
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று ரயில்வே துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று தமிழ்நாட்டுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதாக விசிக நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பத்திரிகையாளர்கள் அகில இந்திய அளவில் 3000 க்கும் மேற்பட்டவர்கள் CONCESSION என்கிற சலுகையோடு பயணித்து வந்தார்கள். 60 வயதுக்கு மேலான மூத்தவர்களும் அந்த சலுகையை பெற்று வந்தார்கள். அந்த சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்.
தென்னிந்திய மாநிலங்களை இணைக்க கூடிய வகையில் சரக்கு வாகனங்களுக்கான FREIGHT CORRIDOR என்கிற தனிப் பாதையை உருவாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
விமானத்தில் பயணச்சீட்டு பதிவு செய்கிற போது நேரத்திற்கு தகுந்த மாதிரி DYNAMIC PRICING அந்த கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கை உள்ளது. அதுபோல ரயிலிலும் DYNAMIC PRICING என்பது நடைமுறையில் இருக்கிறது. அதனை முற்றாக கைவிட வேண்டும். FIXED RATE என்கிற பழைய நடைமுறையே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக ராஜதானி, சதாப்தி, டுரோண்டா எக்ஸ்பிரஸ் போன்றவற்றில் இப்போது இது நடைமுறையில் இருக்கிறது. இதனால் எளிய மக்கள் பயன்பெற முடியாத நிலை இருக்கிறது.
ரயில்வே சொத்துக்களை விற்பனை செய்வது தனியாருக்கு தாரை வார்ப்பது போன்ற நடவடிக்கைகளில் ரயில்வே துறை ஈடுபட்டு வருகிறது. அவ்வாறு செய்கிற போது மாநில அரசுகளின் கருத்தை கேட்பதில்லை. ரயில்வே துறைக்கு இடம் கொடுப்பது மாநில அரசு தான். அது மாநிலங்களுக்கான சொத்து, ஆகவே அதை விற்பனை செய்யக்கூடிய நிலை வந்தால் மாநில அரசின் ஒப்புதலை பெற வேண்டும். அல்லது மாநில அரசுக்கே மலிவு விலையில் கொடுக்க வேண்டும். மாநில அரசு அதை ஏற்க இயலாது என்ற நிலை வந்தால் அதை விற்கும்போது மாநில அரசுக்கு உரிய பங்கை தர வேண்டும் என்று வலியுறுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.
மும்பை போன்ற அயல் மாநிலங்களில் வசிக்கக் கூடிய தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி பயணம் செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள். மும்பை வாழ் தமிழர்கள் முக்கியமான இரண்டு விரைவு வண்டிகளுக்கான நீட்டிப்பை வலியுறுத்துகிறார்கள். மும்பையில் இருந்து சென்னை வருகிற ரயில்கள் தென் தமிழகத்திற்கு போவதில்லை. ஆகவே மும்பை சென்னை விரைவு வண்டியை (22159) நெல்லை வரையில் நீட்டிக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுகிறேன்.
அதேபோல் 22113 மும்பையில் இருந்து கொச்சி வரையிலும் செல்கிற விரைவு ரயிலை நாகர்கோவில் வரையிலும் நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் எனது தொகுதியில் பரங்கிப்பேட்டை கடற்கரை துறைமுகம் கொண்ட ஒரு நகரம் அதற்கு முக்கியமான நான்கு ரயிகளில் 20605, 20606, 17407, 17408 16179, 16180, 16770, 16780 இந்த ரயில்கள் பரங்கிப்பேட்டையில் நின்று செல்வதற்கு ஆவணம் செய்ய வேண்டும். அங்கே 23 ரயில் பெட்டிகள் நிற்கிற அளவுக்கு நடைமேடையை நீட்டிக்க வேண்டும். பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தின் தரத்தை உயர்த்த வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்செந்தூர் விரைவு ரயிலை பூதலூரில் நின்று செல்ல ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.