Skip to main content

சிலை செய்யும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அறிவித்த தமிழ்நாடு முதல்வர்!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

Tamil Nadu Chief Minister announces relief for idol making workers

 

தமிழ்நாடு அரசின் 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் 21.06.2021 அன்று தொடங்கியது. அவையைத் தொடக்கி வைத்துப் பேசிய ஆளுநர், தமிழ்நாடு அரசின் பல்வேறு முக்கிய அம்சங்களையும், திட்டங்களையும் விவரித்தார். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு தினமும் ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில், செப் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு அரசு அனுமதியளிக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

 

இந்நிலையில், பேரவையில் பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, “தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் வழிபாடு, ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என தெரிவித்தார். இதற்குப் பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, “கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க தேவையான கட்டுப்பாடுகளை செப் 30ஆம் தேதிவரை தொடர்ந்து நடைமுறைப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றமும் அதைத்தான் குறிப்பிட்டு காட்டியுள்ளது. கேரளாவில் ஓணம், பக்ரீத் கொண்டாட்டங்களுக்கு அதிக அளவில் மக்கள் கூட அனுமதி அளித்ததால்தான், அங்கு கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் இன்றுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை முழுமையாக தடுக்கப்படவில்லை.

 

அந்த எண்ணிக்கை ஒருநாளுக்கு 50 ஏறுவதும், குறைவதுமாக இருந்துவருகிறது. எனவேதான் மக்களின் பாதுகாப்பு, நலனைக் கருத்தில் கொண்டு செப். 15ஆம் தேதிவரை அனைத்து சமய விழாக்களையும் கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது விநாயகர் சதுர்த்திக்கும் பொருந்தும்.

 

நமது மாநிலத்தில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டுவரும் 12 ஆயிரம் தொழிலாளர்களுக்கு, மழைக் காலத்தில் தொழில் செய்ய இயலாத நிலையில், அவர்களுக்கு நிவாரணமாக 5 ஆயிரம் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகிறது. இவர்களில் சுமார் 3 ஆயிரம் பேர் திருவிழாக் காலங்களில் விநாயகர் சிலைகளை செய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கரோனா தொற்றால் பொது இடங்களில் விழாக்கள் கொண்டாட விதிக்கப்பட்ட தடையால், தங்கள் தொழிலை மேற்கொள்ள இயலாத நிலையில், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மழைக்கால பாதிப்பு நிவாரணத் தொகையுடன் மேலும் 5 ஆயிரம் சேர்த்து மொத்தம் 10 ஆயிரம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்” என முதல்வர் அறிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.