Skip to main content

மாணவியின் வாக்குமூலத்தால் போக்சோவில் கைதான இளைஞர்! 

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

Young man arrested in pocso

 

கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. கடலூர் மாவட்டம், கொரக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சரவண பிரகாஷ்(27). இவர், சென்னையில் ஒரு பேக்கரி கடையில் வேலை செய்து வருகிறார். இவர் அந்த மாணவிக்கு செல்போன் உரையாடல் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். சரவண பிரகாஷ், ஊருக்கு வரும்போது எல்லாம் மாணவியை நேரில் சந்தித்துள்ளார். அதில், இருவருக்கும் இடையே காதல் வளர்ந்துள்ளது. 

 

இவர், கடந்த 15.1.2021 அன்று மாணவியை அவரது பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்று தனது உறவினர் ஊரில் வைத்து திருமணம் செய்து கொண்டார். சில நாட்கள் கழித்து, தனது சொந்த ஊரான கொரக்கை கிராமத்தில் உள்ள தனது தாய் தந்தையுடன் மனைவியை கொண்டு வந்து தங்க வைத்துவிட்டு சென்னைக்கு வேலைக்கு சென்றுள்ளார். சென்னையில், சரவண பிரகாஷ் வேலை செய்யும் அதே பேக்கரி கடையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வேறு ஒரு இளைஞனும் சரவண பிரகாஷுடன் வேலை செய்து வந்துள்ளார். இருவரும் ஒரே அறையில் தங்கி உள்ளனர். 


இந்த நிலையில் சரவண பிரகாஷின் 17 வயது மனைவி, தனது கணவருக்கு செல்போனில் தொடர்புகொள்ளும் நேரங்களில் அவ்வப்போது, சரவண பிரகாஷின் நண்பன் எடுத்து பேசியுள்ளார். இப்படி அடிக்கடி சரவண பிரகாஷ் மனைவி அவரது நண்பனுடன் பேசி பழகி இருவரும் நெருக்கமாகி உள்ளனர். இந்த விஷயம் அந்தப் பெண்ணின் கணவரான சரவண பிரகாஷுக்கு தெரியவந்து, மனைவியை கண்டித்துள்ளார். அதோடு மனைவி வைத்திருந்த செல்போனையும் அவரிடமிருந்து பறித்துள்ளார். அதன்பிறகும் அந்தப் பெண் அக்கம் பக்கத்தினரின் செல்போன் வாங்கி அதன் வழியாக சரவண பிரகாஷ் நண்பனிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். 


இவர்கள் செல்போன் தொடர்பு குடும்பத்தில் பெரும் சிக்கலை உருவாக்கும் என்று எண்ணிய சரவண பிரகாஷ், மனைவியை வீட்டில் இருக்க வேண்டும். வெளியில் எங்கும் தனியாக செல்லக்கூடாது வேறு யாருடனும் செல்போனில் பேசக்கூடாது என்று கண்டித்ததோடு தனது தாய் தந்தையிடம் கூறி மனைவியை கண்காணிக்குமாறு கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த பிரகாஷ் மனைவி, தனது பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார். தன்னை சரவண பிரகாஷ் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார் என்று கூறியுள்ளார். 


அதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள், இதுகுறித்து மங்களூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர் புண்ணியவதிக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து புண்ணியவதி, போலீசில் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது அந்த மாணவி, ஆசை வார்த்தை கூறி சரவண பிரகாஷ் தன்னை திருமணம் செய்து கொண்டு, தன்னை வீட்டை விட்டு வெளியேறாமல் அடைத்து வைத்திருப்பதாகவும், தான் அவருடன் இருக்க விருப்பமில்லை என்றும் அந்த இளம்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்பின் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் சரவண பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்