Skip to main content

“தடைகளையெல்லாம் கடந்துதான் முன்னேறியாக வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
We must overcome all obstacles and progress CM MK Stalin

சென்னை கொளத்தூரில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் சார்பில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தால் எனக்குத் தனி மகிழ்ச்சி வந்துவிடும். ஏனென்றால், எல்லோருக்கும் தெரியும் என் மனதுக்கு நெருக்கமாக விளங்கும் 'நான் முதல்வன்' திட்டத்திற்கு அடித்தளமாக அமைந்ததே இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமிதான்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த அகாடமியை தொடங்கினோம் இதுவரைக்கும் பத்து பேட்ச் பெண்கள். ஆறு பேட்ச் ஆண்கள் இங்கே பயிற்சி முடித்து வேலைகளுக்குப் போயிருக்கிறார்கள். இவர்களுடைய எண்ணிக்கை எவ்வளவு என்றால் 816 பெண்கள் 444 ஆண்கள் என்று மொத்தம் 1260 பேர். இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமியால் நல்ல வேலைகளுக்குப் போயிருக்கிறார்கள். இப்போது பெண்களுக்கான பதினொன்றாவது பேட்சில் 78 மாணவிகளும் ஆண்களுக்கான ஏழாவது பேட்சில் 49 மாணவர்களும், டெய்லரிங் ஏழாவது பேட்சில் 355 மகளிரும் என்று மொத்தம் 482 பேர் பயிற்சி முடித்திருக்கிறார்கள். அடுத்து, பெண்களுக்கான பன்னிரண்டாவது பேட்சில் 80 மாணவிகளும் ஆண்களுக்கான எட்டாவது பேட்சில் 50 மாணவர்களும், டெய்லரிங் எட்டாவது பேட்சில் 360 பெண்களும் பயிற்சி பெற இருக்கிறார்கள்.

மடிக்கணினியும், சான்றிதழும் வழங்க மட்டும் இன்றைக்கு நான் வரவில்லை. பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்குத்தான் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். இப்படி பார்த்து பார்த்து அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துகின்ற திட்டங்களை நிறைவேற்றி, கொளத்தூர் தொகுதியை மற்ற தொகுதிகளுக்கெல்லாம், அதாவது இங்கே இருக்கக்கூடிய அமைச்சர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக இதை ஒரு மாடல் தொகுதியாக நினைத்துக் கொண்டு நீங்கள் செய்து காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் அவர்களை எல்லாம் நான் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் இங்கே வருகிறபோது, அருமை தங்கை அனிதாவின் தியாகத்தைப் பற்றி நான் அடிக்கடி சொல்வதுண்டு. ஏனென்றால், ஒடுக்கப்பட்ட சமுதாயங்களில் இருந்து முன்னேறி வருகின்ற நம்மை போன்றவர்களுக்கு சமூகத்தில் ஏகப்பட்ட தடைகள் பல வரும். அந்த தடைகளை நியாயப்படுத்தவும் பல பேர் இருப்பார்கள். படித்து முன்னேற ஆசைப்பட்டதே தவறு என்பது போலவும், சிலர் புலம்பிக் கொண்டு இருப்பார்கள், பேசிக் கொண்டு இருப்பார்கள். இதையெல்லாம் கடந்துதான் நாம் முன்னேறியாக வேண்டும்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

2024 ஆம் ஆண்டிற்கான விசிக விருதுகள் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
2024 Vck Awards Announcement!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமையினருக்கு, “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகள் 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேனாள் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ். பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்டோருக்கு  இதுவரை விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக - விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அம்பேத்கர் சுடர் விருது - நடிகர் பிரகாஷ்ராஜ், பெரியார் ஒளி விருது - வழக்கறிஞரும், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளருமான அருள்மொழி, மார்க்ஸ் மாமணி விருது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், காமராசர் கதிர் விருது - இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், அயோத்திதாசர் ஆதவன் விருது - பேராசிரியர் ராஜ்கௌதமன், காயிதேமில்லத் பிறை விருது - வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர்  எஸ்.என். சிக்கந்தர், செம்மொழி ஞாயிறு விருது - கல்வெட்டியலறிஞர் எ. சுப்பராயலுவுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா மே 25 ஆம் தேதி (25.05.2024) சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ளார்.