Skip to main content

ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி: இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே முற்றும் மோதல்!

Published on 11/05/2021 | Edited on 11/05/2021

 

israel - PALESTINE

 

இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்றுவருகிறது. கிழக்கு ஜெருசலேம் பகுதி யாருக்கு சொந்தம் என்பதே இரு தரப்பின் மோதலின் மையமாக இருந்து வருகிறது.

 

கிழக்கு ஜெருசலேம் பகுதி தற்போது இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 1967ஆம் ஆண்டு நடந்த மத்திய கிழக்கு போருக்குப் பின்பு கிழக்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல், தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. மேலும், ஜெருசலேத்தை தங்களது தலைநகர் என இஸ்ரேல் கூறி வருகிறது. இதனை பல சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கவில்லை.

 

இந்தநிலையில், ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில் யூதர்கள் உரிமை கொண்டாடும் நிலத்தில் வசித்துவரும் பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்ற இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்துவந்தது. இதன்தொடர்ச்சியாக, ஜெருசலேமில் உள்ள அல் அச்சா மசூதி அமைந்துள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் போலீசாருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. அதேசமயம் கிழக்கு ஜெருசலேமைக் கைப்பற்றியதைக் கொண்டாடும் விதமாக மே 9 முதல் மே 10ஆம் தேதிவரை 'ஜெருசலேம் தினம்’ என்ற பெயரில் இஸ்ரேல் கொண்டாடுவதாக இருந்தது. இதனையடுத்து இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

 

இதன்தொடர்ச்சியாக, பாலஸ்தீனத்தின் காசா முனையை தன்னாட்சி உரிமை பெற்று ஆட்சி செய்துவரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பு, இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலில் உள்ள வீடுகள் சேதமடைந்தன; உயிரழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. 

 

இதனையடுத்து, ஹமாஸ் போராளிக் குழுவை தீவிரவாத இயக்கம் எனக் கூறிவரும் இஸ்ரேல், அந்த அமைப்பின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நடத்தியது. இதில் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய இருதரப்பையும் அமைதி காக்குமாறு அமெரிக்கா, ஐநா சபை, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவை கேட்டுக்கொண்டுள்ளன. அதேநேரத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "ஹமாஸ் சிவப்பு கோட்டைத் தாண்டிவிட்டது. இஸ்ரேல் மிகப்பெரிய பலமுடன் திருப்பிக் கொடுக்கும்" என தெரிவித்துள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்