Skip to main content

தவறி விழுந்த மனைவி; தற்கொலை முயற்சியாக மாற்றிய கணவன் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 52

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
advocate-santhakumaris-valakku-en-52

தான் சந்தித்த பல்வேறு வழக்குகள் குறித்தும் அதை நடத்திய விதம் குறித்தும் பிரபல வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

சுசித்ரா என்ற வடநாட்டு பெண்ணின் வழக்கு இது. திருமணம் செய்து கொள்ளும் அந்த பையன் மிகவும் ஜாலியான டைப், எப்போதுமே கலகலப்பான ஆள். சுசித்ராவோ கொஞ்சம் தேவைக்கு மட்டும் பேசும் அமைதியான குணம். திருமணமானவுடன் தன் மனைவி தன்னைப் போல இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் அவள் அப்படி மாறவில்லை. அது அவருக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. அந்த பெண்ணை ஏதாவது குறை சொல்லி காயப்படுத்தி வந்திருக்கிறார். போதாக் குறைக்கு கூட இருந்தவர்களும், பார்ப்பவர்களும் என்ன இந்த பெண்ணை திருமணம் செய்திருக்கிறீர்கள், குள்ளமாக இருக்கிறதே என்று ஏற்றி வேறு விடுகிறார்கள். இருவருக்கும் இரண்டு குழந்தைகள் என்றாகி ஐந்தாறு வருடங்கள் ஆகியும் தனக்கேற்ற மனைவி அமையவில்லையே என்று இவரிடம் நீங்கா குறை இருந்து வருகிறது. 

ஒருநாள் மாடி பால்கனியில் அந்த பெண் தனியாக உட்கார்ந்திருக்கும்போது தனது வளையல் தவறி கீழே விழ, பதறிப் போய் எடுக்கப்போன போது அங்கிருந்து விழுந்து பலமான அடிப்பட்டுவிட்டது. மருத்துவமனையில் சேர்த்தபோது, போலீசில் புகாரளிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதன்படியே அவள் கணவனும் தவறி விழுந்து விட்டதாக எழுதி கொடுக்க, அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, இல்லை யாரும் தள்ளிவிடவில்லை இது தெரியாமல் நடந்த விபத்து தான் என்று நடந்ததை சொல்லி விடுகிறாள். முதுகுத் தண்டு, இடுப்பெலும்பு என்று அடிப்பட்டு நடக்க முடியாமல் வீல் சேரில் தான் இருக்க முடியும் என்று ஆகிவிடுகிறது. கணவனுக்கு மருத்துவமனை செலவு என்று ஆகியதில் ஏற்கனவே இருந்த வெறுப்பு அதிகமாகி மேலும் ஒரு அலட்சியம் வந்துவிடுகிறது. தனியாக விட்டு விடுகிறார். மருத்துவமனையில் கூட ஒரு ஹெல்ப் வைத்துக்கொள்ளுமாறு சொல்லியும் தொடர்ந்து வைக்கவில்லை. இந்த பெண்ணோ பாத்ரூம் கூட போக முடியாமல் சிரமப்பட்டு கணவனிடம், தான் கொஞ்ச நாள் அம்மா வீட்டில் இருந்து வருகிறேன் என்று கேட்க, இதற்காக காத்துக் கிடந்தவர் போல அனுப்பி விடுகிறார். 

மீண்டும் பத்து நாள் கழித்து வந்தபோது, அவளது மாமியார் உள்ளே விடவே இல்லை. உன் கணவன் இருக்கும் நேரம் கேட்டு அவர் இருக்கும் போது வா. இப்போது போய் விடு என்று அனுப்பி விடுகிறார். இவளுக்கு அப்போதுதான் ஏதோ தவறாக இருப்பதாக நினைக்கிறாள். அவரிடமும் பதில் இல்லை. மூன்று மாதம் கழித்து வந்தபோதும் அவர், நீ அன்று செய்தது தற்கொலை முயற்சி. இதுபோன்று மேலும் மேலும் நீ செய்தால் என்னால் உன் கூட வாழ முடியாது. எனவே நீ உன் அம்மா வீட்டிற்கே சென்று விடு என அனுப்பி விடுகிறார். இவள் போன பின்பு அவர் குடும்ப நீதிமன்றத்தில், அவள் என்னை கொடுமைப் படுத்துகிறாள். அடிக்கடி தற்கொலை முயற்சி செய்து கொள்கிறாள். என் குடும்ப வாழ்க்கையே போயிற்று எனவே டிவோர்ஸ் வேண்டும் என்று பொய் வழக்கு போட்டு விடுகிறார்.

இவர்களும் ஒரு வக்கீல் வைத்து வழக்கை நடத்தி பார்க்கிறார்கள். ஆனால் அவர்களால் வக்கீலுக்கு பணம் செலுத்த முடியவில்லை. அவள் நீதிமன்றம் வரும் போதெல்லாம், அவளை நோகடித்து அவர் பேசுகிறார். குழந்தைகளையும் பார்க்க அனுமதிப்பதில்லை. அவளுடைய வக்கீலையும் காசு கொடுத்து வாங்கி விட்டதாக சொல்லி விடுகிறார். இப்படி வேறு வழி இல்லாமல் அந்த பெண் இருந்தபோது தான், ஒருவருடைய சிபாரிசு மூலம் எனக்கு இந்த வழக்கு வருகிறது. அந்த பெண்ணின் பரிதாப நிலைக்கு ஏற்ப அவளுக்காக கோர்ட்டில் வழக்கை மேற்கொண்டு நாங்கள் நடத்தினோம். முதல் கேள்வியாக, அந்த நபரிடம் இந்த பெண் தற்கொலை முயற்சி செய்தாள் என்ற குற்றச்சாட்டு வைத்ததால், எங்கு நீங்கள் பார்த்தீர்கள்? எப்படி செய்தாள்? என்ன மாதிரி முயற்சி செய்தாள் என்றெல்லாம் கேட்கிறோம், அவரிடம் ஒன்று கூட சரியான பதில் இல்லை. எனக்கு தெரியாது என்றே தான் பதில் வருகிறது. அதுபோக அவள் அடிப்பட்ட போது அவள் கணவன் தான் போலீசில் புகார் அளித்திருந்தார். அதிலும் கூட தற்கொலை என்று குறிப்பிடவே இல்லை. விழுந்து விட்டதாகத்தான் குறிப்பிட்டிருந்தார். அதை கோர்ட்டில் கூட தாக்கல் செய்யவில்லை. அதை வைத்து நாங்கள் பேசினோம்.

இது ஒரு மெடிக்கல் லீகல் கேஸ் என்பதால், கண்டிப்பாக மருத்துவமனையில் மனைவியிடம் ஸ்டேட்மெண்ட் வாங்கப்பட்டிருக்குமே என்று பார்த்தால், அதிலும் மனைவி போலீஸ் கம்பளைண்ட்டில் தெளிவாக, வளையல் விழப் போய்த்தான் விழுந்து விட்டதாக தெளிவாகச் சொல்லி இருக்கிறாள். எனவே அதற்கும் அந்த நபரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அடுத்ததாக இரண்டாவது வக்கீலாக நான் அவள் வழக்கை எடுப்பதால், மீண்டும் ஒருமுறை அவளுக்கு ஒரு அசிஸ்டன்ட் வைத்திருந்ததாக சொல்லப்பட்ட பெண்ணை விசாரிக்க வேண்டி வந்தது. ஆனால் அந்த கணவர் முதல் முறை வேறொரு அசிஸ்டன்ட் பேர் சொல்கிறார், இப்போது வேறொரு பெயர் சொல்கிறார். அந்த அசிஸ்டண்டையும் அவர்கள் வந்து காட்டவில்லை. ஒன்றிலும் உண்மை இல்லை. இதுபோக தன் பிள்ளைகளையும் அம்மாவிடம் அனுப்பாமல், கோர்ட்டில் அவளுக்கு எதிராகப் பேச வைத்திருக்கிறார். 

இதற்கிடையில் அந்த பெண்ணிடம் எதிர் வக்கீல், கணவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று மனு போட்டாயா என்று கேட்டு அதை வாங்கிப் படிக்கச் சொன்னார். ஆனால் எத்தனை முறை படித்தாலும் அதில் அப்படி ஒரு வார்த்தையே இல்லை. அவளும் தான் எழுதியதாகச் சொல்லி அழுகிறாள். ஆனால் அது எடுபடவில்லை. அங்கேயே அப்போதே நிறுத்திவிட்டு நான் நீதிபதியிடம் அவரிடம் இருக்கும் ஒரிஜினல் மனுவை படிக்குமாறு மெமோ போட்டேன். அடுத்த செஷன் வரும்போது வக்கீல் மீண்டும் அதையே கேட்டபோது, நான் நீதிபதியிடம் இருக்கும் ஒரிஜினலை கேட்டு படிக்குமாறு சொல்ல அவரும் படிக்க அதில் அந்த வார்த்தை இருந்தது. மேலும் தனக்கு ஒரு பைசா கூட காசு வேண்டாம், எனக்கு என் கணவருடன் வாழ வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறாள்.

ஆனால் இவரோ பணம் பறிக்கத்தான் இப்படி செய்கிறாள். ஐந்து வருடமாக எத்தனை செலவு செய்கிறோம் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் என்னிடம் நிறைய ஆட்களை பலமுறை அனுப்பி, பணம் கொடுத்து செட்டில் பண்ணி டிவோர்ஸ் வாங்க சொல்லுங்கள் என்றும் அனுப்புகிறார். ஒரு வக்கீலாக நான் என்னுடைய கிளைன்ட்டிடம் காசு செட்டில் பண்ணி டிவோர்ஸ் கொடுத்து விடுங்கள் என்று சொல்ல முடியாது. அது அவரவர் விருப்பம். அந்த பெண்ணிடம் உனக்கு விருப்பம் இருந்தால் செய் என்று விட்டுவிட்டேன். அந்த பெண் மீது தவறில்லை என்றாலும், தன்னுடைய தாம்பத்திய வாழ்க்கை பாதிப்பதால், அந்த நபர் இப்படி டிவோர்ஸ் வேண்டும் என்று இப்படியெல்லாம் செய்கிறார் என்று புரிந்தது. ஆனால் இந்த பெண் பணம் வாங்க ஒத்துக்கொள்ளவே இல்லை. கடைசியாக வழக்கு மேல் வாதம் என்று போக ஒரு வழியாக தீர்ப்பு வந்தது. ஆனால், அந்த நபருக்கு டிவோர்ஸ் கொடுத்து விடவேண்டும் என்று தான் தீர்ப்பு வந்தது. மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

நாங்கள் மேற்கொண்டு உயர்நீதிமன்றத்தில் அப்பீல் போட்டுக் காத்திருக்க, பெண் பக்கம் எந்தவித தவறும் இல்லை. தற்கொலை முயற்சி செய்து கொள்கிறாள் என்று தான் இவர் காரணம் காட்டி டிவோர்ஸ் கேஸ் போட்டிருக்கிறார். ஆனால் அப்படி ஒரு விஷயம் எதுவுமே நடக்கவில்லை. அவரிடமும் அதற்கான ஆதாரம் இல்லை என்றும் அந்த பெண் தன் கணவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்றுதான் கேட்டிருக்கிறாள் எனவே, அவர் தன் மனைவியோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று தீர்ப்பு மாறி வந்தது. ஆனால் என்னதான் ஐந்து வருடம் கழித்து தீர்ப்பு வந்தாலும், அவர்கள் இப்போது சேர்ந்து வாழவில்லை. அவர் தன் குழந்தைகளை எந்த குறையும் இல்லாமல் நன்றாக படிக்க வைத்து லண்டன் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் இருவரும் தனித்து தான் வாழ்கிறார்கள்.

Next Story

கணவனுக்குத் தெரியாமல் கர்ப்பத்தைக் கலைத்த மனைவி; கதறிய கணவன் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 54

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
advocate-santhakumaris-valakku-en-54

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

சரண் என்பவருடய வழக்கு இது. ஒரே பையன், பிஸினஸ் பார்க்கிறார். ஜாதக பொருத்தம் பார்த்து ஒரு பெண் அமைந்து, பெரியோர்களால் நிச்சயத் தேதி முடிவாகிறது. ஆனால், பெண்ணோ நிச்சயத்தில் அவ்வளவாக விருப்பம் காட்டாமல் இருக்கிறாள். ஒரு நெருக்கம் இல்லை. புகைப்படக்காரர்கள் போட்டோ எடுக்கும்போதும் கூட சரியான ஒத்துழைப்பு இல்லை. ஒருவித வெறுமையாக இருக்கிறாள். திருமணம் பின்பு சரியாகி விடும் என்று சரண் நினைக்கிறார். முதலிரவிலும் தங்களுக்கு செய்திருந்த அலங்காரங்கள் எல்லாவற்றையும் மிகவும் கோபமாக தூக்கி வீசுகிறாள். இதெல்லாம் சரணுக்கு வேதனையாக இருக்கிறது. எவ்வளவு அன்பாக பேசியும் அவளிடம் சரியான பதிலில்லை. கணவன் மனைவி ஒற்றுமையாக இல்லாமல் இருப்பதை சந்தேகித்து சரணுடைய அப்பா அவனை விசாரிக்கிறார். மனம் தாங்காமல் சரணும் சொல்லி விடுகிறார். அவர் பெண் வீட்டினருக்கும் சொல்லி பெண்ணின் தந்தை அவளிடம் விசாரிக்க அவள் ஏதோ சமாளித்து விடுகிறாள். 

தேனிலவுக்கு அந்த பெண் தன் தம்பி இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் கொள்ள அங்கேயே போகிறார்கள். அங்கும் தம்பியுடனே சுற்றுவது என்று கூட வருகிறான். இருவரும் அங்கே மனமில்லை என்றாலும் சேர்ந்து இருந்து விடுகிறார்கள். அதற்கு பின் சென்னையில் தனி வீடு பார்த்து போய் விடுகிறார்கள். அங்கே அவள் கர்ப்பமாகிறாள். சரண் மற்றும் அவரது பெற்றோருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால் அந்த பெண்ணிற்கு இந்த குழந்தை வேண்டாம் என்றும் ஒரு இரண்டு வருடம் நன்கு சேர்ந்து வாழ்ந்த பின்னர் பெற்று கொள்ளலாம் என்று அழிக்க நினைக்கிறாள். இது சரணால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சரண் பெற்றோர் பார்க்க வந்திருந்த போதும் கூட அவர்களிடம் சரியாக முகம் குடுத்து பேசவில்லை. அவள் பின்னர் தன் அம்மா அப்பாவை பார்க்க வேண்டும் என சொல்லிவிட்டு பாட்டி வீட்டிற்கு சென்று விடுகிறாள். போனவள் பத்து நாட்கள் கழித்து வருகிறாள். டாக்டர் செக்கப் கேட்டதற்கு தன் குழந்தை நிற்கவில்லை என்று சொல்லி விடுகிறாள். 

அதில் ஆரம்பித்து இரு வீட்டிலும் புரிதல் இல்லாமல் போய் அடிக்கடி பிரச்சனை, தகராறு என்று ஆகிறது. இரண்டு மாதம் அப்படி போக, கடைசியில் அந்த பெண் சரணுடன் போய் வாழ மாட்டேன் என்று சொல்லி விடுகிறாள். பெற்றவர்களும் சரணும் சேர்ந்து வாழ அறிவுரை சொல்லி, இனிமேல் புதிதாக சேர்ந்து வாழலாம் என்று பலவாறு பேசி அனுப்பி வைக்கிறார்கள். அவனுடன் வந்த பின்னர் தன் தோழிக்கு கல்யாணம் பெங்களூரில் நடக்கிறது. போய் பார்க்கப் போகிறேன் என்று நகையை லாக்கரில் இருந்து எடுக்கிறாள். மாமனார் வந்து பார்த்த போது அவரிடம் சொல்ல, அவர் எடுத்து போகும் நகையை குறித்து வைக்க சொல்கிறார். அவரிடம் நீங்கள் எனக்கு போட்ட வைர நெக்லஸ் ரொம்ப பிடித்தது மாமா. நான் என்ன என் நகை, உங்கள் நகை என்று பிரித்தா பார்க்கிறேன் என்று அன்பாக பேச அவரும் இறங்கி எது வேண்டுமோ எடுத்து செல்லுமாறு சொல்கிறார். ஆனால் இவளோ அவர்கள் நகையை வைத்து விட்டு தன் அம்மா வீட்டில் போட்ட நகையை எடுப்பது போல நடித்து  பையன் வீட்டு நகை எல்லாமே எடுத்து சென்று விடுகிறாள். அதன் பின்னர் திரும்பி இங்கே வரவே இல்லை. 

இரண்டு வருடம் மேல் ஆனது. அடுத்து சரண் குடும்பம் மேல் வரதட்சணை கொடுமை, மாமியார் கொடுமை, என்று எல்லா கேஸ் போட்டு, பெண்ணின் அப்பா சரணுக்கு கார் வாங்கிக்கொள்ள சொல்லி அன்பளிப்பாக கொடுத்த இருபது லட்சத்தையும் இவர்கள் வேண்டுமென்றே வாங்கி கொண்டு வீட்டை விட்டு தன்னை துரத்தி விட்டதாக வேறு புகார்கள். போலீஸ் கைது செய்யும் வரை வழக்கு ஆகிறது. எல்லாருக்கும் பெயில் வாங்கி, ஸ்டேஷனில் கையெழுத்து வாங்கி வழக்கு மேல் வழக்கு போட்டு இறுதியில் சரண் வெறுத்து போய் அவரே விவாகரத்து பதிவு செய்தார். அந்த பெண்ணிற்கும் விவாகரத்து தான் வேண்டும் என்றாலும் அவர்கள் மேல் போட்ட எல்லா வழக்கையும் வாபஸ் பெற வேண்டும் என்றால் தனக்கு ஐந்து கோடி பணம் வேண்டும் என்று கேட்டாள். மீடியேஷன் போட்டும் பலனில்லை. வழக்கை வேண்டுமென்றே சுப்ரீம் கோர்ட்டிற்கு அனுப்பி அங்கு மீண்டும் மீடியேஷன் போட்டு பேசியதில் ஒரு கோடியே இருபது லட்சத்திற்கு ஒத்துக்கொண்டு மியூச்சுவல் கன்செண்ட் போட்டு விவாகரத்து வழங்கப்பட்டது. இப்பொழுது சரண் இரண்டாவது திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கிறார். அந்த பெண் தன் தோழியுடன் சேர்ந்து ஏதோ கடை வைத்திருக்கிறாள் என்று தெரிய வந்தது.

Next Story

விவாகரத்தான பெண்ணை திருமணம் செய்ததால் பிரச்சனை; கதறிய அப்பாவி கணவன் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 53

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 advocate-santhakumaris-valakku-en-53

தான் சந்தித்த பல்வேறு வழக்குகள் குறித்தும் அதை நடத்திய விதம் குறித்தும் பிரபல வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

அவசரமாக ஒரு நபர் ஒருநாள் என்னுடைய அலுவலகத்தில் வந்திருந்தார், அப்பாயின்மென்ட் இல்லாமல் பார்க்கமுடியாது என்பதால், நான் அனுமதிக்காமல் இருக்க, சிறிது நாள் கழித்து அப்பாயின்மென்ட் வாங்கியபின் நான் அவரை சந்தித்தேன். அவரும் மிக பதற்றமாக என்னிடம் பேசினார். தான் ஒரு விவாகரத்து ஆன பெண்ணை திருமணம் செய்தவர் என்றும், இப்போது அந்த பெண் தன்னை வீட்டினுள்ளே விடுவதில்லை என்றும் பதற்றமாக பேசினார். என்ன ஆனது என்று கேட்டபின் தான் சொல்ல ஆரம்பித்தார். 

அந்த பெண்ணை அவர் முதலில் ஒரு தெரிந்த விழாவில் சந்தித்ததாகவும், பிடித்திருந்ததால் விசாரித்ததில் அந்த பெண்ணிற்கு ஏற்கனவே கோர்ட்டில் விவாகரத்து கேஸ் போய்க்கொண்டு இருக்கிறது என்று தெரிகிறது. பின்னர் கேஸ் முடிந்தவுடன் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவளுக்கு முதல் கணவனால் வந்த குழந்தையையும் ஏற்று கொள்கிறார். திருமணம் ஆன பின்னர் இவர்களுக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது. இருவரையும் அவர் ஒன்றாக தான் வைத்து வளர்க்கிறார், ஆனால் மற்றவர்கள் சும்மா இல்லாது, அவர் தன்னுடைய குழந்தையை மட்டும் எப்படி கொஞ்சுகிறார் பார். தன் மகனை மட்டும் நன்றாக வளர்க்கிறார் என்று ஏற்றி விட, இவளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறி விடுகிறது.

இவர் வெளியில் சென்று சாதாரணமாக  நண்பர்கள் என்று சந்தித்து  வந்தாலும், உன் கணவனை நான் வேறொரு பார்ட்டியில் பார்த்தேன் என்றெல்லாம் அவளின் நண்பர்கள் கூற கூற இவளுக்கு தேவையில்லாத சந்தேகம் தானாக வருகிறது. வீட்டிற்கு வந்ததும் கணவனிடம் ஒழுங்காக பேசுவதில்லை, எது பேசினாலும் சரியாக பதிலளிப்பதில்லை. பார்ட்டி என்று சென்று வருவதை சொல்லிக் காட்ட, இவர் தனக்கு அது வெறும் பொழுதுபோக்கு தான் என்று சொல்லிவிட்டு, அடுத்தமுறை அவளையும் கூட்டி போவதாகச் சொல்கிறார். ஆனால் அவளை அழைத்துப் போக ஆபிசில் அதுவரை எந்த பார்டியும் நடக்கவில்லை. அதனை புரிந்துகொள்ளாமல் மேலும் கோவப்படுகிறாள்.

எல்லாரும் இல்லாததை சொல்ல சொல்ல, அந்த முதல் கணவனின் பதினாறு வயது மகன் அவரை வெறுக்கிறான். ஒருநாள் குடித்துவிட்டு வந்ததில், அந்த பதின்வயது பையன் மரியாதை இல்லாமல் பேச பிரச்சனை பெருசாக ஆகிறது. 

கையை ஓங்குவது என்று அவரை அடக்கும் அதிகாரம் எடுத்துக் கொள்கிறான். அவருக்கென்று அவருடைய காரும் கொடுக்காமல், வாங்கிக் கொள்வது, பணத்தை எண்ணி பார்ப்பது போன்ற வேலையை எல்லாம் செய்கிறான். எல்லை மீறி அடிப்பது வரை ஆகிறது. ஒருநாள் அந்த பையனே குடிக்க ஆரம்பித்து விடுகிறான். தந்தை தடுக்க போய், பாட்டிலாலே அடித்து விடுகிறான். சின்ன பையனையும் அடக்கி வைத்திருக்கிறார்கள். இவருக்கு வீட்டில் மரியாதை இல்லை என்று தெரிய வருகிறது. வீட்டில் பணம் வைப்பதை நிறுத்தி விடுகிறார். சாப்பாடு போடுவது, கவனிக்கிறது என்று கிடையாது. தகராறு ஆகி வெளியே வந்து அப்போது தான் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று என்னிடம் வந்தார். போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கச் சொல்ல, அங்கு கவனிக்காததால், கமிஷனருக்கு மெயில் அனுப்பினார். பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

காவலர்கள் வீட்டிற்கு சென்று விசாரிக்க, இதனால் மேலும் அந்த அம்மா, பையன் என்று இவரிடம் அதிகமாக தகராறு செய்ய, மீண்டும் என்னிடம் வந்து என்ன செய்வது என்று நின்றார். எனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரியை வைத்து அவர்கள் தரப்பில் பேச வைக்க ஏற்பாடு செய்யச் சொல்ல, அவர்கள் இருவருக்கும் கவுன்சிலிங் முடிவானது. போய் பேசவைப்பது என்று வாரக்கணக்கு ஆனது. ஆனாலும் அந்த அம்மாவிற்கு இவருடன் வாழ விருப்பமே இல்லை என்று தெரிய வந்தது. சரி வாழப் பிடிக்கவில்லை என்றால் விட்டு விடலாமே என்று பேச, நான் இவரை விட்டு வெளியே தெருவிலா நிற்க முடியும். எனக்கும், என் பையனுக்கும் செய்ய வேண்டிய செட்டில்மென்டை கொடுக்கச் சொல்லுங்கள் என்றாள். சட்டப்படி அந்த பையனுக்கு பதினெட்டு வயது ஆனதால், அவனுக்கு இவர் செட்டில் செய்யவேண்டிய அவசியம் இல்லை. அவனே தான் வேலைக்கு போய் பார்த்து கொள்ளவேண்டும்.  பையனுக்கு நான் லீகல் கார்டியனாக இருக்கிறேன் என்று உறுதி அளித்தார்.

எனக்கு நிரந்தர ஜீவனாம்சம் எழுபது லட்சம் வேண்டும் என்று கேட்டாள். அவ்வளவு பணம் முடியாது என்று முழுமனதாக இவர் நிராகரிக்க கடைசியாக முப்பது லட்சம் வாங்கிக்கொள்ள ஒத்துக்கொள்கிறாள். அவரும்  பையனை தன்னுடன் அனுப்புமாறு கேட்டு, எப்போது வேண்டுமோ அவள் வந்து பார்க்கலாம் என்றும் தான் அனுமதிப்பதாகவும் சொல்கிறார். ஆனால் மாறாக, தன்னுடைய பிளாட்டிலிருந்து அவர்கள் வெளியேற வேண்டும் என்றார். முடிந்தவரை மறுத்தாலும், இறுதியாக ஒத்துக்கொண்டு செங்கல்பட்டு கோர்ட்டில் முதல் தவணை செட்டில்மென்ட் குடுத்து, இருவர் பேரில் இருந்த வீட்டின் ஒரு பாதி தொகையை இவர் பெறுமாறு பெட்டிஷன் போட்டு, எல்லாம் தொகை குடுத்து முடிக்க ஆறு மாத காலம்  ஆனது. டிவோர்ஸ் ஆன அன்று மாலையே வீட்டின் சாவியை கோர்ட்டில் வந்து சமர்ப்பிக்குமாறு உத்தரவு சொல்லப்பட்டு கடைசியாக வழக்கு முடிந்தது.