Skip to main content

டாக்டர்களின் உரிமைகளுக்காக போராடிய அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் லட்சுமி நரசிம்மன் திடீர் மரணம்!!!

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

சேலம் மாவட்டம் மேட்டூர் ராமன் நகரைச் சேர்ந்தவர் லட்சுமிநரசிம்மன் (50). தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மாணவர்கள் சங்க மாநிலத் தலைவராக இருந்தார். இவர், சேலம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழகம் மு-ழுவதும் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர் லட்சமி நரசிம்மன், சேலத்தில் போராட்டங்களுக்கு தலைமையேற்று நடத்தினார். மற்ற மாவட்டங்களிலும் மருத்துவர்களை போராட்டத்திற்கு ஒன்று திரட்டினார்.

 

 State Doctors Association President Lakshmi Narasimhan passed away



இதையடுத்து, போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்ட 120 மருத்துவர்கள் கட்டம்கட்டப்பட்டு வெவ்வேறு ஊர்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அப்போது, தர்மபுரி அரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் லட்சுமிநரசிம்மனும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இது, மருத்துவர்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கை எனக்கூறி, இடமாற்றம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (பிப். 7) காலையில் அவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரி-ழந்தார். இச்சம்பவம் மருத்துவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சக மருத்துவர்கள் கூறுகையில், ''கடந்த பல ஆண்டுகளாக மருத்துவர்களின் உரிமைகளுக்காக பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் லட்சுமிநரசிம்மன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 15 அம்ச கோரிக்கைகளுக்காக அவர் வழிநடத்திய நடத்திய போராட்டம் அமைச்சர்கள், உயரதிகாரிகள் வரை பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்காக அவரை பழிவாங்குவதற்காக அவரை தர்மபுரி, ராமநாதபுரம் என பணியிடமாற்றம் செய்து வந்தனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம். அதேநேரம் அவருக்கும் புகைக்கும் பழக்கமும் இருந்து வந்தது,'' என்றனர்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி காலமானார்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
mdmk MP Ganesamurthy passed away

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாகத் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். என்ன காரணம் எனத் தெரியாத சூழலில் இதுகுறித்து விசாரித்தபோது அன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது 10.30 மணிக்கு தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார்.