Skip to main content

இரண்டாவது டெஸ்ட்: முன்னணி வீரர்கள் இன்றி களமிறங்கும் இங்கிலாந்து!

Published on 12/02/2021 | Edited on 12/02/2021

 

engalnd team

 

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நாளை (13.02.2021) தொடங்குகிறது.

 

இந்நிலையில் நாளைய போட்டியில் விளையாடப்போகும் இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. காயத்தால் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியின் முன்னணி பந்து வீச்சாளரான ஆண்டர்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடனான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளுக்கு முழு உடல்தகுதியுடன் தயாராவதற்காக அவருக்கு ஓய்வளிக்கப்படுவதாக இங்கிலாந்து கேப்டன் ரூட் தெரிவித்துள்ளார். அதேபோல் இன்னொரு முக்கிய வீரரான ஜாஸ் பட்லர் நீக்கப்பட்டுள்ளார். மேலும் முதல் டெஸ்டில் சிறப்பாக விளையாடிய டாம் பெஸ்சும் நீக்கப்பட்டுள்ளதாக ரூட் தெரிவித்துள்ளார்.

 

அணியிலிருந்து நீக்கப்பட்ட இந்த நால்வருக்குப் பதிலாக ஸ்டூவர்ட் பிராட், மொயின் அலி, பென் ஃபோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது.