Skip to main content

பெண் மீது தாக்குதல்; தட்டிக் கேட்டவர் கொலை! 

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

villupuram north street man incident police investigation started 

 

விழுப்புரம் நகராட்சியில் உள்ள வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இப்ராஹிம் (வயது  45). இவர் விழுப்புரம் காந்தி வீதியில் உள்ள ஒரு அங்காடியில் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்து வந்த இவர் நேற்று மாலை ரம்ஜான் நோன்பு இருப்பதற்காக பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிக்கு சென்றுள்ளார். அப்போது இரண்டு வாலிபர்கள் ஒரு பெண்ணை துரத்தி தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனைக் கண்டு இப்ராஹிம் மனம் பொறுக்காமல் ஏன் பெண்ணிடம் தகராறு செய்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். இவரைப் போலவே அங்கு நின்றிருந்த தீபக் என்ற வாலிபரும் அந்தப் பெண்ணிடம் தகராறு செய்தவர்களிடம் தட்டிக் கேட்டுள்ளார். அந்த வாலிபர்கள், தங்களைத் தட்டிக் கேட்ட இப்ராஹிம் வயிற்றிலும் தீபக் முகத்திலும் கத்தியால் குத்தியுள்ளனர். இதைக் கண்டு அப்பகுதியில் இருந்த கடைக்காரர்கள் பொதுமக்கள் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

கத்தியால் குத்தி விட்டுத் தப்பி ஓட முயன்ற இந்த இரண்டு வாலிபர்களை அப்பகுதி கடை ஊழியர்கள் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். உடனடியாக அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் டவுன் டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் போலீசார் படுகாயம் அடைந்த இப்ராஹிம் மற்றும் தீபக் ஆகிய இருவரையும் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இப்ராஹிம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

கத்தியால் குத்திய இரண்டு வாலிபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் விழுப்புரம் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்த ஞானசேகர் என்பவரது மகன்கள் ராஜசேகர் மற்றும் வல்லரசு என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணையில், ராஜசேகரின் தந்தை ஞானசேகரன் என்பவருக்கும் இவர்கள் இருவரும் துரத்தி தாக்குதல் நடத்திய அந்த பெண்ணுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகவும் இதை அறிந்த அவரது மகன்கள் ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகிய இருவரும் சம்பந்தப்பட்ட அந்த பெண்ணை கடைவீதியில் மறித்து தகராறு  செய்து அடித்து உதைக்க துரத்திச் சென்றுள்ளனர். அப்போது அந்த பெண் மிரண்டு ஓடியபோது தான் இப்ராஹிம் மற்றும்  தீபக் ஆகிய இருவரும் ஏன் தனியாக இருக்கும் ஒரு பெண்ணிடம் தகராறு செய்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளனர்.

 

இதற்கிடையில், தகராறு நடப்பதைப் பார்த்து பயந்த அந்தப் பெண் பல்பொருள் அங்காடியில் ஓடி ஒளிந்துள்ளார். அங்காடிக்குள் புகுந்த ராஜசேகர், வல்லரசு ஆகிய இருவரும் அந்த பெண்ணை தாக்கினர். அதை இப்ராஹிமும் தீபக்கும் தடுத்தபோது தான் அவர்கள் இருவரையும் கத்தியால் குத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா நேரில் சென்று விசாரணை நடத்தினார். பிடிபட்ட ராஜசேகர், வல்லரசு ஆகிய இருவர் மீதும் விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராஜசேகர் வல்லரசு இருவரும் கஞ்சா போதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தை கண்டித்து விழுப்புரம் நகர வியாபாரிகள் இன்று கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளனர். கடைவீதியில் நடைபெற்ற இச்சம்பவம் விழுப்புரம் நகர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.