Skip to main content

"அவரை சோர்வடையச் செய்வதே வெற்றிக்கான வழி..." இந்திய பந்துவீச்சாளர் குறித்து ஹேசில்வுட் பேச்சு!

Published on 19/11/2020 | Edited on 19/11/2020

 

josh hazlewood

 

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஒருநாள் தொடரையடுத்து, இருபது ஓவர் போட்டித் தொடரும், அதனையடுத்து டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளன.

 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதனால், எதிர்வரவிருக்கும் தொடர் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

 

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளாரான ஹேசில்வுட் இந்தியாவிற்கு எதிரான தொடர் குறித்துப் பேசுகையில், "இந்திய அணி கடந்த முறை தொடரை கைப்பற்றிவிட்டது. அது எங்களை அதிகம் பாதித்தது. அந்தத் தொடர் மிகவும் நெருக்கடியான தொடராக அமைந்தது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. இம்முறை இஷாந்த் ஷர்மாவும் அணியில் இணைந்துவிட்டால் இந்திய அணி கூடுதல் வலிமை பெறும். கடந்த 15 ஆண்டுகளில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு மாறியுள்ளது. அதை எதிர்கொள்ள எங்கள் வீரர்கள் தயாராக இருக்கவேண்டும்" எனக் கூறினார்.

 

மேலும், இந்திய வீரர் பும்ரா குறித்துப் பேசுகையில், "பும்ரா தனித்துவம் வாய்ந்த வீரர். நாள் முழுவதும் ஒரே மாதிரியான வேகத்தை தக்கவைக்கிறார். புதிய பந்து, பழைய பந்து என இரண்டிலும் அவரால் விக்கெட் வீழ்த்த முடியும். பும்ராவின் நிறைய ஓவர்களை எதிர்கொண்டு, அவரை சோர்வடைய வைக்க வேண்டும். இதுவே ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய வழிவகுக்கும்" எனக் கூறினார்.