Skip to main content

3 நாட்களாக வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் சுதந்திரதினத்தையும் புறக்கணித்தார்கள்

Published on 15/08/2018 | Edited on 27/08/2018


புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள உப்பிலியக்குடி கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 10 ம் வகுப்பு மாணவர்கள் 75 பேர் உள்பட சுமார் 316 மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர். இந்த உயர்நிலைப் பள்ளியை  மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினால் படிப்புக்காக சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீரனூர் மற்றும் புத்தாம்பூருக்கு செல்ல வேண்டியதில்லை. அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்று கடந்த 4 ஆண்ண்டுகளுக்கு முன்பு தமிழக அரசிடம் வைப்புத் தொகை ரூ. 2.20 லட்சத்துடன் விண்ணப்பித்தனர்.

 

school

 

 

 

மேலும், பள்ளி நேரத்துக்கு கீரனூர் செல்ல ஒரு பேருந்து மட்டுமே உள்ளதாலும் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாலும் இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென கடந்த 5 ஆண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது.

பல வருடங்களாக காத்திருந்த மக்களிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விழாவுக்கு வந்த கந்தர்வகோட்டை தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆறுமுகம்.. இந்த கல்வி ஆண்டில் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என்று உறுதியாக கூறினார். ஆனால் இந்த கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியலில் உப்பிலியக்குடி பள்ளியின் பெயர் இல்லை.

 

 

பள்ளி உயர்த்தப்படாததால் கிராம மக்கள் ஆகஸ்ட் 10 ம் தேதியில் இருந்து பள்ளிக்கு மாணவர்களை அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்று பள்ளி முன்பு பெற்றோர்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் பிறகு அங்கு வந்த சில அதிகாரிகள் சமாதானம் செய்தும் பயனில்லை. தொடரிந்து மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற சுதந்திரதின விழாவில் 316 மாணவர்களில் வெளியூர் மாணவர்கள் 15 பேர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். 301 மாணவ, மாணவிகள் சுதந்திரதினத்தையும் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

 

school

 

 

 

இந்த பள்ளியில் கடந்த ஆண்டு வரை சுதந்திர தினத்தில் கலை நிகழ்ச்சிகள்,  பேச்சு, கட்டுரை, விளையாட்டு போட்டிகள் என பல்வேறு  நிகழ்ச்சிகள் மாலை வரை நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசும் பாராட்டும் வழங்கி சிறப்பித்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு எந்த நிகழ்வும் இல்லை. அதனால் சுதந்திரதின விழா, உற்சாகமின்றி 10 நிமிடங்களில் முடிவடைந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

 

 

மேலும், பள்ளி முன்பு திரண்ட கிராம பொது மக்கள் பள்ளியை உடனே தரம் உயர்த்த வேண்டும் என்று முழக்கமிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாத பல பெற்றோர்கள் கூறும் போது.. உப்பிலியக்குடி மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகிறார்கள். இங்கு 10 ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் மேல்நிலைப் பள்ளிக்கு 10 கி.மீ தூரத்தில் உள்ள கீரனூர் போகனும். அதற்கும் ஒரு பேருந்து தான் உள்ளது. அந்த பேருந்தும் பல நாட்கள் தாமதமாக வரும் அல்லது வராமலும் நின்றுவிடும். அதனால் மாணவர்களை ஏதாவது பைக்குகளில் ஏற்றிச் செல்ல வேண்டும். தேர்வு நேரங்களில் மிகவும் சிரமம்.

 

 

பொது தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளுக்கு போகவும சிரமமாக உள்ளது. அதனால் தான் எங்கள் ஊருக்கே மேல்நிலைப் பள்ளியை கொடுங்கள் என்று கேட்டு வைப்புத் தொகையும் கட்டி 4 வருசமாச்சு. தரம் உயர்த்தல. எம்.எல்.ஏ ஆறுமுகம் கூட ஓட்டுப் போட்ட எங்களை ஏமாற்றிவிட்டார். அதனால தான் 4 தொடக்கப்பள்ளி ஒரு உயர்நிலைப் பள்ளி என்று அனைத்து பள்ளிக்கும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்தோம். இன்று சுதந்திர தினத்தையும் புறக்கணித்தோம். எதற்கு நல்ல தீர்வு கிடைக்கவில்லை. பள்ளி தரம் உயர்த்தும் வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை என்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

அரசுப் பள்ளி உணவில் அரணை; 92 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Food unsecurity in government school; 92 students admitted to hospital

சிதம்பரம் அருகே சாக்கான்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சாத்தங்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியில் பிப்ரவரி 12 ஆம் தேதி திங்கட்கிழமை மதிய உணவு பரிமாறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில், பள்ளியின் ஆசிரியர்கள் அவர்களை அழைத்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர்.

தொடர்ந்து மாணவர்கள் அதிகமானோர் மயங்கியதால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நடந்த சோதனையில் உணவில் அரணை விழுந்தது தெரியவந்தது. சிதம்பரம் அரசு மருத்துவமனை, புவனகிரி  மருத்துவமனை, சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் 92 மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவ - மாணவிகளுக்கு ஆபத்து இல்லை என மருத்துவர் தரப்பில் கூறப்படுகிறது.

Food unsecurity in government school; 92 students admitted to hospital

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் தலைமையில் சாத்தங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள சேதமடைந்த உணவுக் கூடத்தை சரி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட சமையலர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களை விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி உணவுக் கூடங்களைத் திடீரென ஆய்வு மேற்கொண்டு குறைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில் உள்ள சிதம்பரம் - பிச்சாவரம் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து போகச் செய்தனர். இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, நகரச் செயலாளர் ராஜா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.