Skip to main content

ஐ.ஏ.எஸ் அதிகாரி எனச் சொல்லி விதவிதமாக மோசடி; இளைஞர் கைது

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

Youth arrested for fraud by pretending to be an IAS officer

 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த 31 வயதான சுபாஷ் சென்னை விருகம்பாக்கத்தில் தங்கி தன்னை ஐஏஎஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாகவும் பணிமாறுதல் பெற்றுத் தருவதாகவும் கூறி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு மோசடி மன்னனாகச் சுற்றித் திரிந்து வந்துள்ளார். 

 

திருவண்ணாமலையைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ள செளந்தர்ராஜன் மனைவி சென்னையில் மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்துள்ளார். தனது மனைவிக்கு திருவண்ணாமலைக்கு இடமாறுதல் வேண்டி தெரிந்தவர்கள் மூலமாக சுபாஷை சந்தித்துள்ளார் செளந்தர்ராஜன். தான் ஐ.ஏ.எஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டு இடமாறுதல் வேண்டும் என்றால் 2 லட்சம் செலவாகும் என பேரம் பேசியுள்ளார். இவரும் ஒப்புக்கொண்டுள்ளார். செளந்தர்ராஜன் மனைவிக்கு எந்த சிபாரிசும் இல்லாமல் போளூருக்கு இடமாறுதல் கிடைத்துள்ளது. அவரும் இங்கு வந்து பணியில் சேர்ந்துள்ளார். 

 

என்னால்தான் இடமாறுதல் கிடைத்தது. அதனால் எனக்கு பணம் தரவேண்டும் என சுபாஷ் செளந்தர்ராஜனை மிரட்டியுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஈசானிய லிங்கம் அருகே அமைந்துள்ள யாத்திரிகா நிவாஸ் தங்கும் விடுதியில் வந்து தங்கிய சுபாஷ், விடுதியில் வைத்து செளந்தர்ராஜனிடம் பஞ்சாயத்து பேசியுள்ளார். அங்கு சில இளைஞர்களும் வந்துள்ளனர். சத்தம் அதிகமாக இருந்ததால் விடுதி பணியாளர்கள் காவல்துறைக்கு தகவல் தந்துள்ளனர். செளந்தர்ராஜனும் தன் பங்குக்கு புகார் தந்துள்ளார். 

 

அங்கு வந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார், சுபாஷை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அண்ணாமலையார் கோவிலுக்கு வரக்கூடிய ஆன்மீக பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி சுற்றுலா துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த தங்கும் விடுதியில் சுபாஷ் தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ரூம் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் மீது சென்னை, திருவள்ளூர் என பல இடங்களில் மோசடி வழக்குகள் உள்ளன என்பதும், கைதாகி சிறைக்கு சென்றவர் என்பதும் தெரியவந்தது.

 

இடத்துக்கு தகுந்தாற்போல், ஆளுக்கு தகுந்தாற்போல் அரசு அதிகாரி, ஐஏஎஸ் அதிகாரி, பத்திரிகை நிருபர், தொலைக்காட்சி நிருபர், போலீஸ் நிருபர் என பல பெயர்களில் மோசடி செய்ய அதற்காகவே அடையாள அட்டைகளையும் உருவாக்கி வைத்துள்ளார். ஆதார் அட்டைகளும் உருவாக்கி வைத்துள்ளார். சதுரங்க வேட்டை படத்தின் கதாநாயகனை போல சுபாஷும் விதவிதமான பெயர்களில் விதவிதமாக பொதுமக்களை ஏமாற்றியிருக்கிறார். இவர் மீது திருவண்ணாமலையிலும் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்து  வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.