Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; தகராறு செய்த ரவுடிக்கு நேர்ந்த சோகம்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

villupuram pidagam nathamedu former panchayat president lakshmanan incident 
லட்சுமணன்

 

விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது பிடாகம் நத்தமேடு என்ற கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 38). இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட சுமார் 20 வழக்குகள் ஏற்கனவே அப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இதனால் இவர் காவல் துறையின் ரவுடி லிஸ்டில் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் லட்சுமணன் திடீரென்று கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து லட்சுமணன் மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 

அப்போது அதே பகுதியை சேர்ந்த சரவணன், ஐயப்பன், சக்திவேல் மற்றும் இளையராஜா ஆகிய நால்வரும் லட்சுமணன் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளது தெரிய வந்தது. இவர்களில் சரவணன், சக்திவேல், ஐயப்பன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், "நாங்கள் எங்கள் நண்பர்களுடன் ஜானகிபுரம் பகுதியில் அமர்ந்து அடிக்கடி மது அருந்துவோம். அப்போது எங்களிடம் லட்சுமணன் பணம் கேட்டு மிரட்டுவார். அவர் அவ்வப்போது வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்று மீண்டும் வெளியே வரும்போது குடிப்பதற்கு எங்களிடம் பணம் கேட்டு அடித்து மிரட்டுவார். இதனால் நாங்கள் அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்தோம்.

 

இந்த நிலையில் எங்கள் நண்பன் சரவணன் அரியலூர் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு  வைத்திருந்தார். அதை கைவிடுமாறு லட்சுமணன் சரவணனை மிரட்டினார். மேலும் சரவணன் உடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணின் கணவருடன் சேர்ந்து கொண்டு சரவணனுக்கு எதிராக லட்சுமணன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இப்படி எங்கள் சொந்த பிரச்சனையில் தலையிடுவது, எங்களை அடித்து மிரட்டுவது, பணம் கேட்டு தகராறு செய்வது என லட்சுமணன் எங்களுக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வந்தார்.

 

இவரது தொல்லை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இனிமேல் லட்சுமணனை விட்டு வைக்கக் கூடாது. அவரை கொலை செய்வது என திட்டமிட்டோம். அதன்படி சம்பவத்தன்று காலை லட்சுமணனுக்கு போன் செய்து இனிமேல் நமக்குள் பிரச்சனை எல்லாம் இருக்கக் கூடாது. நாம் அனைவரும் சமாதானமாக போவோம். நடந்த சம்பவங்களை மறந்து விடுவோம். இனிமேல் ஒற்றுமையாக இருப்போம். அதை நாம் மது விருந்து வைத்து கொண்டாட வேண்டும் என்று கூறி லட்சுமணனை ஜானகிபுரம் பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தோம்.

 

villupuram pidagam nathamedu former panchayat president lakshmanan incident 
சரவணன் - ஐயப்பன் - சக்திவேல்

 

பகையை மறந்து எங்களுடன் லட்சுமணன் வந்தார். அப்போது நாங்கள் தயாராக வைத்திருந்த மிளகாய் பொடியை அவரது முகத்தில் தூவினோம். இதில் நிலைதடுமாறி லட்சுமணன் கீழே விழுந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உருட்டுக் கட்டையால் அவரை அடித்தும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தோம். மேலும் அவர் இறந்ததை உறுதி செய்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றோம்" என மூவரும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். விழுப்புரம் பகுதியில் ரவுடிகள் மோதலில் நடந்துள்ள இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.