Skip to main content

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக்க கோரி கடையடைப்புப் போராட்டம்!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

At virudhachalam human chain struggle

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள நகரம் மற்றும் பேரூராட்சிகளில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய நகரமாக விருத்தாசலம் வளர்ந்துள்ளது. விருத்தாசலம் கோட்டம், விருத்தாசலம் தாலுகா, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், (விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் இணைந்த) கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், அரசு மருத்துவமனை, அரசு கல்லூரி போன்ற பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

 

மேலும், மாவட்டத்திலேயே மிகப் பெரிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் ஆராய்ச்சி நிலையம், தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களையும் இணைக்கக் கூடிய மிகப்பெரிய ரயில்வே சந்திப்பு நிலையமாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு புகழ் பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில், கொளஞ்சியப்பர் கோவில் என வர்த்தகம், ஆன்மீகம், விவசாயம், போக்குவரத்து என பல துறைகளிலும் தனித்தன்மையுடன் விளங்குகிறது.

 

At virudhachalam human chain struggle

 

அதேசமயம் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதிகளான தொழுதூர், மங்களூர், சிறுப்பாக்கம், திட்டக்குடி, வேப்பூர், நல்லூர், மங்கலம்பேட்டை, பெண்ணாடம், விருத்தாசலம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், அரசின் திட்டங்களைப் பெறுவதற்காகவும், அரசிடம் குறைகளைக் கூறுவதற்காகவும் மாவட்ட தலைநகரான கடலூருக்குச் செல்வதற்குப் பல பேருந்துகள் மாறி, பல மணிநேரங்கள் கடக்க வேண்டியுள்ளது.  இதனால் பண விரயம், கால விரயமும் ஏற்படுகிறது. 

 

இதனால், பல வகைகளிலும் முக்கியத்துவம் மற்றும் அத்தியாவசியம் கருதி, விருத்தாசலம் பகுதியை கடலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, வேப்பூர், மங்கலம்பேட்டை, திருமுட்டம் ஆகிய பகுதிகளை இணைத்து விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், பொதுநல அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகள், வழக்கறிஞர் சங்கங்கள், விவசாய அமைப்புகள், பொது நல இயக்கங்கள் அவ்வபோது தீர்மானங்கள் நிறைவேற்றுவதுடன் விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்கக் கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

At virudhachalam human chain struggle

 

இந்நிலையில் விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பில் ‘விருத்தாசலம் மாவட்டம்’ அமைக்கக் கோரி விருத்தாசலம் பாலக்கரையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதேபோல் மங்கலம்பேட்டையிலும் பொதுநல அமைப்புகள், அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், 25 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடும் மக்களின் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

 

அதேசமயம், விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி ஒரு வாரத்திற்கு முன்பு விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்க ஆலோசனைக் கூட்டத்தில், இன்று (20-ஆம் தேதி) சனிக்கிழமை முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவது எனவும், அந்தப் போராட்டத்திற்கு அனைத்து வணிகர்களும் ஒத்துழைப்பு தந்து போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும், மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கத்தினர், வர்த்தகர் சங்க நிர்வாகிகளைச் சந்தித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

 

மேலும் ஒவ்வொரு கடையாகச் சென்று கடைகளை அடைக்க வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் மனிதச் சங்கிலி போராட்டம் மட்டுமே நடந்தது. மாறாக முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறவில்லை. இதற்குப் பெரும்பாலான வணிகர்கள் ஆதரவு தராததால் ஒரு சில வணிகர்கள் மட்டுமே கடைகளை அடைத்து ஆதரவு தந்தனர். அரசியல் கட்சிகள் திடீரென அறிவிக்கும்போது கடைகளை அடைக்கும் வியாபாரிகள், 25 ஆண்டுகாலமாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வரும் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தராமல் புறக்கணித்தது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகர் மீது  துப்பாக்கிச் சூடு; ஓ.பி.எஸ் அணி பொறுப்பாளர் உட்பட 6 பேர் கைது! 

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

6 people arrested in Virudhachalam DMK member case
இளையராஜா

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த தியாகராஜன் மகன் இளையராஜா(45). தி.மு.க பிரமுகரான இவர் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற முன்னாள் மாவட்ட பொறுப்பாளராவார். மேலும் வள்ளலார் குடில் என்ற ஆதரவற்ற முதியோர், குழந்தைகள் இல்லத்தை நடத்தி வருவதுடன் இயற்கை விவசாயம் செய்து, அது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.  

 

இந்நிலையில் நேற்று மாலை, இளையராஜா நாளை(10 ஆம் தேதி) நடைபெற உள்ள இயற்கை விவசாயம் சார்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டிற்காக கொளஞ்சியப்பர் கோவில் அருகே உள்ள தனது சொந்த நிலத்தில் வேளாண் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். அது முடிந்து அதிகாரிகள் கிளம்பிச் சென்ற பிறகு மாலை 5.30 மணியளவில் தானும் கிளம்புவதற்காக காருக்கு அருகே வந்துள்ளார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்களைப் பார்த்ததும் இளையராஜா வேக வேகமாக காருக்குச் சென்று ஏற முயன்றார். அப்போது அந்த கும்பலில் இருந்த ஒருவர்  இளையராஜாவை நோக்கி துப்பாக்கியால் சுட, அந்த குண்டு இளையராஜாவின் பின்பக்கமாக இடுப்பு பகுதியில் பாய்ந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட இளையராஜா, அங்கிருந்து தப்பிப்பதற்காக காரில் ஏறி, கதவைப் பூட்டிக்கொண்டு காரை இயக்க முற்பட்டபோது, அந்த கும்பலைச் சேர்ந்த மற்றொருவர் கைத்துப்பாக்கியால் காரின் முன்பக்க கண்ணாடி வழியாகச் சுடவே, அந்த குண்டு கார் கண்ணாடியைத் துளைத்தது. கண்ணாடிகள் உடைந்து அவரது கழுத்தில், மார்பில் படவே இரத்தம் பீரிட்டு வெளியேறியது. மேலும் அந்த கும்பல் இரண்டு முறை காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றது. இளையராஜாவும் வேக வேகமாக காரை ஓட்டிக்கொண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.

 

அதனைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் விருத்தாசலம் போலீசாருக்குத் தகவல் கிடைத்ததன் பேரில், அங்கு விரைந்து சென்ற டி.எஸ்.பி ஆரோக்யராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் இளையராஜா, “இயற்கை வேளாண்மை நிகழ்ச்சிக்காக வேளாண் அதிகாரிகளிடம் பேசிவிட்டு அவர்களை அனுப்பிவிட்டு நானும் வீட்டிற்கு புறப்பட தயாரானேன். அப்போது ஆடலரசன், புகழேந்தி உள்ளிட்ட 6 பேர் மூன்று பைக்கில் வந்தனர். ஆடலரசன் தனது இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தார். இதை பார்த்து நான் அருகில் இருந்த எனது காரில் ஏறி தப்பிக்க முயன்றேன். அதற்குள் புகழேந்தி துப்பாக்கியால் சுட்டார். ஆடலரசின் கையிலும் துப்பாக்கி இருந்தது. நான் காருக்குள்ளே சென்று கார் கதவை மூடியதும் என்னை நோக்கி ஓடி வந்த ஒருவர் கார் கண்ணாடி வழியாக மீண்டும் என் மீது துப்பாக்கியால் சுட்டார். இதனால் எனக்கு கழுத்து, தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதே கும்பல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கத்தி அரிவாளுடன் பொன்னேரி - சித்தலூர் பைபாஸில் வழிமறித்து தாக்கிக் கொலை செய்வதற்கு முயற்சித்தனர். இது குறித்து விருத்தாசலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை” எனத் தெரிவித்தார். 

 

6 people arrested in Virudhachalam DMK member case
புகழேந்தி மற்றும் ஆடலரசு

 

இளையராஜா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குறித்தும், அவர்களுக்குத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்றும் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகரின் மகனும் ஓ.பி.எஸ் அணியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளருமான புகழேந்தி, அவரது தம்பி ஆடலரசு மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் மீது கொலை முயற்சி, உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடினர். மேலும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதனிடையே இன்று அதிகாலை கடலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜசேகரை பார்ப்பதற்காக அவரது மகன்கள் புகழேந்தி, ஆடலரசு ஆகியோர் வந்தபோது போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணைக்காக விருத்தாசலம் அடுத்த ஆலடி காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர்

 

விசாரணையில் புகழேந்தி மற்றும் ஆடலரசு ஆகியோருக்கும், இளையராஜாவுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. அதன் காரணமாக இளையராஜாவை கொலை செய்யும் நோக்கத்தில் 2 கள்ளத் துப்பாக்கிகளை வாங்கி வந்த புகழேந்தி, ஆடலரசன் மற்றும் இவர்களின் கூட்டாளிகள் பாளையங்கோட்டை விஜயகுமார், விருத்தாசலம் சரவணன், மதுரை சூர்யா, விருத்தாசலம் வெங்கடேசன் ஆகிய 6 பேரையும் விருத்தாசலம் அடுத்த ஆலடி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடமிருந்து 2 கள்ள கைத்துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல்  செய்தனர். 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

Next Story

''ரோட்ல கடை போட்டா டெய்லி 100 ரூபாய் தரணுமா?'' - மாமூல் கேட்ட அதிமுக கவுன்சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் 

Published on 02/08/2023 | Edited on 02/08/2023

 

Youth who had an argument with the AIADMK councilor, "Should we give 100 rupees to put up a shop on the road?"

 

விருத்தாசலத்தில் சாலையோரம் பிரியாணிக் கடை வைத்திருந்த இளைஞர்களிடம் அதிமுக கவுன்சிலர் ஒருவர் 100 ரூபாய் மாமூல் கேட்டு வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

 

விருத்தாசலத்தில் அதிமுக கவுன்சிலர் ராஜேந்திரன் என்பவர் அந்தப் பகுதியில் சாலையில் பிரியாணிக் கடை வைத்திருக்கும் இளைஞர்களிடம் 100 ரூபாய் மாமூல் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. வெளியாகி இருக்கும் அந்த வீடியோவில் பிரியாணி கடை உரிமையாளரின் நண்பர் ஒருவர் அதிமுக கவுன்சிலரிடம் ''அண்ணா நானும் இந்த ஏரியாதான் அண்ணா. என் வண்டில பாருங்க நீதித்துறை'னு ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும். நானும் அட்வகேட் தான். நான் வாடகைக்கு எடுத்து ஒரு மொபைல் கடை வெச்சிருக்கேன். அந்த கடைக்கே மாதம் 2,500 ரூபாய் தான் வாடகை. நீங்க தினமும் இங்க 100 ரூபாய் கேக்கறீங்க. மாதம் 3000 ரூபாய். அது இருந்தா ஏன் சாலை ஓரத்துல பிரியாணி கடை போடுறோம். கடைய வாடகைக்கு எடுக்க மாட்டோமா? எதுக்கு டெய்லி 100 ரூபாய் கேக்கறீங்க. எதுக்கு நாங்க காசு தரணும்'' என பேசியுள்ளார்.  அதிமுக கவுன்சிலர் ராஜேந்திரனும் பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபடும் அந்தக் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.