Skip to main content

இறந்த மனைவியின் நினைவு; மீட்டெடுத்த கண்ணாடி ஓவியம் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 22

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
jay-zen-manangal-vs-manithargal- 22

மனைவி இறந்த பிறகும், உடன் வாழ்ந்த நினைவுகளை விடமுடியாமல்  சுமந்து இருக்கிறவர்களுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

தன் நண்பருக்கு கவுன்சிலிங் தேவைப்படுகிறது என்று ஒருவர் அனுகினார். தன் மனைவியுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்த தன் நண்பர் அவர் இறந்த பிறகு தற்போது முற்றிலும் வேறொரு ஆளாக இருப்பதாக கூறி எவ்வாறு உங்களிடம் அழைத்து வருவது  என்று கேட்டார். பொதுவாக எல்லாரும் செய்யும் தவறு, பாதிக்கப்பட்டவரிடமே சென்று கவுன்சிலிங் வா என்று அழைப்பது. அது அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே என்னை சந்தித்தவரிடம், உங்கள் நண்பரிடம், நீ வாழ்வது சரிதான், இன்றும் நன்றாக அதை சிறக்கவைக்க என் நண்பர் ஒருவரிடம் சாதாரணமாக பேசலாமா? என்று சொல்லி கூட்டி வாருங்கள் என்றேன். அந்த நண்பரும் என்னைப் பார்க்க வந்தார்.

அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவரிடம் வேறு எந்த ஒரு புகாரும் இல்லை. சந்தோஷமாக தான் இருக்கிறார். இவருக்கு இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை, இறந்த தன் மனைவியுடன் வாழும்போது கேட்ட பாடல்களை கேட்டாலோ, சேர்ந்து போன இடங்களுக்கு சென்றாலோ, பழைய நினைவுகள் வந்து நாள் முழுதும் மனது வலிப்பதாக கூறுகிறார். எனவே எங்கு செல்வதையும் முற்றிலும் தவிர்த்து வருவதாக சொல்கிறார். இறந்த என் மனைவியை பற்றி நீண்ட மாதங்கள் கழித்து யாரேனும் வந்து பேசினால், அவர்கள் போன பிறகு அவ்வளவு மனவலியை கொடுக்கிறது என்றார்.

நான் அவரிடம், நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறீர்கள். உங்கள் மனைவியிடம் பிடித்த விஷயங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்டேன். அவர் முகத்தில் சட்டென்று மகிழ்ச்சி. தன் மனைவி தத்ரூபமாக கண்ணாடி ஓவியங்கள் வரைவார் என்று, என்னைக் கூட அப்படி ஒரு ஓவியம் வரைந்து திருமணத்திற்கு பின்பு பரிசளித்தார் என்றும் சொன்னார். நீங்கள் ஏன் உங்கள் மனைவியைப் போன்று நிறைய கண்ணாடி ஓவியங்கள் வரையும் திறமையானவர்கள் பயிலும் பயிற்சிப் பள்ளிக்குச் சென்று பார்க்கக் கூடாது என்று கேட்டேன். உங்கள் மனைவியின் திறமைகளை ரசித்துச் சொல்கிறீர்கள், ஒருவேளை யாருக்கேனும் அந்த திறமையை வெளிப்படுத்த உதவி தேவைப்பட்டு, நீங்கள் அதற்கு உதவினால் அப்போது எப்படி உணர்வீர்கள் என்று கேட்டேன். தயக்கத்துடன், இப்போது தெரியவில்லை, ஆனால் சந்தோஷமாகத் தான் இருக்கும் என்று சொல்லிவிட்டு, போய்ப் பார்க்கிறேன் என்றார்.

சொன்னது போல, மும்பை ரூரலில், ஒரு பயிற்சி பள்ளிக்குச் சென்று, அங்கு தன் மனைவி போல பல திறமையானவர்கள் வரைந்திருக்கும் கண்ணாடி ஓவியங்களைப் பார்க்கிறார். அங்கிருக்கும் மேலாளரிடமும் பேசுகிறார். அவர் மூலமாக, கல் உடைக்கும் வேலையில் இருக்கும் ஒரு சிறிய பெண், இங்கு அனைவரையும் விட சிறப்பாக ஓவியம் வரைவாள், ஆனால் அவளால் இங்கு வர அவளுக்கு பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை என்று கூறுவதைக் கேட்கிறார். என்னிடம் வந்து இதைப் பகிர்ந்து, ஏனோ மனதிற்கு கேட்டதிலிருந்து உறுத்தலாக இருப்பதாகச் சொன்னார். நான் அந்த பெண்ணைச் சென்று சந்தித்து  திறமை இருக்கும் பட்சத்தில், பொருளாதாரத்திற்கு முடிந்ததை செய்யமுடியுமா என்று பார்க்கலாமே என்று ஒரு பரிந்துரை மட்டும் செய்தேன்.

மூன்று மாதம் கழித்து சாதாரணமாக பேசும்போது, அந்த பெண்ணிற்கு மாதம் ஏழாயிரம் கிடைத்தால் அந்த வேலையே விட்டுவிட போதுமானதாக இருந்தது என்று அறிந்து, அவர் மாதம் பத்தாயிரம் குடுத்து உதவி இருக்கிறார். இப்போது அந்த பெண் அந்த பள்ளியில் முழு நேரம் செலவிட்டு நன்கு படித்து முடித்து ஒரு ஓவியம் வரைந்தால் அந்த பெண்ணிற்கு சுமார் பதினைந்தாயிரம் கிடைக்கும் அளவிற்கு வந்து நல்ல நிலையில் இருக்கிறார் என்றும், அந்த பெண்ணிற்கும் இவரிடம் நல்ல அழகிய பாச உறவாக மாறி இருக்கிறது என்றும் கூறினார். மேலும் ஒரு வருடம் கழித்து சந்திக்கையில், என் மனைவி போன பிறகு நாங்கள் மூவர் என்று நினைத்தேன். இப்போது அந்த பெண்ணையும் சேர்த்து எனக்கு மூன்று மகள்களாக மீண்டும் நால்வர் என்று ஆகிவிட்டோம் என்றார்.

அவரிடம், இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்றும், முதலில் என்னை வந்து பார்த்தபோதும், இப்போதும் என்ன வித்தியாசம் உணருகிறீர்கள் என்று கேட்டேன். அவர் சற்று யோசித்துச் சொன்னார், நான் முதலில் வந்தபோது நான் இழந்தது மட்டுமே என் கண்ணுக்கு தெரிந்தது. இப்போது என் மனைவியின் இழந்த வலி இன்னும் இருக்கிறது என்றாலும், அவரின் திறமையை நான் இழக்கவில்லை, இந்த பெண்ணை சந்தித்த பின், அதை வேறொரு பக்கமாக தொடங்கி வைத்து விட்டேன் என்றார். அந்த பள்ளி மேலாளரிடமும் இதே போல வேறு ஏதேனும் மாணவருக்கு நிதி உதவி தேவைப்பட்டால், தன்னை அழைக்குமாறு கூறி இருக்கிறேன் என்று மன நிறைவோடு சொன்னார். 

Next Story

மொத்த குடும்பமும் ஒருவர் மேல் சொன்ன விசித்திர குற்றச்சாட்டு - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 29

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
jay zen manangal vs manithargal 29

தான் கொடுத்த கவுன்சிலிங் பற்றி ’மனங்களும் மனிதர்களும்’ என்னும் தொடரின் வழியே ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

பேசாமலே அமைதியாக இருப்பதே குறையாக ஒருவர் மீது பழி சுமத்த, அதனால் பாதிக்கப்பட்டு என்னை ஒருவர் பார்க்க வந்தார். இதுபோன்று தேவைக்கு மட்டுமே பேசி கூச்ச இயல்புடைய, தனிமையை நாடுகிற ஒருவர், உள்முகச் சிந்தனையாளராக இருப்பர். அவரை ஆங்கிலத்தில் இண்ட்ரோவேர்ட் என்று சொல்வர். இவர்களை பெரும்பாலும் பேசாமல் ஒதுங்கி போகும் வகை என்றே தவறாக நினைப்பார்கள். ஆனால், தேவையின்றி எதுக்கு பேசவேண்டும் என்று அமைதியாக இருக்கும் குணமுடையவர். தான், பேசாமல் இருப்பதால் யாருக்கும் எந்த வித குறையும் இல்லை எனும்போது அவரை எப்படியாவது பேசவைக்க வேண்டும் என்று முயல்வது சரி ஆகாது.

என்னைப் பார்க்க வந்தவருக்கு இதே விஷயம் தான். அவர் முதலில் வந்து பேச்சை ஆரம்பிக்கவே பத்து நிமிடம் எடுத்துக்கொண்டார். அமைதியாக மென்மையாகத்தான் அவருடைய நடவடிக்கை இருந்தது. மெல்ல ஆரம்பித்தார். அவர் எந்த வித கெட்ட பழக்கம் இல்லாத, நண்பர்கள் என்று சுற்றுவது என தேவையில்லாத விஷயங்கள் என்று இல்லாமல், தான் உண்டு தன் குடும்பம் உண்டு என இருக்கும் மிக சிறந்த நபராக இருக்கிறார். தன் மனைவி நூறு தடவை சிரித்தால் கூட  மூன்று தடவை சிரிக்கும் அளவான மனிதர். அவருக்கு திருமணம் ஆன வரைக்கும் எந்த விதப் பிரச்னையும் இல்லை. என் மகன் இப்படி தான் அமைதியான டைப் என்று அவரது பெற்றோரும், என் அண்ணன் இப்படி தான் என்று தங்கையும் பேசவில்லையா சரி போ என்று இயல்பாக அவரது குணத்தை ஏற்று கொண்டு விட்டார்கள். ஆனால், எப்போது திருமணம் ஆகி மனைவி, மாமனார், மாமியார் என்று குடும்பம் ஆனதும், அவர்கள் மாப்பிள்ளை பேசமாட்டாரா என்று கேட்க கேட்க இவர்களது பெற்றோருக்கும் இவருக்கும் அது பிரச்னையாக ஆகி, இவரை பேசு பேசு என்று தொந்தரவு செய்கின்றனர். இவ்வளவு நாள் பேசாத நான் திடீரென்று எப்படி பேசமுடியும். இப்போ நான் என்ன சார் செய்யணும் என்றார்.

அவர் பேசும்போது கூட தனக்கு மணிரத்னம் படங்கள் தான் பிடிக்கும் என்றார். தேவைக்கு மட்டும் அழகாக ரெண்டு வார்த்தைகள். காதலித்தால் கூட பிடிச்சிருக்கு என்று சிறிய சிறிய டயலாக். அது போதுமே பிடித்திருக்கிறது என்று சொல்வதற்கு. அதை விட்டுவிட்டு உன்னை ஏன் பிடித்திருக்கிறது தெரியுமா என்று, அதற்கு ஏன் சார் ஒருமணி நேரம் பேசவேண்டும் என்றார். இவரிடம் பேசுவதை விட இவரது குடும்பத்திடம் தான் பேசவேண்டும் என்று அவர்கள் அனைவரையும் வரசொல்லி பேசினேன். முதலில் எல்லோரும் இவர் பேசமாட்டேங்கிறார் என்று தான் ஒவ்வொருவரும் வேறு வேறு விதமாக சொன்னார்கள். அவர்களிடம் கவுன்சிலிங் ஆரம்பிப்பதற்கு முன்னர் அவர்களிடம் ஒரு கதையைச் சொன்னேன். ஒரு காட்டில் சிங்கம் இருக்கிறது. மனிதர்கள் நாம் அது இருக்கும் இடத்திற்கு சென்று அதன் வழியில் குறுக்கே வரும்போது தனது உணவு என நினைத்து கொன்று தின்று விடுகிறது. சிங்கத்தை மக்கள் பாதுகாப்புக்காக வனத்துறை அதிகாரிகள் பிடிக்க வருகின்றனர். ஆனால், போன இடத்தில ஒரு அதிகாரியை  காணவில்லை. சிங்கத்தையும் காணவில்லை. அவரைத் தேடி சென்றால், ஒரு மரத்தின் கீழே கரடி முன்பு நின்று கையில் கம்பு வைத்து சிங்கம் என்று ஒத்துக்கொள் என்று அடித்து கொண்டிருக்கிறார். மற்ற அதிகாரிகள் என்னவென்று விசாரிக்க, சிங்கம் கிடைக்கவில்லையே, இருப்பதை சிங்கம் ஆக்கி விடுவோம் என்றான்.  இந்தக் கதையை சொல்லி, இவர் பேசமாட்டார், என்பதைத் தள்ளிவைத்து விட்டு இவரிடம் வேற என்ன பிரச்சனை இருக்கிறது என்றேன்.

மாமனார், மாமியார் என்று அனைவரும் ஒரு குறையும் இல்லை என்று சொல்லிவிட்டனர். அடுத்து எதிர்பாராமல் அவரை பற்றி குறையாக சொல்லிக்கொண்டிருந்த, திட்டிக்கொண்டிருந்த தங்கையே, சரி அண்ணனிடம் வேற குறை இல்லை நல்லவர் என்று எல்லாருமே சொல்கிறீர்களே, பின் பேசவில்லை என்று ஏன் குறையாக அதை மட்டும் சொல்ரீங்க என்றார். அண்ணன் பக்கமும் நியாயம் இருப்பதை உணர்ந்து கொள்கிறார். அதுவரை எல்லாரும் பேசிக்கொண்டிருந்தார்கள் அதன் பின் மாமனார், மாமியார் மனைவி மட்டுமே அடுத்தடுத்து பேசுகிறார்கள். நான் அவரது மனைவியிடம் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் கூட பணி புரியும் ஆண்களிடம் ஏதேனும் பிடிக்காத விஷயம் இருக்கிறதா என்று கேட்டேன், யோசித்து தேவையில்லாமல் பேசுவார்கள், எல்லை தாண்டி பேசுவார்கள், பெண்களிடம் வாய்ப்பு அமையுமா என்ற பாணியில் பேசுவார்கள் என்றார். சரி இந்தக் குணமெல்லாம் உங்கள் கணவரிடம் இருக்கிறதா என்றேன். அவசரமாக கண்டிப்பாக இல்லை அவர் நல்லவர் என்றார்.

எதெல்லாம் பேச்சு இல்லை என்று புரியவைத்தேன். அவர் என்னிடம், சரி சார். தேவையில்லாததற்கு பேசவேண்டாம். ஆனால் நல்ல விஷயத்திற்கு  பேசலாமே, ஒரு நாள் கிழமையில் கூட தீபாவளி வாழ்த்து சொன்னால் அரைமணி நேரம் கழித்து தலையை மட்டும் ஆட்டிவிட்டு போவார் என்றார். அதுவரை அமைதியாக இருந்தவர் , என்ன சார் நல்ல விஷயம். புதிதாக ஏதும் நடந்து இருக்கிறதா. அவரவர் வாழ்க்கையில் படிப்பு, தொழில் என்று ஏதேனும் புதிதாக நடந்து இருக்கிறதா. குடும்பம் என்றால் தேவையில்லாதது தான் பேசவேண்டும் என்று இருக்கிறதா சார்?. பொதுவான பேச்சுவார்த்தைக்குத்தான் இந்தக் குடும்பத்தில் 15 பேர் இருக்கிறார்களே. நான் எதுக்கு சார் என்றார். யாரவது வீட்டிற்கு வந்தால் வாங்க பெரியப்பா வாங்க மாமா என்று அத்தனைப் பேரும் அத்தனை முறை கூப்பிடுவதன் அவசியம் என்ன சார். வாங்க என்று ஒரு முறை சொன்னால் வந்து  விட போகிறார். அவர் இளம் வயதுக்காரர் என்றாலும், அவர் பேச்சில் அத்தனை முதிர்ச்சி. ஒவ்வொரு வருடமும் தீபாவளி வரத்தான் செய்கிறது, எல்லாரும் ஒரே மாதிரி சந்தித்து, சாப்பிட்டு, அந்த நேரம் மட்டும் எதையாவது அவர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள். அதே போல் நானும் பேசவில்லை என்று மட்டும் எல்லாரும் என்னை சொல்கிறார்கள். இந்தக் கடைசி ஐந்து வருடம் என்ன புதிதாக செய்து இருக்கிறீர்கள்? என்ன நடந்து இருக்கிறது என்றார். நானும் எதுவும் இந்த ஐந்து வருடத்தில் செய்யவில்லை. பின்னே எதுக்கு நான் பேசவேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடம் பேசி இருப்பார். அதையே அவர் இவ்வளவு பேசுகிறாரே என்று  எல்லாரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

எதையாவது ஒன்றை சாதிக்க வேண்டும் சார், அதை குடும்பத்துடன் பகிர வேண்டும். நான் பேசவேண்டும் என்றால்  நான் எதையாவது செய்ய வேண்டும், அதற்கு பின் தான் என்னால் பேசமுடியும். எனக்கும் நிறைய பேசவேண்டும் என்று ஆசையாகத்தான் இருக்கிறது என்று கண் கலங்குகிறார். அதைப் பார்த்து எல்லாருக்கும் புரியவில்லை. நாம் வாழ்க்கையில் சும்மா இருப்பதால் தான் சார் பேசி கொண்டு இருக்கிறோம். அதைக் குடும்பம் என்றோ அன்பு என்றோ சொல்லி கொள்கிறோம். அவர் கடைசியாக தன் நண்பர்களுடன் கிரிக்கெட் போட்டி ஒன்றில் வெற்றி பெற்ற அன்று, ஒரு பதினைந்து நிமிடம் பேசியதாகவும், அதுதான் கடைசியாக தான் பேசிய சிறந்த பேச்சு. அதுபோல எதையாவது செய்துவிட்டுத்தான் பேசவேண்டும் என்றார். சும்மா எதையாவது பேசிக்கொண்டு இருப்பதற்கு பெயர் அன்பா சார் என்றார். இதுவரை நான் இந்தக் கேள்வியை கேட்கவில்லை இப்போது இவர்களிடம் கேட்கிறேன் சார். இவ்வளவு பேசுகிறார்களே யாரவது அவர்களிடம் இருக்கும் பிரச்னையை பேசுவார்களா என்றதும் எல்லாரிடத்திலும் அப்படி ஒரு அமைதி. மற்றவர் பிரச்சனை, ஊர் பிரச்சனை முதல் சினிமாவில் நடிகர்கள் வரை பேசுவார்கள். அதில் நானும் கலந்து கொள்ளவில்லை என்று வேறு என் மீது வருத்தம் கொள்வார்கள் என்றார்.

குடும்பத்தில் நிறைய பேர் இந்தத் தவறு செய்கின்றனர். ஒருவர் மட்டும் பேசாமல் இருந்தால் அவரை எப்படியாவது பேச வைத்து விடவேண்டும் என்று படாத பாடுபடுவர். அது தவறு. அவரால் அந்தக் குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய நல்ல விஷயங்கள்  கிடைக்கும் வரைக்கும், அவரால் வேறு தொந்தரவு இல்லை எனும்போது அவரை மாற்றவேண்டிய அவசியம் இல்லை. இங்கு அனைவரும் கவுன்சிலிங் முடியும்போது அவரது மாமனார் தான் முதன் முதலில் புரிந்து எழுந்து நின்று பேசினார். நான் இப்போது தான் புரிந்து கொண்டேன். நம்மைப் போல இல்லமால் மாப்பிளை எதையாவது சாதித்து விட்டு பேசவேண்டும் என்று நினைக்கிறார். அதுவரை நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். நீங்கள் பேசும்போது அன்று தான் சாதித்து இருக்கிறீர்கள் என்று நாங்கள் எடுத்து கொள்கிறோம் என்று பேசிவிட்டு நகர்ந்து விட்டார். எல்லாரும் அதையே ஒத்து போயினர்.

எப்படி நாம் பேசுவதற்கு நியாயம் இருக்கிறதோ அதே போல பேசாமல் இருப்பதற்கும் அவர்களிடத்தில்  ஒரு நியாயம் இருக்கும். அதை மதிப்பதில் தவறு ஒன்றும் இல்லையே. அவர் மேலும் ஒரு விஷயம் சொன்னார். காரைக்குடி பக்கம் அந்த மனிதர்கள் சொல்லும் வார்த்தை ரொம்ப முக்கியம் சார். வார்த்தைகள் இலவசமாக கிடைக்கிறதே என்று நிறைய செலவு செய்யாதே என்று சொல்வார்கள். வளரும் நாடுகள் பேச்சைக் குறைக்க வேண்டும் சார் என்றெல்லாம் சொன்னார். எதையாவது பேசி முட்டாளாக இருப்பதற்கு, எதுவுமே பேசாமல் புத்திசாலியாக இருப்பதே மேல் என்று ஒரு மேதை சொன்ன வரிகள் தான் எனக்கு ஞாபகம் வந்தது.

Next Story

காதலுக்காக அப்பாவை பிரிந்த மகள்; பாசப்போராட்டத்தில் டுவிஸ்ட் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 28

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 jay-zen-manangal-vs-manithargal- 28

காதலால் மகள் பிரிந்து சென்றதை தாங்க முடியாத நபர் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட கவுன்சிலிங் குறித்து ஜெய் ஜென் விவரிக்கிறார்.

இந்த நபர் என்னிடம் கவுன்சிலிங் வந்து தன் கதையை சொல்லும்போதே ஆச்சர்யமாக இருந்தது. என்னவென்றால் அவருக்கு விவாகரத்து ஆகி இருக்கிறது. பொதுவாக இப்படி கணவன், மனைவி பிரியும் போது, பெரும்பாலான குழந்தை அம்மாவிடம் தான் செல்லும். ஆனால் இவரது மகள் அப்பா கூடத் தான் போவேன் என்று தனது பத்து வயதில் சொல்லி இருக்கிறது. அவர் என்னிடம் சொல்லும்போதே மகள் இல்லை என்றால் தன் வாழ்க்கையில் எதுவுமே இல்லை என்ற அளவுக்கு இருக்கிறார். காலை எழுந்ததிலிருந்து அவரது மகள் குட் மார்னிங் சொல்லித் தான் அவர் அந்த நாளையே தொடங்குகிறார். இந்த பெண் கல்லூரி முடித்து வெளியே வந்தவுடன் தான் ஒருவரை காதலிப்பதாக சொல்கிறாள். 

இவரும் தன் பெண்ணிற்காக அந்த பையனை போய் பார்க்கிறார். கவனித்ததில் சரியான ஆள் இல்லை என்று தெரியவந்து மகளிடம் எடுத்துச் சொல்கிறார். முதன் முதலாக இருபது வருடத்தில் தனது மகளுக்கும், தந்தைக்கும் பிரச்சனை வருகிறது. சண்டை எப்போதாவது என்று இருந்தது, பிறகு அடிக்கடி இருவரும் வாக்குவாதம் செய்து செய்து அவர்களின் உறவு மாறி விடுகிறது. இப்படி திடீரென்று ஒருநாள் தன்னுடைய மகளை வீட்டில் எங்கு தேடியும் காணவில்லை. போன் பண்ணியும், நண்பர்களிடம் கேட்டும் தெரியவில்லை. அப்போது தான் புரிந்தது, தன் மகள் ஓடிவிட்டாள் என்று. மூன்றாவது நாள் என்னுடைய கவுன்சிலிங்கில் இருக்கிறார். இறந்தே போய்விடலாம் என்று முடிவெடுத்து வெறுத்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும்போது தன் நண்பரின் சிபாரிசு மூலம் என்னை பார்க்க வந்திருக்கிறார்.

நான் அவரிடம் அந்த பையனை வேண்டாம் என்று சொல்ல ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று கேட்டேன். அந்த பையன் எந்த வேலைக்கும் போகாமல், எந்த ஒரு முதிர்ச்சியும் இல்லாமல், விளையாட்டுத்தனமாக இருந்தான். ஒன்றிரண்டு கெட்ட பழக்கம் வேறு இருக்கிறது, படிப்பில் சுமார். ஆனால் என் பெண் ரொம்ப முதிர்ச்சியான எண்ணம் உடையவள். அவன் எந்த வகையிலும் என் பெண்ணிற்கு ஏற்றவாறு இருக்கமாட்டான் என்றார். நான் அவரிடம், இப்போது உங்கள் மகள் எங்கு சென்றாள் என்று தெரியவில்லை அவ்வளவு தானே முதலில் அவர்களை வரச்சொல்லி பேசி பார்ப்போம். உங்கள் மகள் எடுத்திருக்கும் முடிவை நாம் மதிக்க வேண்டும் என்றேன்.  ஓரளவு அவள் எங்கிருப்பாள் என்று தனக்கு தெரிகிறது. ஆனால் யாரும் உண்மையை சொல்ல மறுக்கிறார்கள் சார் என்றார். 

எனக்கு தெரிந்த ஆட்களை வைத்தும் அவரும் முயற்சி செய்து இறுதியில் அந்த பெண்ணை தொடர்பு கொண்டோம்.  அந்த பெண் வர மறுக்கிறாள். அத்தோடு என் வாழ்க்கையில் தலையிடாதீர்கள் அப்பா  என்றாள். நான் அந்த பெண்ணிடம் பேசி நிலைமையை சொல்லி இப்படி கவுன்சிலிங்கில் பேசலாமா என்று கேட்டேன். நாங்கள் நண்பர்களுடன் பத்திரமாகத் தான் இருக்கிறோம் என்றாள். அத்தோடு நான் பேசியதை கேட்ட பிறகு அவரையும் கூட்டி வருகிறேன், அவர் இப்போது என்னுடன் இங்கு இல்லை. ஆனால் சொன்னால் வருவார் என்றாள். 

இந்த நபர் மிகவும் அழுது, ரொம்ப உடல் வருத்தப்பட்டு சோர்ந்து போயிருந்தார். அவரால் பேசவே முடியவே இல்லை. நண்பரை அழைத்து அவரை மருத்துவமனை கூட்டிச் செல்லுங்கள் என்றேன். பின்பு அந்த பெண் என்னை பார்க்க வருகிறார். அவள் மட்டுமே வந்தாள், அந்த பையன் வரவில்லை. நான் அவரிடம் பேசிக்கொண்டிருக்க, அவர் வந்து விடுவார் என்று உட்கார்ந்தே இருந்து, மதியம், மாலை என்று நேரம் ஆகிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த பையன் வருவது போல தெரியவில்லை. இந்த பெண் வெளியே சென்று தனியாக போன் போட்டு, நெடுநேரம் கழித்து கடைசியாக பேசியபோது, அவன் சொல்லிய பதில், என்ன இது ஆள் எல்லாம் வைத்து கூப்பிட்டுக் கொண்டு, என்னால் இப்படி எல்லாம் வர முடியாது என்று சொல்லியிருக்கிறான். இந்த பெண் எவ்வளவோ எடுத்து சொல்லி நம் நிலைமை எல்லாம் எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்கள், அதற்கு பின் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று எவ்வளவோ கெஞ்சி கேட்டு பார்த்தும் பதில் இல்லை. இறுதியாக ஆறு மணி நேரம் கழித்து நீ வருவியா மாட்டியா என்று கேட்க பதில் இல்லை.

எனக்கு புரிந்து விட்டது. நான் அந்த பெண்ணிடம், ஒரு அப்பாவாக நினைத்து என்னிடம் சொல்லுமா, உங்களுக்குள் ஏதும் நடந்து இருக்கிறதா என்று கேட்க, அந்த பெண் தயங்கி ஆமாம் ஒரு 3,4 மாதம் முன்பு என்று சொன்னார். இனிமேல் அவன் வரமாட்டான் என்று எனக்கு புரிந்தது. அந்த பெண்ணிற்கும் ஏழு மணி நேரம் கழித்து புரிந்து அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்புகிறாள். சரி இதான் நான் அனுப்பும் கடைசி மெசேஜ். இனி நாம் சந்திக்க ஒன்றும் இல்லை என்று அதோடு தொடர்பை துண்டித்து விட்டு வந்தார். அவர் அப்பா மருத்துவமனையிலிருந்து வந்ததும் மகள் அவர் காலில் விழுந்து மன்னித்துவிடுமாறு கதறி அழ, அவர் நீ என் பொண்ணு மா என்று பேசி அங்கு நிலைமை சீராகிறது. அவரிடம் நான் இதுவரை நடந்த எதுவும் பேசவேண்டாம். உங்கள் பெண் உங்களிடம் வந்து விட்டார் என்று சொல்ல, அந்த பெண்ணிற்கு தான் அவ்வளவு கோவம் இருந்தது, அவனை ஏதாவது செய்ய வேண்டும் சார் என்று. அது அப்பறம் இருக்கட்டும் நீ உன் அப்பா என்ற சிந்தனை மட்டுமே கவனத்தில் வைத்திரு. அதை பின்னர் பார்த்து கொள்ளலாம். நீங்கள் இருவரும் சேர்ந்து என்ன செய்யலாம் என்று பின்பு யோசியுங்கள்  என்று சொல்லி அந்த கவுன்சிலிங்க் முடிந்து விட்டது. 

அதன் பின்னர் அவர்கள் யோசித்து முடிவெடுத்து யாரோ வைத்து அந்த பையனை கூப்பிட்டு கண்டித்து என்று அடுத்தடுத்து நடந்து இருக்கிறது. ஆனால் பார்க்கவேண்டியது அந்த பெண் தன் தந்தையிடம் பத்திரமாக சேர்ந்தது தான். இன்றைய காலத்தில் இனிமேல் காதல் திருமணம் செய்ய இருக்கும் பெண்கள் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியது, முதலில் அந்த பையனை வரவழைத்து குடும்பத்தோடு சந்திக்க வைத்து பேசுங்கள். அவன் வர தயங்குகிறான் என்னை எப்படி கூப்பிடலாம் என்று பேசினான் என்றாலே எப்படி அவனை நம்பி எதிர்காலத்தில் அத்தனை காலம் வாழ முடியும்.