Skip to main content

நீல நிறமாக மாறிய நினைவுச் சின்னங்கள் - காரணம் இதுதான்!   

Published on 04/04/2018 | Edited on 04/04/2018

கடந்த திங்களன்று (ஏப்ரல் 2) மாலை டெல்லி குதுப் மினாரைப் பார்க்கச் சென்றவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. முழுவதும் நீலமாக மாறி ஜொலித்தது. எதற்காக நீல விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்று விசாரிக்க, ஏப்ரல் 2 சர்வதேச ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் என்றும் மக்களுக்கு ஆட்டிசம் பற்றிய தகவல்களைப் பரப்ப ஒரு குறியீடாக நீல விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும்  16,000க்கும் அதிகமான முக்கிய கட்டிடங்கள் நீல ஒளி ஏந்தி நின்றன. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தொடங்கி, எம்பயர் ஸ்டேட் கட்டிடம் - நியூயார்க், நயாகரா அருவி - கனடா, கிறிஸ்டோ ரெடென்டர் - பிரேசில், நெல்சன் மண்டேலா பாலம் - சவுத் ஆப்ரிக்கா, பிரமிட் - எகிப்த், பழைய பாராளுமன்ற கட்டிடம் - ஆஸ்திரேலியா போன்றவை அவற்றில் முக்கியமானவை. இப்படி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் ஆட்டிசம் என்றால் என்ன? அது வெளிநாடுகளில் நகரங்களில் மட்டுமே இருப்பதா?  
 

Qutb minar blue light



இயற்கை, நமது வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கொடுத்திருக்கிறது. ஆனாலும் வாழ்வு அனைவருக்கும் ஒன்றாக இல்லை. சிலர் தத்தளித்து எதிர்நீச்சலிட்டே வாழவேண்டியிருக்கிறது. அதிலும் சில சமயங்களில், இறக்கைகளை பிடுங்கிக் கொண்டு "பறந்து செல் பார்க்கலாம்" என்று கூறுவது போல பிறப்பிலேயே உடல் கூறுகள் சில மனித மனங்களை  பதம் பார்த்துவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒன்றுதான் ''ஆட்டிசம்''. இது நோய் அல்ல, இது ஒரு குறைபாடு. ஆனால் இது வருவதற்கான காரணம் இன்னமும் அறியப்படவில்லை. இதற்கான முழு மருத்துவ முறை, மருந்து, மாத்திரை என எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் முறையான சில பயிற்சிகள் மூலம் மேம்படுத்தலாம். அமெரிக்காவில் 150க்கு ஒரு குழந்தை இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆட்டிசமால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாலும் சரியான எண்ணிக்கை நம் அரசிடமில்லை.

 

white house america

வெள்ளை மாளிகை

Pyramid in blue

பிரமிட்

'தன் முனைப்பு குறைபாடு' எனப்படும் ஆட்டிசம் பாதிப்பு நிறைந்த குழந்தைகள் எப்பொழுதும் சிறப்பு கவனத்தில் இருக்க வேண்டியவர்கள். இவர்களால் தங்களுடைய வேலைகளை தானே செய்து கொள்ள முடியாது. எப்போதும் தனிமையில் இருப்பார்கள், பேச்சில் வார்த்தைகள் முறையாக, சீராக இருக்காது, தனக்குத் தேவையானவற்றைக் கேட்டுப் பெறமாட்டார்கள். கண்களை உற்று நோக்கிப் பேசமாட்டர்கள், அவர்களுக்கென தனி உலகம், அதில் தனிமையில் வாழும் சிறப்பு உயிர்கள் அவர்கள். ஆனால் இந்த குறைபாட்டை மனநோய் என்று பார்க்கும் போக்கே இந்தியாவில் இருக்கிறது. மற்றவர்களால் மட்டுமல்ல ஆட்டிசம் பாதிப்புள்ள   குழந்தைகளின் பெற்றோர்களே இப்படித்தான் நினைக்கிறார்கள். உண்மையில் இது மனநோய் அல்ல. அதே போல் இது முற்றிலும் குணமடையும் குறைபாடும் அல்ல என்பதுதான் மனதை சமாதானப் படுத்தமுடியாத ஒரு பதில்.
 

Autism kid

 

ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளுக்கென சில பயிற்சிகள் முழு தீர்வை தராவிட்டாலும் சில முன்னேற்றங்களை கண்டிப்பாக கொண்டுவரும். அவற்றில் நடத்தை சீராக்கல் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சி, கல்வி வளர்ச்சிக்கான பயிற்சி, பேச்சுப் பயிற்சி ஆகிய பயிற்சிகள் முறையாக ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டால் கண்டிப்பாக அவர்களின் வாழ்விலும் நடைமுறைகளிலும் முன்னேற்றங்கள் ஏற்படும். 

 

autism kid


அன்றாட வாழ்வின் பழக்க வழக்கங்களைக் கற்றுத் தருவதே அவர்களுக்கான முதல் பயிற்சியாக இருக்கும். இந்த ஆட்டிசம் பாதிப்பு எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒரு ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தையோடு மற்றொரு ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தையை ஒப்பிட முடியாது. எல்லோரும் தனித்தனி உலகத்தில் இருப்பவர்கள். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் ஒரு சில திறமைகள் இருக்கும். அதை கண்டுபிடிப்பது அவர்களை உற்றுநோக்கி வளர்க்கும் பெற்றோரால் மட்டுமே கண்டுபிடிக்கமுடியும். சில குழந்தைகள் கணிதத்தில், இசையில், பஸ்சில்ஸ் போன்ற ஏதேனும் ஒரு திறமையை கொண்டிருப்பார்கள்.  அதுவும் அந்தத் திறமை அதீத திறமையாகவே இருக்கும் அதை கண்டுபிடித்து வெளிக்கொணர்வது பெற்றோர்கள் கையில்தான் உள்ளது. இந்த சமூகமும் கூட ஒரு பெரும் மனவியல் குறைபாட்டை கையாளத் தெரியாமல், 'இவையெல்லாம் முன்வினை பயன், அது இது' என்று பேசுகிறது. இதை புரிந்து கொண்ட சில நாடுகளும் மக்களும் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, சிறப்புக் குழந்தைகள் என்ற பார்வையில் அவர்களுக்கென ஒரு அங்கீகாரத்தை, ஒரு ஒத்துழைப்பைக் கொடுத்துவருகிறது. நாமும் அதற்கு தயாராவோம். 

Next Story

“என்னை அழிக்க நடவடிக்கை” - உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 

இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்த போது, ‘தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவை செய்து கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸுக்கு பதிலளித்த அமலாக்கத்துறை, ‘அரவிந்த் கெஜ்ரிவால் தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்து கோரிக்கையை முன்வைத்தது. 

 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

இந்த நிலையில், அமலாகக்த்துறை அளித்த அந்த பதிலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் , ‘அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு சமமான அரசியல் எதிரியான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம், தேர்தல் சமநிலையை குலைக்க மத்திய அரசு முயல்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் கைது மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த கைது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அதுமட்டுமல்லாமல், அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனிதனையும், ஆம் ஆத்மி கட்சியையும் அழிப்பதற்கான யுக்தியாகத் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், கெஜ்ரிவாலை உடனடியாக சிறையில் இருந்து விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

அமெரிக்காவில் தமிழக மாணவி அதிரடி கைது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Tamil Nadu student arrested in America

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், உலகில் உள்ள பல்வேறு மாணவர்கள் அமைப்பினர், பொது மக்கள் பலரும் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள், காசா போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேலுக்கான ஆயுதங்களை அமெரிக்கா ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும், போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகங்களில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று (25-04-24) காலை பல்கலைக்கழக வளாகத்தில், காசா போரை நிறுத்த வேண்டும் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக விதிகளை மீறி இந்தப் போராட்டம், நடத்தப்பட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹசன் சையத் மற்றும் மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதில், அச்சிந்தியா சிவலிங்கம், கோவை மாவட்டத்தில் பிறந்து அமெரிக்காவில் படிக்கும் மாணவி ஆவர். இந்தக் கைது நடவடிக்கைக்கு அங்குள்ள மாணவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போராட்டங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.