ஊரடங்கினால் அவதிக்கு ஆளாகிவரும் மக்கள், ‘எடப்பாடி ஏன் இப்படி?’ என்று கேள்வி கேட்கின்றனர். சில நாட்களுக்கு முன், உணவு, அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை, அரசியல் கட்சியினர் நேரடியாக வழங்குவதற்குத் தடை விதித்தது தமிழக அரசு. இதனை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதற்கு, நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாலேயே இந்தக் கட்டுப்பாடு என்று அரசு விளக்கம் அளித்தது. உயர் நீதிமன்றமோ, அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வலர்கள் கரோனா நிவாரண உதவிகளை வழங்கிட அரசின் அனுமதியே தேவையில்லை என்று உத்தரவிட்டது.
தற்போது, சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில பகுதிகளில் முழு ஊரடங்கு என்று அறிவித்தது தமிழக அரசு. அதனால், அனைத்துக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்தது.
"முழு ஊரடங்கை முன்கூட்டியே அறிவித்திருக்கலாம். ஒருநாள் முன்னதாக அறிவித்திருக்கலாம். போதிய கால அவகாசம் கொடுக்கப்படாததால்தான் இந்த அளவுக்குக் கூட்டம் கூடியிருக்கிறது. இதனால் ஏற்படும் விளைவுக்கு யார் பொறுப்பேற்பது? நெரிசலைத் தவிர்ப்பதற்கு, கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து, தனிமனித விலகலுடன் மக்கள் பொருட்களை வாங்க உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்..’ என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியவுடன், "பொதுமக்களின் வசதிக்காக, இன்று (25-4-2020) மட்டும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது.’ என்று அறிவித்துள்ளார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
கரோனா பரவல் தடுப்பு என்ற எச்சரிக்கை மிகுந்த காலகட்டத்தில், அரசு அவசரகதியில் முடிவெடுத்து நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள், எதிர்க்கட்சித் தலைவர் இடித்துரைத்த பிறகே திருத்திக்கொள்ளப்படுகிறது. இதனால்தான், "முன்கூட்டியே தீர ஆலோசித்து ஒரு முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார் .." எனத் தொடர்ந்து விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி.