Skip to main content

சமூக சேவகர் மரணத்தில் சந்தேகம்! உடலை அடக்கம் செய்யாமல் உறவினர்கள் போராட்டம்!

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

Social worker - ulundurpettai

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது விஜயங்குப்பம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். பெயிண்டர் வேலை செய்து வரும் இவர் கிராம ஊராட்சியில் கட்டிடங்கள் பராமரிப்பின்மை, பொதுமக்கள் பிரச்சனைகள், அரசு திட்டங்களைக் கிராமங்களில் முறையாகச் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தீவிரமாக இயங்கியவர். மேலும், ஊர் இளைஞர்களுடன் ஒன்று சேர்ந்து அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுப்பது, தீர்க்கப்படாத பிரச்சனைகளைத் தீர்த்து வைக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துவது என ஊர் மக்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்களுக்காக முன்னின்று செயலாற்றியவர்.

 

இந்தநிலையில் இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவருடன் ஒரே பைக்கில் உளுந்தூர்பேட்டைக்கு வந்துள்ளார். ஊர் பிரச்சினை சம்பந்தமாக ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகார்கள் பற்றி வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்துப் புகார் மனு தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார். பிறகு இரவு மீண்டும் பைக்கில் தங்களது ஊருக்குச் சென்றுள்ளனர் பாண்டியன் மற்றும்  மணிகண்டன் ஆகிய இருவரும்.

 

அப்போது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நகர் ரயில்வே மேம்பாலம் அருகே பைக் செல்லும்போது வாகன விபத்தில் சிக்கி மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடன் சென்ற பாண்டியன் காயங்களுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மணிகண்டன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

Social worker - ulundurpettai

 

இதனிடையே மணிகண்டன் மனைவி, தனது கணவர் சாவில் சந்தேகம் உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவர் பொதுநலச் சேவைகள் செய்யும்போது பலர் அவர் மீது காழ்ப்புணர்ச்சியில் இருந்ததாகவும், எனவே அவரது சாவில் சந்தேகம் உள்ளது என்று கூறி உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் மணிகண்டன் விபத்தில் இறந்தாரா? அல்லது வேறு யாரேனும் விபத்து போல் செய்து அவரை கொலை செய்தனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 

இந்தநிலையில் மணிகண்டன் தரப்பினர் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்ட நிலையில் மீதமிருந்த சுமார் 20 சென்ட் காலி இடம் அந்தப் பகுதி மக்களின் தேவைகளுக்காக எதிர்காலத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பள்ளிக் கட்டிடம் நூலகம் ஆகியவை கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த பலராமன் இவரது சகோதரர் ஆசீர்வாதம் ஆகிய இருவரும் அடுக்குமாடி கட்டிடத்தைக் கட்டி வருகின்றனர். 

 

Social worker - ulundurpettai


இது தொடர்பாக மணிகண்டன் பொதுமக்கள் தேவைக்காக இருக்கும் காலி இடத்தை ஆசீர்வாதம் பலராமன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்து அடுக்குமாடி கட்டிடம் கட்டி வருவதாக அரசு அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தார். இது தொடர்பாக அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை மணிகண்டன் தனது ஆதரவாளர்களோடு வந்து உளுந்தூர்பேட்டை வட்டாட்சியரை நேரில் சந்தித்து கட்டுமானப் பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

 

Social worker - ulundurpettai


அதன் பின்பு அன்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் தனது நண்பர் வீரபாண்டியன் என்பவரோடு மணிகண்டன் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை நகர் ரயில்வே மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மணிகண்டனின் இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மணிகண்டன் ரத்த காயத்தோடு உயிரிழந்த நிலையில் வீரபாண்டியன் உயிருக்கு ஆபத்தான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே மணிகண்டன் சென்ற இருசக்கர வாகனத்தின் பின் புறமாக காரில் வந்த ஒரு கும்பல் அவரது இரு சக்கர வாகனத்தில் மோதி இருசக்கர வாகனம் தடுப்புச் சுவரில் மோதிய பிறகு மணிகண்டனும் வீரபாண்டியன் காயமடைந்து கீழே விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால் மணிகண்டன் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உடலை அடக்கம் செய்ய கிராம மக்களும் அவரது உறவினர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

 

Social worker - ulundurpettai

 

இந்த நிலையில் மணிகண்டனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு இன்று காலை அடக்கம் செய்ய இருந்த நிலையில் மணிகண்டன் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மணிகண்டன் மரணத்திற்குக் காரணமான பலராமன் ஆசீர்வாதம் ஆகியோரை கைது செய்ய வேண்டும். அத்துமீறி கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி கட்டிடத்தை இடித்து மணிகண்டன் விருப்பத்தின் பேரில் அந்த இடத்தில் அரசு பொது நூலகம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி மணிகண்டன் உடலை அடக்கம் செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் காதர் அலி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணிகண்டனின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்த பிறகு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

 

http://onelink.to/nknapp


இன்றைய தினமே உடனடியாக அளவீடு செய்து அரசுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி கூறியதைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தைக் கைவிட்ட கிராம மக்கள். பின்னர் அமைதியான முறையில் மணிகண்டனின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.


இதன் காரணமாக அந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை நிலவு வாய்ப்பு இருந்ததால் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 


கிராம மக்களின் தேவைகளுக்காக போராடியும் அரசு அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தும் அந்தக் கிராமத்தில் நடக்கும் அநீதிகள் தொடர்பாகக் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வைத்த மணிகண்டனின் இந்த மர்ம மரணம் அந்தக் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.