்பெட்டியில பணத்தை எண்ணிக்கிட்டு இரு. நாங்க உனக்கு உழைச்சி தர்ரோம் மாப்பிள்ளை" என்று ரீல் விட்டுக் கொண்டிருந்தனர் மல்லிகாவின் அண்ணன்கள்.

"அப்படியா சொல்றீங்க கேட்க நல்லாத்தான் இருக்கு பணத்துக்கு எங்கே போறதுன்னு" புலம்பினான் மணி.

"அது உங்க பாடு மாப்பிள்ளை. 2 நாளில் 10 ஆயிரம் ரூபாய் எடுத்துகிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க நாம லீசுக்கு வாங்கி முடிச்சிடலாம் " என்று மணியின்  நாக்கில் தேனை தடவினார்கள். "மல்லிகா இன்னும் எத்தனை நாளைக்கு தான் கூட்டுக்குடும்பத்தில் இருக்க போற? புள்ள பொறக்க போறான். உன் புருஷன் உழைச்சி எல்லாரும் அனுபவிக்கிறார்கள்" என்று நெருப்பில்லாமல் பத்த வைத்துக் கொண்டிருந்தார் ரஞ்சிதம்.

 

ஆண்களுக்கு புகழ் போதை என்றால் பெண்களுக்கு எது சுதந்திரம் என்பது தெரியாத போதை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் அடிமை தனியாக இருந்தால் சுதந்திரம் என்னும் தவறான எண்ணம் பெண்கள் மனதில் வேரூன்றி உள்ளது. தன் மகன் தன்னுடன் இருக்க வேண்டும் மருமகள் தனிக்குடித்தனம் போக கூடாது. மகள் மட்டும் தனிக்குடித்தனம் வந்துவிடவேண்டும். இந்த அம்மாக்களின் லாஜிக் என்னவென்று புரியவில்லை. ரஞ்சிதம் தன் மகளுக்கு அப்படித்தான் உரு ஏற்றி கொண்டிருந்தாள். பாவம் மல்லிகா சின்ன பெண் தானே வாழ்வில் நல்லது கெட்டது அறியாதவள். அம்மா சொல்லை வேதவாக்காக நினைத்துக் கொண்டு மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தாள். மணிக்கு மச்சான்கள் வேப்பிலை அடித்தார்கள். மல்லிகாவிற்கு அவள் அம்மா பாடம் படித்தாள். 

"வெடக்கோழி விருந்தை விரலிடுக்கில் கூட விடாமல் வழித்து சாப்பிட்டுவிட்டு மணிக்கும் மல்லிகாவிற்கும் மூளைச்சலவை செய்து விட்டு கிளம்பினார்கள் மல்லிகாவின் குடும்பத்தினர். 

 

சினிமாவில் வில்லன்  பாம் வைப்பதுபோல வைத்து விட்டு சென்றுள்ளனர். எப்போது வெடிக்கும் என்று தான் தெரியவில்லை. மணி ரெண்டு நாளா மந்திரிச்சி விட்ட கோழி மாதிரியே சுற்றிக் கொண்டிருந்தான். பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன செய்வது என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் இருந்தது. ரமா அம்மாவை கேட்கலாம் என்று நினைத்தால் அவர்கள் நிச்சயம் வீட்டில் சொல்லி விடுவார் என பயந்து அந்த திட்டத்தை கைவிட்டான். பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த மணி ஒரு முடிவுக்கு வந்தவனாக வீட்டிலிருக்கும் அலமாரியைத் திறந்து ஏதோ எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

 

(சிறகுகள் படபடக்கும்)

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #33

Published on 19/06/2022 | Edited on 19/06/2022

 

maayapura part 33

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

"என் வாழ்க்கைப் பயணத்தில் கடைசி ஸ்டேஷனை எதிர்பார்த்துப் பயணிக்கிறேன். எப்பொழுது வரும் என்று தான் தெரியவில்லை" என்று ரமா சொல்லி விட்டு  வாசலைத் தாண்டும்போது "த..நில்லு" என்று ஒரு குரல் அதட்டலாக வந்தது.

"என்ன தனம்மா" என்று சொல்லிக்கொண்டே அவரைப் பார்த்தார் ரமா,

"எனக்கு மருவாதையா பேசத் தெரியாது மனசில் இருக்குறதை பட்டு பட்டுன்னு கேட்டு விடுவேன். ஆனால் பாசக்காரி பிடிச்சிருந்தா பாசம் காட்டுவேன். வேஷம் போடத் தெரியாது. ரமா எங்க அன்புள்ள என்ன குறையைக் கண்ட இப்படிக் கிளம்பி போற" என்று உரிமையாகக் கேட்டாள் தனம்மா. "என்னால எந்த பயனும் இல்லை நான் அடுத்தவங்களுக்கு ஏன் பாரமா இருக்கணும். அதான் கிளம்பி போறேன்னு" சோகமாகச் சொன்னார் ரமா.

"பொம்பளை சுமக்கிற கருவை பாரமா நினைத்திருந்தால் இந்த உலகம் உருவாகி இருக்குமா? நம்ம கூட வாழ உறவை பாரமா நினைச்சா உறவுகள் எல்லாம் சுமக்க முடியாத சுமையாகத்  தான் இருக்கும். நல்லதோ கெட்டதோ அது தான் நான் வாங்கி வந்த வரம் என்று நினைத்துப் பார்த்தால் வாழ்க்கை சுகமாக இருக்கும் இவ்வளவு பேரைச் சுமக்கிற இந்த ஆல மரக் கிளைக்கு ஒரு கிளியைச் சுமப்பதா பாரம்" என்று தத்துவமாகப் பேசினார் தனம்மா. குடும்பத்தினர் அனைவரும் வாயடைத்து நின்றனர். தனம்மா பாட்டிக்கு அன்பாகவும் பேசத் தெரியுமா? என்று மல்லிகாவும் சங்கவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"இல்ல தனம்மா  நீங்க என்னதான் சொன்னாலும் அது சரிவராது. புது கிராமம் பழக்கமில்லாத மக்கள். என் கடைசிக் காலம் வரை இங்கேயே என்பது எனக்குத் தயக்கமாக இருக்கு" என்று சொன்னார் ரமா. "வெள்ளைக்காரன் அடி எடுத்து வைக்கும் போது இப்படி நினைக்கலையே மொழி தெரியாத வேற நாட்டுக்காரன் பல வருஷமா நம்பள அதிகாரம் பண்ணி வந்திருக்கான். அன்பால நம்மாள ஒன்றா வாழ முடியாதா?" என்று தனம்மா உதாரணம் எல்லாம் சொல்லிப் பேசியதைக் கேட்டதும் அனைவரும் எலி ஹெலிகாப்டர் ஓட்டுவதைப் பார்ப்பது போல அதிசயத்து நின்றனர். தனம்மாவின் வேறு பரிமாணங்கள் மின்ன ஆரம்பித்தது. அனைவர் மனதிலும் எண்ணக் குவியல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதைக் கொத்திக் கிளற மனித கோழிகளுக்குத் தான் வாய்ப்பு இல்லை.

"எங்கம்மா சொல்வதிலும் நியாயம் இருக்கு. அடம்பிடிக்காம எங்களுடனே தங்கிடுங்க என்று தங்கமும் சொன்னாள்.

"சரி பக்கத்தில் எதற்கு இந்த குடிசையைக்  கட்ட சொன்னே என்று தனம்மா சரியான பாயிண்டை பிடித்தார்கள்.

"என் காலத்துக்குப் பிறகு நான் படித்த புத்தகங்களை எல்லாம் சின்னதா நூலகம் மாதிரி வைக்கலாம்னு சொன்னேன். அசோக் தான் நான் இப்பவே கட்றேன். நீங்க பார்த்து மனம் மகிழ்ச்சியாய் இருங்கள். இங்கு உங்கள் கண்கள் தேடிய உலகம் மக்களின் விடியலாய் இருக்கும் என்ற நினைவோடு இருப்பீங்கன்னு சொல்லிட்டு கட்டினான்" என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார் ரமா.  

"அம்மா உயிரற்ற எழுத்துகளுக்கு உணர்வுகளால் உயிர் கொடுப்பதைவிட, உயிரான அறிவு எங்களுக்கு வழிகாட்டுவது எவ்வளவு சிறப்பாக இருக்கும். நீங்கள் இந்த குடிலிலேயே தங்குங்கம்மா" என்று சற்று கெஞ்சலுடன் சொன்னாள் சங்கவி. 

"நீங்க சுதந்திரமா அந்த குடிசையிலே இருங்க. உங்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம்" என்று மணியும் அவன் பங்குக்கு வாய்திறந்து சொன்னான்.

 

அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் அன்பானவர்கள் தான் பல உணர்வுகளின் கலவை சேரும்போது அன்பு வெளிப்படையாகக் கண்ணில் தெரிவதில்லை. பிறர் காட்டும் அன்பு சில நேரங்களில் நம்மை நாமாக வாழ விடுவதில்லை. பிறரின் முடிவுகளுக்கு நம்மை வாழவைக்கிறது. அதுபோலத்தான் ரமாவும் அந்த குடிசையில் தங்குவது என்று முடிவு செய்தாள்.

"நான் அன்புக்காக ஏங்குகிறவள். உங்க அன்பும் எனக்கு தேவைப்படுகிறது. நான் உங்களுடனேயே தங்கிக் கொள்கிறேன்" என்று ரமா முகத்தில் பொலிவுடன் சொன்னார்.

 

ரமாவின் வாழ்க்கை பயணம் வேறு ஒரு உலகில் தொடங்கியது போலப் புதிதாக மகிழ்வுடன் தொடங்கியது. கும்மட்டி அடுப்பு என்று சொல்லக்கூடிய அடுப்பில் அவளுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டாள். என்ன பெரிய உணவு வெண்கல குண்டில் சிறிது சாப்பாட்டைப் பொங்க வைத்து உண்பாள். ரமாவின் ஆகச்சிறந்த உணவே இதுதான். ஊருக்குத் தகவல் சொல்லி ரமாவின் வக்கீல் வந்தார். அவர் வரும்போது சூட்கேஸ் நிறைய ரமா வாசித்த புத்தகங்களை எடுத்து வந்திருந்தார். அதில் தி.ஜா, ஜெயகாந்தன், அம்பை, கி.ரா.,கண்ணதாசன், பாரதிதாசன், பெரியார், மார்க்ஸ், லெனின் இப்படிப் பல எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பார்க்கும்போது மெலிதாக புன்னகைத்தார்.

"ஏன் சிரிக்கிறீங்க? என்று வக்கீல் புரியாமல் கேட்டார். "இவ்வளவு நாட்கள் இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் உடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். இந்த கிராமத்திற்கு வந்த பிறகு இவர்களோடு வாழ்வது போன்ற உணர்வு இருக்குங்க சார்" என்று தன் அனுபவத்தைச் சொன்னார். நான் சொன்னது போல உயில் ரெடி பண்ணி விடுங்க அதை ரிஜிஸ்டர் பண்ணி என்னிடம் கொடுத்து விடுங்கள்" என்று சொன்னார் ரமா.சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பினார் வக்கீல்.

 

ரமாவின் குடிலுக்கு எதிரே மிகப்பெரிய இடம் இருந்தது. அதன் பிறகு ஓணான் கொடியால் வேலி போடப்பட்டது. மாலை நேரங்களில்  ஈசி சேர் போட்டு அங்கே அமர்ந்திருப்பார் வயல் வேலைகளை முடித்துவிட்டுப் போகும் பெண்கள் ஆரம்பத்தில் ரமாவை ஏதோ சந்திரமண்டலத்திலிருந்து வந்த பெண் போல அதிசயமாகப் பார்த்தனர்.

 

ரமாவே அவர்களை அழைத்துப் பேசுவார். பிறகு பெண்கள் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அவர்களின் குடும்ப கஷ்டங்களை எல்லாம் ரமாவிடம் சொல்ல ஆரம்பித்தார்கள். ரமாவும் அவர்களுக்கு எழுத்து கற்பித்து தன்னம்பிக்கை எண்ணங்களைத் தூண்டினார். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயம் என்ற ஒன்று ரொம்ப முக்கியம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுடர் விளக்கைத் தூண்டும் போது அந்த தூண்டு குச்சி மீதும் விரல் மீதும் அனல் படத்தான் செய்யும் தூண்டுகோல் அதைப் பொறுத்துக் கொண்டால் தான் விளக்கு பிரகாசமாக எரியும். அது போலப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் போது பாதிக்கப்பட்ட ஆண்கள் ரமாவிடம் சண்டைக்கு வந்தார்கள். அப்போதெல்லாம் அசோக் தான் அரணாக இருந்து ரமாவைப் பாதுகாத்தான். தங்கள் பெயரை எழுத  கற்றுக் கொண்ட பெண்கள் வேலி நாச்சியார் மாதிரி இடுப்பில் அரிவாளைச் சொருகிக் கொண்டு களையெடுப்பதற்குக் கம்பீரமாக நடந்தார்கள். அவர்கள் வீட்டு அடுக்களை சுவரெல்லாம் கரியால் இவர்கள் பெயர்கள் ஓவியமாக வரையப்பட்டது. பொருளாதார உதவி தேவைப்படும் பெண்களுக்கு இடது கைக்குத் தெரியாமல் உதவி செய்தார் ரமா. தனம்மா பாட்டியின் பாக்கு உரலும் சுண்ணாம்பால் பெயர் பொறிக்கப்பட்டு தனம்மாவின் கல்வெட்டானது.

 

பெண்களிடம் பேசப் பேச இப்படி ஒரு அறிவு உலகம் இருக்கா என்று வியந்தனர். உங்கள் உழைப்பு உங்களுக்கான தேவைகளுக்கு எல்லாம் பிறரிடம் கையேந்தக் கூடாது. கொஞ்சம் சேமிப்பு உங்களிடம் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். ரமாவிற்கு அந்த கிராமம் மிகவும் பிடித்துவிட்டது. கிராம மக்கள் ரமாவிடம் மிகவும் அன்பாக இருந்தனர். 

 

காலநதி எந்த சலனமும் இல்லாமல் சென்றால் எப்படி? நதியில் ஒரு முதலை அடித்து வந்தது.

 

( சிறகுகள் படபடக்கும்)