Skip to main content

லட்சக் கணக்கில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர்; கையும் களவுமாகப் பிடித்த அதிகாரிகள்

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

 sub registrar who took lakhs of bribes was arrested

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் லட்சக் கணக்கில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி தேவநாதன் தலைமையில் பதிவுத்துறை அலுவலகத்தில் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர்.

 

அப்போது முதற்கட்டமாக, கணக்கில் வராத 3.50 லட்சம் ரூபாய் பணம் இருப்பதைக் கண்டறிந்து, அது தொடர்பாக சார்பதிவாளர் சங்கீதா மற்றும் புரோக்கர் உதயகுமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் கைப்பற்றப்பட்ட பணம், நிலங்களைப் பதிவு செய்ய வந்த மக்களிடம் பெற்ற லஞ்சப் பணம் என்பது தெரியவந்தது.

 

மேலும் தீவிரமாக நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விருத்தாசலம் சார் பதிவாளர் சங்கீதா நாள்தோறும் அலுவலகத்திற்குப் பத்திரப் பதிவு செய்வதற்கு வரக்கூடிய பொது மக்களிடம் வாங்கும் லஞ்சப் பணத்தை, இரண்டு அல்லது மூன்று லட்சமாக சேர்த்து உளுந்தூர்பேட்டையில் உள்ள திருப்பதி திருமலை நகரில் 10 (Flate) வீட்டு மனைகள் வாங்கியுள்ளதாகவும், அதற்காக ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு தான் வாங்கிய லஞ்சப் பணத்தை, ஜி-பே, வங்கி பரிவர்த்தனை மூலம் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் அனுப்பியதும் தெரிய வந்தது. அவ்வாறு 42 லட்ச ரூபாய் பணத்தை அனுப்பியதும் தெரிய வந்தது. அதன் ஒரு பகுதியாக நேற்று ரியல் எஸ்டேட் நில உரிமையாளரிடம்  கொடுக்க வைத்திருந்த லஞ்சப் பணமான 3.50 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையின் போது பிடித்தனர். மேலும் அதற்கு உறுதுணையாக இருந்த புரோக்கர் உதயகுமாரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரித்தனர்.

 

சுமார் 5 மணி நேர விசாரணைக்குப் பின்பு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், முதற்கட்டமாக கூறிய 3.50 லட்சம் ரூபாயுடன் சேர்த்து மொத்தமாக 8.10 லட்ச ரூபாய் கைப்பற்றியதாகவும்,  ஆனால் கைப்பற்றப்பட்ட பணம் கணக்கில் வராத பணமா? அல்லது அலுவலகத்தில் மறைத்து வைக்கப்பட்ட பணமா? அப்பணத்தை எங்கிருந்து கைப்பற்றினார்கள்? என விசாரணைக்குப் பின் தெரியவரும் எனக் கூறினர்.

 

மேலும் விருத்தாசலம் சார் பதிவாளர் சங்கீதா மற்றும் புரோக்கர் உதயகுமாரை இன்று(01.09.2023) மீண்டும் விசாரணைக்கு வரச் சொல்லி உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறினர். விருத்தாசலம் சார் பதிவாளர் சங்கீதா மற்றும் புரோக்கர் உதயகுமார் ஆகியோர் இணைந்து நிலம் பத்திரப் பதிவு செய்ய வந்த பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கி உளுந்தூர்பேட்டையில் கோடிக்கணக்கான மதிப்பிலான வீட்டு மனைகளை வாங்கி இருப்பதும், அதற்காக ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மூலம் 42 லட்ச ரூபாய் பணம் அனுப்பியதும் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.