Skip to main content

பெங்களூர் அணிக்கு வலு சேர்க்கும் வகையில் புதிய வீரரின் வருகை இருக்கும் - கவுதம் காம்பீர் பேச்சு 

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

gautam gambhir

 

 

தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் வருகையானது பெங்களூர் அணிக்கு வலு சேர்க்கும் வகையில் இருக்கும் என கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனான கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

 

13-வது ஐபிஎல் தொடரானது வரும் 19-ம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. அனைத்து அணி வீரர்களும் இத்தொடருக்காக ஆயத்தமாகி வருகின்றனர். முதல் போட்டியில் சென்னை அணி மும்பை அணியை எதிர்கொள்கிறது. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான கிறிஸ் மோரிஸ் கடந்த இரண்டு தொடர்களில் டெல்லி அணிக்காக விளையாடி வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் பெங்களூர் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. தற்போது அவர் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி வீரர்களுடன் இணைந்து தீவிர பயிற்சியில் உள்ளார். கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனான கவுதம் காம்பீர், கிறிஸ் மோரிஸ் வருகை குறித்தும், பெங்களூர் அணி குறித்தும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர், "கிறிஸ் மோரிஸ் நிறைய போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் கூட அவர் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர். பெங்களூர் அணியை சீராக நிலைப்படுத்த அவரது பங்களிப்பு பெரிதும் உதவியாக இருக்கும். நான்கு ஓவர் பந்துவீசுவது மட்டுமின்றி, போட்டியின் இறுதி கட்டத்தில் விளையாட சிறந்த பின்வரிசை வீரராக அவர் இருப்பார். பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. இம்முறை அமீரக மைதானங்களில் விளையாடுவதால் பந்து வீச்சாளருக்கும் சாதகமாக இருக்கும். விக்கெட் எடுப்பதற்கு சிரமமான சின்னச்சாமி மைதானங்களில் இந்தாண்டு விளையாடாதது அவர்களது பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் பலம். அதனால் இம்முறை நவ்தீப் சைனி மற்றும் உமேஷ் யாதவிடம் இருந்து சிறந்த பங்களிப்பை எதிர்பார்க்கலாம்" எனக் கூறினார்.

 

 

Next Story

“உணர்ச்சிவசப்படாமல் இருங்கள்” - கம்பீருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுரை

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

Delhi High Court advises gautam Gambhir

 

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பியுமான கௌதம் கம்பீருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது. 

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் பாஜக எம்.பியுமான கௌதம் கம்பீர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். பிரபல இந்தி பத்திரிகை ஒன்று சமீபத்தில் கௌதம் கம்பீர் ஐபிஎல் போட்டிகளில்தான் பிஸியாக இருக்கிறார் என்று கட்டுரை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தன்னுடைய செயல்திறன் குறித்து தவறான கட்டுரையை வெளியிட்டுள்ளது என்று கூறி சம்பந்தப்பட்ட பத்திரிகை மீது 2 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். 

 

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், “நீங்கள் மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். மக்கள் சேவையில் இருப்பவர். பொதுவாழ்வில் இருப்பவர்கள் விமர்சனங்களுக்கு எளிதில் உணர்ச்சிவசப்படாமல் சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்து வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது. 

 

 

Next Story

கவுதம் கம்பீருக்கு கரோனா!

Published on 25/01/2022 | Edited on 25/01/2022

 

gautam gambHir

 

இந்தியாவில் வேகமாக அதிகரித்து வந்த கரோனா பாதிப்பு, தற்போது குறைய தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டும்  கரோனா உறுதியாகியுள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இந்தநிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தனக்கு லேசான அறிகுறிகள் ஏற்பட்டதாகவும், அதனைத்தொடர்ந்து சோதனை செய்துக்கொண்டதில் கரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கம்பீர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.