Skip to main content

“டாஸ்மாக் பார்களை அதிகரிக்கக் கூடாது; அனைத்தையும் மூட வேண்டும்!” - ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 04/01/2022 | Edited on 04/01/2022

 

“Tasmac bars should not be increased; We have to shut down everything ! ” - Ramadoss emphasis

 

“அமைச்சர் கூறுவதைப்போல 1,551 பார்கள் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்திருந்தால், அவற்றை நிரந்தரமாக மூடுவதுதான் மக்கள் நல அரசுக்கு அழகும், அடையாளமும் ஆகும். மாறாக, அவற்றைச் சட்டப்பூர்வ குடிப்பகங்களாக மாற்றுவது மது வணிகத்தைத் தாராளமயமாக்கும் செயல்தான்” என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 

அதில் அவர் கூறியிருப்பதாவது; “தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்த பார் நடத்தும் உரிமங்களை வழங்குவதற்கான நடைமுறைகள் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இது தொடர்பான  குற்றச்சாட்டுகளும், அவற்றுக்கு அரசு அளித்துள்ள விளக்கங்களும் ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் பார்களின் எண்ணிக்கை ஓசையின்றி உயர்த்தப்பட்டுள்ளன. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

டாஸ்மாக் பார்களில் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை திண்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி மதுப்பாட்டில்களை சேகரிப்பதற்கான உரிமங்களை வழங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி தொடங்கி, 30-ஆம் தேதி வரை பெறப்பட்டன. ஒப்பந்தப் புள்ளிகள் டிசம்பர் மாத இறுதியில் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

 

உரிமம் வழங்குவதில் மிகப்பெரிய முறைகேடுகள் நடப்பதாகவும், பெயரளவில் ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டாலும்கூட, ஒட்டுமொத்த உரிமங்களையும் ஒரு தரப்புக்கு வழங்க மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் தீர்மானித்திருப்பதாகவும், இது குறித்த முடிவுகளை குறிப்பிட்ட சிலர் மட்டுமே தீர்மானிப்பதாகவும் பார் நடத்துவதற்காக ஒப்பந்தப்புள்ளிகள் தாக்கல் செய்துள்ளவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்களில் ஒருதரப்பினர் அமைச்சரின் வீட்டு முன் நேற்று போராட்டம் நடத்தியுள்ளனர்.

 

மது பார் நடத்துவதற்கான உரிமம் வழங்குவது தொடர்பான விஷயத்தில் எழுந்துள்ள புகார்களை அமைச்சர் மறுத்திருக்கும் போதிலும்கூட, இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பது அனைவரும் அறிந்ததுதான். இது குறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், அதையும் கடந்து நமது கவலை என்பது தமிழ்நாட்டில் மது தாராளமயமாக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான்.

 

தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 7 ஆயிரத்திற்கும் கூடுதலான மதுக்கடைகளும், 4500-க்கும் அதிகமான பார்களும் இருந்தன. பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களின் காரணமாக அவற்றின் எண்ணிக்கை கடந்த ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி, முறையே 5,402 மதுக்கடைகள், 2,808 பார்களாக குறைந்தன. அவற்றிலும் இப்போது 5,387 மதுக்கடைகளும், 2,168 பார்களும் தான் செயல்பட்டு வருகின்றன. இயல்பாக அந்தப் பார்களுக்கு மட்டும் தான் உரிமம் வழங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை டாஸ்மாக் கோரியிருக்க வேண்டும்.

 

ஆனால், அவற்றுடன் கூடுதலாக 1551 பார்களுக்கும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருக்கின்றன. மேற்கண்ட 1551 பார்களும் ஏற்கனவே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தவைதான் என்றும், அவற்றை இப்போது சட்டப்பூர்வமாக்கும் நோக்கத்துடன் அவற்றுக்கும் உரிமம் வழங்கப்படவுள்ளதாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் விளக்கம் அளித்திருக்கிறார். அது மக்கள் நலன் சார்ந்த விளக்கமல்ல. மாறாக வணிக நோக்கம் கொண்ட விளக்கம் ஆகும். அதை ஏற்கவே முடியாது.

 

அமைச்சர் கூறுவதைப்போல 1,551 பார்கள் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்திருந்தால், அவற்றை நிரந்தரமாக மூடுவது தான் மக்கள் நல அரசுக்கு அழகும், அடையாளமும் ஆகும். மாறாக, அவற்றைச் சட்டப்பூர்வ குடிப்பகங்களாக மாற்றுவது மது வணிகத்தை தாராளமயமாக்கும் செயல்தான். மதுக்கடைகள் மற்றும் பார்களை நடத்துவது டாஸ்மாக் நிறுவனத்தின் பணி என்றாலும்கூட, தமிழ்நாட்டில் மதுவுக்கு நிலவும் கடுமையான எதிர்ப்பு காரணமாக, மதுக்கடைகள், பார்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையையும், மது விற்பனை நேரத்தையும் கூட்டுவதாக இருந்தாலும், குறைப்பதாக இருந்தாலும் அது கொள்கை முடிவாகவே எடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் 1,551 புதிய பார்களை திறப்பது தமிழக அரசின் கொள்கை முடிவா அல்லது அமைச்சரின் தனி முடிவா என்பதை அரசு விளக்க வேண்டும்.

 

மது பார்களை மது அருந்துவதற்கான இடமாக மட்டும் பார்க்க முடியாது. மது விற்பனையை தீர்மானிப்பதில் பார்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பார்கள் இல்லாத மதுக்கடைகளுடன் ஒப்பிடும் போது பார்களுடன் இணைக்கப்பட்ட மதுக்கடைகளில் அதிக அளவில் மது விற்பனை நடக்கிறது. மேலும், மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் நேரங்களிலும், நாள்களிலும் கூட பார்களில் மது விற்பனை நடக்கும். அதனால், பார்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மது வணிகத்தையும், அதனால் குடும்பங்கள் சீரழிவதையும், குற்றங்கள் பெருகுவதையும் அதிகரிக்கும். அது தவிர்க்கப்பட வேண்டும்.

 

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த 40 ஆண்டுகளாக போராடி வருகிறேன். தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை ஆட்சிக்கு வரவில்லை என்றாலும்கூட, மதுக்கடைகளின் எண்ணிக்கை மற்றும் விற்பனை நேரத்தை குறைப்பதில் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி, அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்கை தங்களின் கொள்கையாக ஏற்றுக்கொள்ள வைப்பதிலும் பா.ம.க. வெற்றி பெற்றுள்ளது. 2021 தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான பிறகும்கூட, தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். அதற்கு மாறாக குடிப்பகங்கள் அதிகரிக்கப்படுவது தவறு.

 

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்துவதை நோக்கிதான் அரசு பயணிக்க வேண்டும். அதற்கு முரணாக பார்களின் எண்ணிக்கையை உயர்த்தக்கூடாது. மாறாக, அனைத்து மது பார்களையும் மூடி, மதுவிலக்கை நோக்கிய பயணத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.