
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் அழகேந்திரன். பட்டியல் சமூக இளைஞராக இவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல் என்பவரது என்பது மகன் பிரபாகரன், சத்திரப்பட்டி கண்மாய் கரையில் அழகேந்திரன் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த ஆணவப் படுகொலை வழக்கில் பிரபாகரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து பிரபாகரன் கடந்த சில நாட்களுக்கு முன்ஜாமீன் வெளியில் வந்துள்ளார். இருப்பினும் இந்த வழக்கில் பிரபாகரன் காவல் நிலையத்தில் முறையாக ஆஜராகாமல் இருந்துள்ளார். இத்தகைய சூழலில் தான் காவல் துறையினர் பிரபாகரனின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று அவரை தேடியுள்ளனர். அப்போது காவல்துறையினர், முத்துவேலுவிடம் பிரபாகரனைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வரச்சொல்லி விட்டு சென்றுவிட்டனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பிரபாகரன் தனது தந்தையிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவிட்டுச் சென்றதைக் கேட்டு ஆத்திரமடைந்துள்ளார்.
இதனையடுத்து நள்ளிரவில் தனது நண்பரான அய்யனார் என்பவரை அழைத்துக் கொண்டு சத்திரபட்டி காவல் நிலையத்திற்குள் முகமூடி அணிந்தவாறு பணியில் இருந்த காவலர் பால் பாண்டியைத் தாக்க முயன்றுள்ளனர். அதோடு காவல் நிலையத்தில் இருந்த கணினி, மேஜை உள்ளிட்ட பொருட்களையும் அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சத்திரப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி காவலருக்கு மிரட்டல் விடுத்த பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் ஐயனார் ஆகிய இருவரும் விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி காவல் சோதனை சாவடியில் அருகே சென்றபோது இன்று காலை கைது செய்யப்பட்டனர். செய்யப்பட்டார். முன்னதாக பிரபாகரனைக் கைது செய்ய முற்படும் போது கண்மாய் பகுதியில் இருந்து குதித்து தப்பியோட முயன்ற நிலையில் வலது கை, இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.