Skip to main content

மனக்கவலை நோய் என்றால் என்ன? - மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா விளக்கம்

Published on 25/08/2023 | Edited on 25/08/2023

 

What is anxiety disorder? - Explained by Psychiatrist Poorna Chandrika

 

உடலுக்கு நோய் வந்தால் உடனடியாக சிகிச்சை செய்கிற நாம். மனதிற்கு வந்தால் கண்டுகொள்வதில்லை. மனக்கவலை என்பதும் ஒரு வகை நோய் தான். அது குறித்து நம்மிடையே மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா விளக்குகிறார் 

 

மனக்கவலை குறித்த பல்வேறு கேள்விகள் நம்முடைய மனதில் எப்போதும் இருக்கும். மனநலம் குறித்து மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என்றாலே நம்மில் பலருக்கு தயக்கம் இருக்கும். அதே காரணத்துக்காக கோவிலுக்குச் செல்வது என்றால் நமக்கு பிடிக்கும். தனக்கு மட்டும்தான் மனநல பிரச்சனை ஏற்படுகிறது, மற்றவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று பலரும் நினைக்கின்றனர். குறிப்பிட்ட காலம் முதல் எதிலுமே ஈடுபாடு இல்லாதவர்களாக அவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு தூக்கம் சரியாக வராது. 

 

எதையோ பறிகொடுத்தது போன்ற எண்ணத்திலேயே எப்போதும் இருப்பார்கள். அவர்களுக்கு பசி எடுக்காது. பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் பல்வேறு மனநலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். குழந்தை பிறந்த பிறகும் அவர்களுடைய மனநிலையில் மாற்றம் ஏற்படும். ஆண்களை விட பெண்களுக்கே அதிக அளவில் மனக்கவலை ஏற்படுகிறது. சினிமாவில் இருப்பவர்கள் உட்பட பலரும் இன்று மனநல மருத்துவம் எடுத்துக்கொள்கிறார்கள். பிரச்சனையே இல்லாதவர்களுக்குக் கூட மனநல பிரச்சனைகள் வரலாம். 

 

குடும்ப வரலாறு காரணமாகவும் இது ஏற்படலாம். காதல் தோல்வி ஏற்பட்டால் சிலர் தற்கொலை வரை செல்கிறார்கள். இதுவும் கடந்து போகும் என்கிற மனநிலையில் அதை எதிர்கொள்பவர்களும் இருக்கிறார்கள். அதுபோன்ற மனநிலை அனைவருக்கும் இருக்க வேண்டும். சில பெண்களுக்கு திருமணத்திற்குப் பிறகு மனநலப் பிரச்சனை ஏற்படும். அவர் திருமணமாகிச் செல்லும் குடும்பத்தில் உள்ள சூழ்நிலையும், கட்டுப்பாடுகளும் இதற்கான காரணமாக இருக்கலாம். வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட சமூகக் காரணிகளாலும் மனநிலையில் பிரச்சனை ஏற்படலாம். கஞ்சா, குடி உள்ளிட்ட போதைப்பழக்கங்களுக்கு அடிமையாகும் சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் மனநிலையில் பிரச்சனைகள் ஏற்படும்.