Skip to main content

குடும்ப அட்டை உள்பட மோடியின் 'ஒரே...ஒரே' பிதற்றல்கள், இன்றைய ஸ்டீபன் ஹாக்கிங் காலத்தை சேவேஜெரி காலத்திற்குப் பின் தள்ளுவதே?- 'வேல்முருகன்'.

Published on 01/07/2019 | Edited on 01/07/2019

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிறப்பின் அடிப்படையில் மனிதரில் உயர்வு- தாழ்வு. இதைக் கட்டிக் காப்பதற்கென்று ஒரு கட்சி. பாஜக என்கின்ற சனாதனக் கட்சி! ஆகச் சிறுபான்மை ஒட்டுண்ணிக் கும்பல் ஆதிக்கம் செலுத்த, மோடி உள்பட மொத்த சூத்திரரும் அவர்களுக்குத் தொண்டூழியம் செய்ய, ஆர்எஸ்எஸ்ஸால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி! அந்த வேலையைத் தான், மோசடித் தேர்தல் நடத்தி மீண்டும் ஆட்சியைப் பிடித்து தொடர்கிறது மத்திய பாஜக மோடி அரசு. ஏற்கனவே ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே வரி, ஒரே தேர்தல், ஒரே கல்வி என்று சொல்லிவரும் மோடி, இப்போது ஒரே குடும்ப அட்டை என்றும் சொல்கிறார்.

 

 

ஆனால் ஒரே சாதி என்று மட்டும் அவர் சொல்வதில்லை, சொல்லவும் மாட்டார். ஏன் இந்த ஒரே... ஒரே...? எல்லா வகையிலும் ஏற்றத் தாழ்வு நிலவும் இந்த சமூகம், மாறாமல் அப்படியே தொடர வேண்டும் என்ற கெட்ட புத்திதான், மாநிலங்களை வெறும் நிர்வாக அலகுகளாக மாற்றி, மத்தியிலேயே அதிகாரமனைத்தையும் குவித்துக்கொள்ளும் பாசிச உத்திதான். 2016 நவம்பரில் வந்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்தான் நாடு முழுவதும் இந்த ஒரே குடும்ப அட்டை திட்டத்தைக் கொண்டு வருவதாகச் சொல்லும் மோடி அரசு, மாநிலங்கள் இதை ஓராண்டிற்குள் அமல்படுத்த வேண்டும் எனக் கெடு விதித்திருக்கிறது.

 

 

tamilaga valvurimai katchi velmurugan said one nation, one ration card

 

 

 

இந்தக் குடும்ப அட்டைக்கு எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பொருள் வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லும் மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், இதுதான் இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கான முதன்மை நோக்கம் என்கிறார். அப்படியானால், தமிழகத்திற்கு நாள்தோறும் படையெடுக்கும் வடமாநில இந்திக்காரர்களைக் கணக்கில் கொண்டே இத்திட்டம் என்பது தெளிப்பு. வடமாநிலத்தவர் வருகையை கட்டுப்படுத்த இங்குள்ள மத்திய, மாநில வேலைவாய்ப்புகளை பிற மாநிலத்தவர்க்கல்லாமல் தமிழர்களுக்கே முறையே 95 மற்றும் 100 விழுக்காடு அளிக்க, சட்டம் இயற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்தி போராடி வருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

 

 

ஆனால் அதற்கு நேர் மாறாக வட மாநிலத்த வரைத் தமிழகத்தில் குவிக்கவும், அவர்களுக்கு குடும்ப அட்டை உள்பட அனைத்து வசதிகளை ஏற்படுத்தவும் வகை செய்கிறது மோடி அரசு. இதற்கு இணங்கி விடக்கூடாது என தமிழக அரசை எச்சரிக்கை செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. மாநில உரிமையைப் பறித்து, கூட்டாட்சி முறையினை அழித்து, ஜனநாயகத்தையே குழி தோண்டிப் புதைக்கும் மோடியின் ஒரே... ஒரே... பிதற்றல்கள், இன்றைய ஸ்டீபன் ஹாக்கிங் காலத்தை சேவேஜெரிகாலத்திற்குப் பின் தள்ளுவதே? எனவே இதனைக் கண்டனம் செய்கிறோம், கைவிடக் கோருகிறோம் என இவ்வாறு தனது அறிக்கையில் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்