Skip to main content

கள்ளநோட்டு விவகாரம் இருவர் கைது! ரூ.20,100 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்!

Published on 17/10/2020 | Edited on 17/10/2020

 

Two arrested in counterfeit note case Rs 20,100 counterfeit notes seized


கள்ள நோட்டுகள் தயாரித்து மாற்றிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.


ஈரோடு நாராயணவலசு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சில்லி சிக்கன் கடை ஒன்று இருக்கிறது. இந்தக் கடைக்கு நேற்று இரவு, இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். அப்போது அவர்கள் 500 ரூபாய் நோட்டு கொடுத்து சில்லி சிக்கன் வாங்கி உள்ளனர். 


அவர்கள் கொடுத்த அந்த 500 ரூபாய் நோட்டு, கள்ள நோட்டு போல இருந்ததால் சந்தேகமடைந்து கடையில் வேலை செய்துவரும் பாலு என்பவர் ஈரோடு வடக்கு போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக, இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்.ஐ.க்கள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்தக் கள்ள நோட்டு கொடுத்தது ஈரோடு மாணிக்கம் பாளையத்தைச் சேர்ந்த மாசானம் மகன் சதீஸ், கோபால் மகன் சவுந்தர்ராஜன் என்பது தெரியவந்தது. 

 

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், கைது செய்யப்பட்ட இருவரும் காரில் சென்று துணி வியாபாரம் செய்து வந்ததும், கரோனா கால ஊரடங்கிற்குப் பிறகு வியாபாரம் சரிவர இல்லாததால் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடிவந்த நிலையில், யூ ட்யூப் மூலம் கள்ள நோட்டுகளை தயாரிப்பது எப்படி என்று பார்த்து, ஜெராக்ஸ் மிஷின் மூலம் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து, கள்ள நோட்டுகளை தயாரித்தாக இருவரும் ஒப்புக்கொண்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கலர் பிரிண்டர், கள்ள நோட்டுகள் ரூபாய் 20,100, கள்ள நோட்டுகளை மாற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட கார், பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களைச் சிறையில் அடைத்தனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.