Skip to main content

நண்பனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள்!

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

Young people brutally incident a friend

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன் 17 வயது ராமச்சந்திரன். 12 ஆம் வகுப்பு வரை படித்த ராமச்சந்திரன் படிப்பை பாதியில் நிறுத்தி மாட்டு வண்டியில் கரும்பு ஏற்றி சர்க்கரை ஆலைக்கு கொண்டு சேர்க்கும் பணியை செய்து வந்துள்ளார். தந்தை கலியபெருமாள் பத்தாண்டுகளுக்கு முன்பு இறந்துபோக, இவரது மூத்த சகோதரியும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனால் குடும்பத்தின் சோக நிலையை கருத்தில் கொண்டு தன் உழைப்பின் மூலம் குடும்பத்தை காப்பாற்றி வந்தார் ராமச்சந்திரன். இவரது தாய் மணிமேகலை கரும்பு வெட்டச் செல்லும் பணி செய்து வந்துள்ளார். அதன் காரணமாக அவர் கரும்பு வெட்டும் கூலி வேலைக்கு ஈரோடு பகுதிக்கு சென்றுள்ளார். அதனால் ராமச்சந்திரன் தனது பாட்டியுடன் ஊரிலேயே தங்கி மாட்டு வண்டி ஓட்டி வந்துள்ளார். 

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் ராமச்சந்திரன் தனது ஊரில் உள்ள கடைக்கு கூல் ட்ரிங்ஸ் வாங்குவதற்கு சென்றுள்ளார். அதேநேரம் அவரது ஊரைச் சேர்ந்த நண்பர்கள் மோகன்ராஜ் (20), கந்தசாமி (18) ஆகிய இருவரும் மது போதையில் ராமச்சந்திரனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து ராமச்சந்திரன் வீட்டுக்குச் சென்றுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த இருவரும் மேலும் இரு சிறுவர்களுடன் சேர்ந்துகொண்டு ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்று தூங்கிக் கொண்டிருந்த அவரை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது ராமச்சந்திரனின் சத்தம் கேட்டு அவரது பாட்டி கூச்சல் போட்டு கத்தியுள்ளார். அதனால் அந்த நான்கு பேரும் தப்பித்து ஓடியுள்ளனர். இதனிடையே ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். 

 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன், திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் ராமச்சந்திரனை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லையென்றால், அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம் எனக் கூறிய ராமச்சந்திரனின் உறவினர்கள் கடலூர் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என போலீசார் உறுதியளித்தை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

 

இந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் மடப்பட்டு பகுதியில் கஜேந்திரன்(19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் விசாரணை செய்தனர். அதில், மோகன்ராஜ், கந்தசாமி, கஜேந்திரன் மற்றும் பிடிபட்ட அந்த 17 வயது சிறுவன் ஆகிய நால்வரும் ராமச்சந்திரனை வீடு தேடிச் சென்று வெட்டிக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் நால்வர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்டுள்ள மோகன்ராஜ், கந்தசாமி ஆகிய இருவரும் ஏற்கனவே கஞ்சா, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இருவர் மீதும் திருவெண்ணைநல்லூர், திருநாவலூர் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்தவர்கள் தற்போது ராமச்சந்திரனை கொலை செய்துள்ளனர். ஏற்கனவே ராமச்சந்திரன் இவர்களுடன் நண்பராகப் பழகியுள்ளார். அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது, கைது செய்யப்படுவது, ஜெயிலுக்கு செல்வது என வாழ்க்கை மாறியதால் அவர்களுடன் பழகுவதை ராமச்சந்திரன் நிறுத்தி உள்ளார். சிறைக்கு சென்று வந்த பிறகு ராமச்சந்திரன் தங்களுடன் பேசவில்லை என்ற கோபம், மேலும் தங்களைப் பற்றி ராமச்சந்திரன் போலீசாருக்கு ரகசியமாக தகவல் கொடுத்து தாங்கள் கைது செய்யப்பட காரணமாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மோகன்ராஜ், கந்தசாமி இருவரும் அவரது சக நண்பர்களுடன் சேர்ந்து ராமச்சந்திரனை கொலை செய்துள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.