Skip to main content

“தொழிலாளர் சங்கங்கள் வைத்த இரு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது” - அமைச்சர் சிவசங்கர்

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
two demands made by the trade unions have been fulfilled says Minister Sivashankar

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இரண்டு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் , வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகிறதா? ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி ஆகிய இரண்டு சங்கங்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறுவதாக தெரிவித்திருக்கிறார்கள். அதை நீதிமன்ற உத்தரவை உறுதிப்படுத்திய பின்பு உண்மை நிலவரம் தெரிய வரும். வருகின்ற 19-ஆம் தேதி தொழிலாளர் சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தப்படும். அதற்கு நீதிமன்றம் சில வழிமுறைகளை வழங்கி இருக்கிறது. அதன் பின்பு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அனைத்து நலன்களையும் இந்த அரசு கவனத்தில் வைத்து இருக்கிறது. பொங்கல் நேரத்தில் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பேருந்துகளை இயக்குவதற்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் காலையில் காஞ்சிபுரத்திலும் தற்போது வேலூரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். 

பொங்கல் பண்டிகையில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து தொழிலாளர்களையும் பணிக்கு திரும்புங்கள் என்று தொடர்ந்து அரசு வலியுறுத்தி வருகிறது. சங்கங்களுடன் பேச்சு வார்த்தைக்கு தயாராக உள்ளது. தொழிலாளர் சங்கங்கள் முன்பு வைத்த இரண்டு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி இருக்கிறது. அதன்படி பணியில் இறந்து போனவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் 800க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி வழங்கப்பட்டு இருக்கிறது.

போக்குவரத்து கழகத்திற்கு ஓட்டுநர்கள் நடத்துநர்கள் ஆள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதன் அடிப்படையில் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பிப்ரவரி மாதம் முதல், தேர்வு பெற்றவர்கள் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறோம். மீதமுள்ள 4 கோரிக்கைகள் நிதிநிலை அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றுவார்” என கூறினார்.

சார்ந்த செய்திகள்