
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், வல்லாக்குண்டாபுரம் ஊராட்சி தெற்கு பகுதியை ஒட்டிய மலைப்பகுதி அடிவாரத்தில் பி.ஏ.பி. தண்ணீரை திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லும் காண்டூர் கால்வாயில் காட்டு யானை ஒன்று தவறி விழுந்து விட்டது.
இத்தகவல் உடனே வனத்துறைக்கு தெரிய வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறை குழு ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டயன் செட்டு மூலப்படி அருகில் தண்ணீரில் மூழ்கியும் மிதந்தும் வரும் யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கீழே தோட்டத்தில் வேலை செய்யும் விவசாயி 60 வயதான கார்த்திகேயன் என்பவரும் சம்பவ இடத்திற்கு வந்தார்.
அந்த சமயத்தில் யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட மூன்று வனத்துறை பணியாளர்கள் எதிர்பாராத விதமாக கால்வாய் நீர் ஓட்டத்தில் அடித்து செல்லப்பட்டனர். கிழக்கே சுரங்க கால்வாய் உள்ளதால் விபரீதம் புரிந்து, தான் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து ஒரு முனையை பிடித்து கால்வாய் தண்ணீரில் அடித்து செல்லப்படும் வனபணியாளர் முன் வீசினார் விவசாய கார்த்திகேயன். அவர் வேட்டியை பிடித்து ஒருவர் மேலே ஏறி வந்தார். அடுத்து கீழே கிடந்த மரக்கழி ஒன்றை எடுத்துக்கொண்டு வனவருடன் பைக்கின் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டார்.
தனக்கு முன்னே தண்ணீரில் அடித்து செல்லும் இருவரை காப்பாற்ற பைக்கில் வேகமாக சென்று அவர்கள் முன் அந்த மரக்கழியை இருவரும் நிட்டியுள்ளனர். இதில் ஒருவர் மட்டும் அதை பிடித்து ஏறி உயிர் தப்பினார். இன்னொரு வனவர் சுரங்கப்பாதை வழியாக அடித்து செல்லப்பட்டார். அடித்துச் செல்லப்பட்ட அந்த வனவரின் உடலும், கால்வாயில் விழுந்த யானையும் நேற்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தனது 60 வயதில் இருமனித உயிர்களை காப்பாற்றிய விவசாயி கார்த்திகேயனை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.