Skip to main content

அரசுடைமையான இளவரசி, சுதாகரன் சொத்துக்கள்... கலெக்டர் நேரில் ஆய்வு (படங்கள்)

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துகள் அரசுடைமையாக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்த நிலையில் தற்பொழுது அவை அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

 

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் 14/02/20217 அன்று வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின் படி, சென்னை வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட இளவரசி, சுதாகரனின் பெயரிலுள்ள 6 சொத்துகள் அரசின் சொத்து என உரிமை மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை டிடிகே சாலை ஸ்ரீராம் நகரில் உள்ள லெக்ஸ் பிராப்பர்டி, டெவலப்மெண்ட் நிறுவனத்தின் பெயரில் உள்ள சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. சென்னை வாலஸ் தோட்டத்திலுள்ள 5 சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்று  (08/02/2021) சசிகலா தமிழகம்  வந்துகொண்டிருக்கும் நிலையில் அவரது உறவினர்களுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள வேலஸ் தோட்டம் 1 வது தெருவில் கிருஷ்ணா சேம்பர்ஸ் என்ற நான்கு மாடி கட்டிடத்தில் இளவரசிக்கு சொந்தமான இடங்களை  அரசு கையகப்படுத்தியதால் இன்று காலை சென்னை மாவட்ட ஆட்சியர் அதனை நேரில் ஆய்வு செய்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

அமித்ஷாவின் சொத்து மதிப்பு?; வெளியான விவரம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Published details Amit Shah's net worth

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி, நேற்று தொடங்கி ஜுன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜுன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. அதில், முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. குஜராத் மாநிலம், காந்தி நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். அதன்படி, அமித்ஷா தனது வேட்பு மனுதாக்கல் செய்தார். அவர் செய்த வேட்புமனுவில் அவருடைய சொத்து மதிப்புடைய பிரமாண பத்திரமும் இணைக்கப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. 

அமித்ஷாவின் பிரமாண பத்திரத்தில், அவருக்கு ரூ.20 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள், ரூ.16 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள், ரூ.72 லட்சம் மதிப்பிலான நகைகள், தனது மனைவியிடம் ரூ.1.10 கோடி மதிப்புள்ள நகைகள் இருப்பதாகவும், சொந்தமாக கார் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமித்ஷாவின் ஆண்டு வருமானம் 2022 - 23 ரூ.75.09 லட்சம் எனவும், அவரது மனைவியின் ஆண்டு வருமானம் ரூ.39.54 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.