Skip to main content

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை உடனுக்குடன் மொழி பெயர்க்கப்படும் தாய்மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும்! டி.ஆர்.பாலு, எம்.பி., மனு!

Published on 13/07/2019 | Edited on 13/07/2019

 


உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை உடனுக்குடன் ஏககாலத்தில் மொழி பெயர்ப்பதற்கான தாய்மொழிகளின் உத்தேச முதல் பட்டியலிலேயே தமிழையும் சேர்க்க வேண்டும் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேற்று (12.7.2019) உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்தினார்.  அப்போது தலைமை நீதிபதி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

t

 

இதுகுறித்து புதுடெல்லியில் உள்ள கழக நாடாளுமன்றக் குழுத் தலைவரின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-   ’’தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, தி.மு.கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு  நேற்று (12.7.2019) இந்தியாவின் தலைமை நீதிபதி அவர்களைச் சந்தித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை ஏக காலத்தில் மொழி பெயர்ப்பு செய்வதற்கு உத்தேசிக்கப் பட்டிருக்கும் தாய்மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும் என்று கோரி மனு ஒன்றை அளித்தார்.

 

அந்த மனுவில், உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் 2019 ஜூலை மாத இறுதியிலிருந்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை ஏக காலத்தில் மொழி பெயர்ப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநில மொழிகளான அஸ்ஸாமி, இந்தி, கன்னடம், மராத்தி, ஒடியா மற்றும் தெலுங்கு ஆகியவற்றுடன் தமிழையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

 

இந்தியா போன்று பல மொழிகள் பேசப்படும் நாட்டில் ஏக காலத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மொழி பெயர்ப்பதற்கான மாநில மக்களின்  தாய்மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்ப்பதன் மூலம் வழக்காடுபவர்கள் வழக்கின் பிரச்சினைகளை எளிதாகப் புரிந்து கொள்வதை நிச்சயமாக எளிதாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 

அந்த மனுவில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை ஏக காலத்தில் மொழி பெயர்ப்பு செய்வதற்கான மாநில மக்களின் தாய்மொழிகளின் பட்டியலில் சேர்ப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள முக்கியக் காரணங்கள் வருமாறு:-

(i) தமிழ்நாட்டில் பெருமளவில் பேசப்பட்டு வரும் திராவிட மொழியான தமிழின் மேன்மையின் காரணமாக அதற்கு 2004 ஆம் ஆண்டு, பிற இந்திய மொழிகளில் முதலாவதாக செம்மொழித் தகுதி (அந்தஸ்து) வழங்கப்பட்டது. அதற்குப் பின்னரே அந்த (செம்மொழித் தகுதி), பிற மொழிகளுக்கு வழங்கப்பட்டது.

(ii) உலகம் முழுவதும் தமிழ் சுமார் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கான மக்களால் இன்னமும் ஆற்றல் வாய்ந்த தாய்மொழியாக பேசப்பட்டு வரும் ஒரே புராதன மொழி தமிழேயாகும்.

 

(iii) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் அலுவல் (ஆட்சி) மொழியாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளில் ஒன்றாகவும் உள்ளது. யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளின் அலுவல் (ஆட்சி) மொழிகளில் ஒன்றாகவும் உள்ளது. சிங்கப் பூரிலும், இலங்கை (ஸ்ரீலங்கா) யிலும் அலுவல் (ஆட்சி) மொழி களில் ஒன்றாகத் தமிழ் உள்ளது. மேலும் தமிழ் மொழி, மலேசியா, மியான்மர், கனடா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள ஏராளமான பள்ளிகளில் கற்பிக்கப் பட்டு வருகிறது. மேலும் பல நாடுகளிலும் கற்பிக்கப்பட்டு வருகிறது. உண்மையில் இது ஒரு சர்வதேச மொழி. இதன் முக்கியத்துவம் இதர நாடுகளிலும் அடையாளப்படுத்தப் பட்டுள்ளது.

 

(iv) மொழித்துறையில் அடை யாளம் என்பது ஒரு முக்கியமான கொள்கையாக தற்போது உள்ளது. மொழிப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது ஒரு சமுதாயத்தின் ஒருமைப் பாட்டுக்கு அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்த மொழியாகவும் அதே போன்று அடையாளத்திற்கு மூலமாகவும் தமிழ் இருப்பதால், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகளை மொழி பெயர்ப்பதற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள தாய் மொழிகளின் முதல் பட்டியலிலேயே அதை இடம் பெறச் செய்ய வேண்டும்.

 

 (v)  பல்வேறு சட்ட ஆணையங் களின் (கமிஷன்களின்) அறிக்கை களில் மாண்புமிகு உச்சநீதி மன்றத்தின் இருக்கைகளை நாட்டின் பிற பகுதிகளில் அமைப் பதற்கு ஏற்ற இடங்கள் பற்றிய கருத்தைத் தெரிவித்த போது, நிதி நெருக்கடியின் காரணமாக உச்சநீதிமன்றத்தை அணுகு வதற்கு இயலாமல் இருக்கும் வழக்காடுபவர்களுக்கு உதவி செய்வதற்கு தமிழ்நாட்டில் அதை அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(vi) தாய்மொழிகளின் முதல் பட்டியலில் தமிழ் சேர்க்கப்படு வதன் மூலம், பன்மொழித் தன்மையின் நோக்கத்தை மேலும் கொண்டு செல்வதற்கும், அதே போன்று குறிப்பாக தமிழ்நாட்டில் அம்மொழியைப் பேசும் மக்க ளுக்கும், நாடு முழுவதும் தமிழ் மொழி பேசும் பிற மக்களுக்கும் இடையே உடமைத் தன்மையையும், ஒருமைப்பாட்டையும் சாதிப்பதற்கும் மேலும் சேர்ப்பதற்கும் உதவி செய்யும்.

இவ்வாறு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்  சார்பாக கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு  இந்தியாவின் தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

 

மு.க.ஸ்டாலின்  சார்பில் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு  தெரிவித்த கருத்துக்களைக் கூர்மையாகக் கேட்டுக் கொண்ட இந்தியாவின் தலைமை நீதிபதி அவர்கள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஏக காலத்தில் மொழி பெயர்த்து வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் தாய்மொழிகளின் முதல் பட்டியலிலேயே தமிழையும் சேர்ப்பது குறித்த கோரிக்கையை பரிசீலித்து, விரைவில் நல்ல முடிவை எடுப்பதற்கு கனிவுடன் ஒப்புக் கொண்டார்கள்.’’

சார்ந்த செய்திகள்