Skip to main content

ஆட்சியரால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு; பெண்கள் போராட்டம்

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

Women struggle as Tasmac shop closed by Collector reopens

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் 2 டாஸ்மாக் கடைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி பெண்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து, கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற மாதாந்திரக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கடந்த 2017 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி திரண்ட நூற்றுக்கணக்கான பெண்கள், 2 டாஸ்மாக் கடைகளையும் அதனுடன் இணைந்திருந்த பார்களையும் அடித்து உடைத்தனர். டாஸ்மாக் கடைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தையடுத்து இரு டாஸ்மாக் கடைகளும் நிரந்தரமாக மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் முத்துமாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்று வணங்கியதுடன் கடைவீதியில் உற்சாகமாக வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் டாஸ்மாக் மூடப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை மீண்டும் கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு 2 வாரமாகச் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொத்தமங்கலம் ஊராட்சி எல்லைக்குள் டாஸ்மாக் கடை திறப்பதில்லை என்ற கிராம சபை தீர்மானத்தின்படி மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூடப்படவில்லை என்றால் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

 

Women struggle as Tasmac shop closed by Collector reopens

 

இந்த நிலையில், புதன் கிழமை மாலை கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கிராம பொதுமக்கள் கூட்டம் என்ற பெயரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொத்தமங்கலம் கிராம வளர்ச்சிக்காகவும், வர்த்தக நலன் கருதியும் டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என்றும், மீறி மூடினால் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே ஊரில் இரு வேறு கூட்டங்கள் நடத்தி டாஸ்மாக் கடை வேண்டாம் என்றும் டாஸ்மாக் கடை வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

இந்த நிலையில், இன்று வெள்ளிக் கிழமை டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நூற்றுக்கணக்கான பெண்கள் டாஸ்மாக் கடையை நோக்கிச் சென்றபோது, போலீசார் சாலைகளில் ஆங்காங்கே தடுப்புகளை வைத்து பெண்களை போகவிடாமல் தடுத்து திருப்பி அனுப்பினர். கடையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போட்டிருந்தனர்.

 

Women struggle as Tasmac shop closed by Collector reopens

 

இதனால் அப்பகுதி பெண்களும் ஆண்களும் தோட்டங்களுக்குள் சென்று டாஸ்மாக் கடைக்கு முன்பு திரள முயன்றபோது, ஆலங்குடி டிஎஸ்பி தீபக்ரஜினி தலைமையிலான போலீசார், 30 மீட்டர் தூரத்திலேயே தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆலங்குடி வட்டாட்சியர் விசுவநாதன் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பிறகு இன்று டாஸ்மாக் கடையை மூடுவது, பிறகு ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தி அதன் முடிவுப்படி செயல்படுத்துவது. அதுவரை டாஸ்மாக் கடை திறப்பதில்லை என்று உறுதி அளித்ததால் பெண்கள் கண்ணீரோடு நன்றி கூறி கைகூப்பினர். 

 

அதே நேரத்தில் டாஸ்மாக் கடை வேண்டும் என்று மதுப்பிரியர்கள் போராட்டம் நடத்த தயாரானபோது, போலீசாரும் வருவாய்த்துறையினரும் சமாதான கூட்டத்தில் ஏற்படும் முடிவின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அவர்களைக் கலைந்து செல்ல வைத்தனர். ஒரே நேரத்தில் இரு தரப்பினரும் டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.