Skip to main content

மகனின் மரணத்தில் சந்தேகமடைந்த தந்தை... நண்பர்களை தீவிர விசாரணை செய்துவரும் காவல்துறையினர்!

Published on 02/08/2021 | Edited on 02/08/2021

 

Suspected father in son's death ... Police are conducting a serious investigation into friends

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சைப் பிள்ளை. இவரது மகன் ஆனந்தராஜ், வயது 24. இவர், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் பிரகாஷ், அபி, மகேந்திரன், ஆகாஷ் ஆகியோருடன் மலைக்கோட்டாலம் அருகே ஓடும் கோமுகி ஆற்றுப்பகுதிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் ஆனந்தராஜ், ஆற்றில் மூழ்கிய நிலையில் இறந்துகிடந்துள்ளார். இந்தத் தகவல் அவரது தந்தைக்குத் தெரியவந்தது. உடனடியாக உறவினர்களை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று ஆனந்தராஜ் உடலை ஆற்றுத் தண்ணீரிலிருந்து மீட்டனர். இதுகுறித்து உடனடியாக வரஞ்சரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. ராஜலட்சுமி, வரஞ்சரம் சப் - இன்ஸ்பெக்டர் பாரதி உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்றனர்.

 

பின்னர் ஆனந்தராஜ் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அவரது தந்தை வரஞ்சரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், தனது மகனுடன் சென்ற அவரது நண்பர்கள் பிரகாஷ், அபி ஆகியோர் குடிபோதையில் இருந்துள்ளனர். அதனால் இவர்கள் குடிபோதையில் இருக்கும்போது அவர்களுக்குள் ஏதாவது தகராறு ஏற்பட்டு அதில் என் மகன் மீது தாக்குதல் நடத்தியதால் அவர் இறந்திருக்கலாம். எனவே இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார், வழக்குப் பதிவுசெய்து சந்தேகத்தின் பெயரில் ஆனந்தராஜ் நண்பர்களான பிரகாஷ், அபி, ஆகாஷ், மகேந்திரன் ஆகிய 4 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.

 

நண்பர்களுடன் சென்று மது பார்ட்டியில் கலந்துகொண்டதில் அவர்களுக்குள் போதை அதிகமாகி ஏற்பட்ட தகராறில் ஆனந்தராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது மதுபோதையில் குளிக்கச் செல்லும்போது ஆற்றுத் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம்... இப்படி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், இறப்புக்கான காரணம் பிரேதப் பரிசோதனையில் தெரியவரும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. நண்பர்களுடன் சென்ற இளைஞர், உயிரிழந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்