Skip to main content

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட வனவர்கள்... தனது வேட்டி மூலம் காப்பாற்றிய 60 வயது விவசாயி!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020
 tiruppur district udumalai taluk - Farmer -



திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், வல்லாக்குண்டாபுரம் ஊராட்சி தெற்கு பகுதியை ஒட்டிய மலைப்பகுதி அடிவாரத்தில் பி.ஏ.பி. தண்ணீரை திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லும் காண்டூர் கால்வாயில் காட்டு யானை ஒன்று தவறி விழுந்து விட்டது.


இத்தகவல் உடனே வனத்துறைக்கு தெரிய வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறை குழு ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டயன் செட்டு மூலப்படி அருகில் தண்ணீரில் மூழ்கியும் மிதந்தும் வரும் யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கீழே தோட்டத்தில் வேலை செய்யும் விவசாயி 60 வயதான கார்த்திகேயன் என்பவரும் சம்பவ இடத்திற்கு வந்தார்.

 

 


அந்த சமயத்தில் யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட மூன்று வனத்துறை பணியாளர்கள் எதிர்பாராத விதமாக கால்வாய் நீர் ஓட்டத்தில் அடித்து செல்லப்பட்டனர். கிழக்கே சுரங்க கால்வாய் உள்ளதால் விபரீதம் புரிந்து, தான் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து ஒரு முனையை பிடித்து கால்வாய் தண்ணீரில் அடித்து செல்லப்படும் வனபணியாளர் முன் வீசினார் விவசாய கார்த்திகேயன். அவர் வேட்டியை பிடித்து ஒருவர் மேலே ஏறி வந்தார். அடுத்து கீழே கிடந்த மரக்கழி ஒன்றை எடுத்துக்கொண்டு வனவருடன் பைக்கின் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டார்.
 

 

தனக்கு முன்னே தண்ணீரில் அடித்து செல்லும் இருவரை காப்பாற்ற பைக்கில் வேகமாக சென்று அவர்கள் முன் அந்த மரக்கழியை இருவரும் நிட்டியுள்ளனர். இதில் ஒருவர் மட்டும் அதை பிடித்து ஏறி உயிர் தப்பினார். இன்னொரு  வனவர் சுரங்கப்பாதை வழியாக அடித்து செல்லப்பட்டார். அடித்துச் செல்லப்பட்ட அந்த வனவரின் உடலும், கால்வாயில் விழுந்த யானையும் நேற்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தனது 60 வயதில் இருமனித உயிர்களை காப்பாற்றிய விவசாயி கார்த்திகேயனை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜிஎஸ்டி குறித்து கேள்வி; இளம்பெண் மீது பாஜகவினர் தாக்குதல்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Question about GST; BJP issue on young girl

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் திருப்பூர் ஆத்துப்பாளையத்தில் பிரசாரத்துக்கு சென்ற பாஜகவினரிடம் சானிட்டரி நாப்கினுக்கு கூட ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது பற்றி இளம்பெண் சங்கீதா என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பாஜகவினர் இளம் பெண்னிடம் தகாத வார்த்தைகளில் பேசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகி சின்னசாமி என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சங்கீதா வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முதலில் கோவையில் பாஜக வன்முறை. அடுத்து திருப்பூரில் கோழைத்தனமாக தன்னந்தனியாக நின்ற ஒரு இளம் பெண் மீது கொலைவெறித் தாக்குதல். கோவையில் பாஜகவுக்கு தோல்வி நிச்சயம் என்றதும் வன்முறை வெறியாட்டம் ஆடத் துவங்கியுள்ளது பாஜக. திருப்பூரிலும் ஒரு பெண்மணி ஜி.எஸ்.டி அநியாயங்கள் குறித்து துணிவாகவும் நேர்மையாகவும் கேட்டதற்கு பா.ஜ.க.வின் 5 தடியர்கள் சேர்ந்து அந்த இளம் பெண்ணை தாக்கியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்த அடாவடி அராஜகக் கூட்டம் அமைதியான கோவை - திருப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் தேவையா? சிந்தியுங்கள் என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

Question about GST; BJP issue on young girl

முன்னதாக கோவை மாவட்டம் சிங்காநல்லுர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவாரம்பாளைம் 28ஆவது வார்டு பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி நேற்று (11.04.2024) இரவு 10.40 மணியளவில் பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தட்டிக்கேட்ட திமுகவினரை பாஜகவினர் அடித்து உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாஜகவைச் சார்ந்த ஆனந்தகுமார், மாசானி உள்ளிட்டோர் மீது 294 பி, 323, 147 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து; 5 பேர் பலியான சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
incident for tirupur vellakoil car and govt bus

திருப்பூரில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையம் என்ற பகுதியில் திருப்பூரில் இருந்து திருச்சிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே போன்று திருப்பூரில் உள்ள நல்லிக்கவுண்டன் வலசு என்ற பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது காரில் குடும்பத்தினர் 6 பேருடன் பயணம் செய்துள்ளார். இவர்கள் திருக்கடையூரில் உள்ள கோவிலுக்கு ஆன்மிக பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் தான் ஓலப்பாளையத்தில் இன்று (09.04.2024) அதிகாலை நேருக்கு நேர் எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே  காரில் பயணித்த இளவரசன் (வயது 26), சந்திரசேகரன் (வயது 60), சித்ரா (வயது 57), அறிவித்ரா (வயது 30) மற்றும் 3 மாத பெண் குழந்தை சாக்சி ஆகிய 5 பேரும் உயிரிழந்தனர். மேலும் சசிதரன் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வெள்ளக்கோயில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.