Skip to main content

'ஏன் என்னை பார்த்து சிரித்தீர்கள்?' - ரணகளமான ஹோட்டல்!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

'Why did you look at me and smile?' - Battlefield Hotel!

 

தூத்துக்குடியில் ஹோட்டலில் சாப்பிட வந்த இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஹோட்டல் கடையே ரணகளமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ராமசாமி தாஸ் பார்க் எதிரே தனியார் ஹோட்டல் ஒன்று உள்ளது. நேற்று (22.09.2021) இரவு அந்த ஹோட்டலில் நாகராஜ், அஜித், பால்ராஜ், அருண்குமார், சங்கரநாராயணன் ஆகியோர் சாப்பிட்டுள்ளனர். அதேபோல் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த முருகன், பிரசாந்த், சிவராமன் ஆகியோர் அவர்களுக்கு அருகே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் அடிக்கடி அந்த தனியார் ஹோட்டலில் சாப்பிடும் வாடிக்கையாளர்கள் என்பதால், அந்த ஹோட்டலில் உணவு பரிமாறுபவர்களுடன் சகஜமாக பேசிக்கொள்வது வழக்கமாம். அப்படி ஊழியர்களுடன் அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த முருகன் தரப்பினர் தங்களைப் பற்றி பேசி சிரிப்பதாக நினைத்துள்ளனர்.

 

ஒருகட்டத்தில், “எங்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறீர்கள்” என கேட்டுள்ளனர். “இல்லை” என்று அருண்குமார் தரப்பு மறுத்த நிலையில், பேச்சு வாக்குவாதமானது. பின்னர் சாப்பிட்டதற்கான பில்லைக் கொடுத்துவிட்டு அருண்குமார் தரப்பு கிளம்ப இருந்த நிலையில், ”ஏன் எங்களைப் பார்த்து சிரித்தீர்கள்” என்று மீண்டும் கேட்க, வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இந்த மோதலில் ஹோட்டலில் இருந்த சேர், குழம்பு வாளி போன்றவற்றைக் கொண்டு ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக்கொண்டனர். இதுதொடர்பான காட்சிகள் ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகாரளிக்க, உடனடியாக வந்த காவல்துறையினர் இருதரப்பையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். மேலும், கிடைத்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்