Skip to main content

“கொஞ்சம் பொறுமையாக இரு..” சிறுமி மாயமானதற்கு வாலிபர் காரணமா.. காவல்துறை விசாரணை!

Published on 23/10/2021 | Edited on 23/10/2021

 

Tragedy caused by cell phone .. Police looking for the girl!

 

கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள தோளாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்துவந்தார். கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலமாக பாடம் படித்துவந்தார். இதற்காக அவரது பெற்றோர் சிறுமிக்கு செல்ஃபோன் வாங்கிக் கொடுத்திருந்தனர். 

 

படிப்பு முடித்துவிட்டு மீதி நேரத்தில் சிறுமி செல்ஃபோன் மூலம் தனது நண்பர்களுடன் ஃபேஸ்புக் போன்ற செயலிகள் மூலமாக பழகிவந்துள்ளார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு ஃபேஸ்புக் மூலமாக சேலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது. நாளடைவில் அவர்கள் நட்பு காதலாக மாறியுள்ளது. இருவரும் செல்ஃபோன் எண்களைப் பரிமாற்றிக்கொண்டு மணிக்கணக்கில் பேசி காதலை வளர்த்துவந்தனர்.

 

இந்த விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரியவந்ததையடுத்து பெற்றோர்கள் அந்தச் சிறுமியைக் கண்டித்துள்ளனர். இதுகுறித்து அச்சிறுமி அவரது காதலனிடம் கூறியுள்ளார். அதற்கு காதலன், “நான் உன்னை அழைத்துச் சென்று திருமணம் செய்துகொள்கிறேன். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இரு” என்று கூறியுள்ளார். இந்த விஷயம் அச்சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவரவே, அவரிடம் இருந்து செல்ஃபோனை பறித்துக்கொண்டனர். 

 

இந்த நிலையில், வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமாகிவிட்டார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் காரமடை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து, ஃபேஸ்புக் காதல் காரணமாக முகம் தெரியாத வாலிபருடன் அந்தச் சிறுமி சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரித்துவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கோவையில் துப்பாக்கியுடன் வலம் வரும் ரவுடிகள்; விசாரணையில் அம்பலமான சதித்திட்டம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
 police arrested the robbers who were crawling with guns in Coimbatore

கோவை மாவட்டத்தில் செல்வபுரம் காவல் துறையினர் சொக்கம்புதூர் முத்தண்ணன்குளம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை போலீசார் வழிமறித்தனர். ஆனால், வந்தவர்கள் வழக்கத்துக்கு மாறாக முகபாவனைகள் செய்யவே போலீசாருக்கு சந்தேகம் கிளம்பியுள்ளது. இதனால் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். 

விசாரணையில்.. அவர்கள் கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்ற செவிட்டு சஞ்சய், கோவை தீத்திபாளையம் அருள் நகரைச் சேர்ந்த ஜலாலுதீன், கோவை இடையர்பாளையம் பி.என்.டி காலனியைச் சேர்ந்த கிட்டான் என்ற சரவணக்குமார் என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் மூவரும் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும்.. இங்கே எதற்கு சுற்றித் திரிகிறீர்கள்.. என்ன விவகாரம் என போலீஸ் கேட்டபோது, அவர்கள் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளனர். இதனால் மேலும் சந்தேகமடைந்த போலீசார், அந்த கும்பலில் இருந்து சஞ்சய் குமாரை  சோதனை செய்தனர். அப்போது ஒரு கை துப்பாக்கி இருந்தது. இதைக் கண்டு அதிர்ந்த போலீசார், உடனடியாக அதை அவனிடம் இருந்து பறிமுதல் செய்தனர். 

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் பிரபல ரவுடி சஞ்சய் ராஜு என்பவரின் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. அத்துடன் கடந்த ஆண்டு ரவுடி சஞ்சய் ராஜூ, ஆவாரம்பாளையத்தில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் வெளிவந்தது. மேலும், இதில் சம்மந்தப்பட்ட ரவுடி கும்பலின் தலைவன் சஞ்சய் ராஜ், தற்பொழுது கோவை சிறையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. தற்பொழுது, இந்த கும்பலுக்கு இடையூறாக பொன் குமார் என்பவர் இருப்பதாக கூறப்படுகிறது. அவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி கடத்திச்சென்று கொலை செய்ய திட்டம் தீட்டி வந்ததாக, சிக்கியவர்கள் போலீசிடம் தெரிவித்தனர். அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கூட்டாளியான செல்வபுரம் வடக்கு ஹவுஸ்சிங் யூனிட்டை சேர்ந்த சல்பல்கான் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கோவையில் உள்ள காவல் நிலையங்களில் கொலை மிரட்டல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

மேலும் சஞ்சய் ராஜ், காஜா உசேன் ஆகியோர் மூளையாக செயல்பட்டு கொலை திட்டத்தை அரங்கேற்ற சதி செய்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த வழக்கிலும் அவர்கள் இரண்டு பேரும் சேர்க்கப்பட்டு உள்ளனர், கைதான 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story

‘மிக கனமழைக்கு வாய்ப்பு’ - வானிலை மையம் கணிப்பு! 

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Chance of very heavy rain Meteorological Center forecast

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இன்று (26.06.2024) ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்படுகிறது. 12 முதல் 20 செ.மீ. வரை மழை பொழிவிற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் நாளை (27.06.2024) ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் இரு மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (26.06.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதே போன்று கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (26.06.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.