Skip to main content

திமுக வேட்பாளரின் விளம்பரம்! - வருத்தத்தில் உடன்பிறப்புகள்!

Published on 13/03/2021 | Edited on 13/03/2021

 

SKV's BJP advertisement; Vedaranyam DMK in grief

 

பாஜகவிலிருந்து வந்தவேகத்தில், வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதிக்கு திமுக வேட்பாளராகியிருக்கிறார், எஸ்.கே.வி. என்கிற வேதரத்தினம். இவர், பாஜகவில் இருந்து திமுகவிற்கு முழுமையாக வந்துவிட்டாலும், அவர் பாஜகவின் முன்னால் வேட்பாளர்தான் என்பதை வெளிச்சம்போட்டு காட்டும்விதமாக அவர் வரைந்த சுவர் விளம்பரங்கள் 3-ஆம் சேத்தி உள்ளிட்ட பல இடங்களில் இன்னும் அகற்றப்படாமல் இருக்கிறது. இது திமுகவினரை வருத்தமடையச் செய்திருக்கிறது.

 

நாகை மாவட்டத்தின் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி திமுகவின் கோட்டையாக இருந்தது. தொடர்ந்து அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்துவந்த வேதரத்தினம், 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிக்கு அத்தொகுதியை ஒதுக்கியதால், தனக்கு சீட் கிடைக்காத கோபத்தில் தனித்துப் போட்டியிட்டு அதிமுகவின் வெற்றிக்கு வித்திட்டார். தற்போது திமுகவில் இருந்துவரும் என்.வி.காமராஜ் எம்.எல்.ஏ. ஆனார். அதேபோல, கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் பாஜவில் ஐக்கியமாகி பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார் வேதரத்தினம். ஆனால், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.எஸ்.மணியன் வெற்றிபெற்று அமைச்சரானார்.

 

இந்தச் சூழலில் சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் மாநிலப் பொறுப்பு கிடைக்காத அதிருப்தியில் இருந்தவர் மீண்டும் திமுகவில் ஐக்கியமானார். வேதரத்தினம் பாஜகவிற்கு சென்றுவந்தவர், வந்தவேகத்தில் திமுக தலைமை சீட் கொடுக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் வேதரத்தினத்திற்குப் போட்டியிடும் வாய்ப்பை கொடுத்திருக்கிறது திமுக தலைமை.

 

அதனைத் தொடர்ந்து தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளனர் திமுகவினர். ஆனாலும் 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பாகப் போட்டியிட்டபோது கிராமங்களில் வரையப்பட்ட சுவர் விளம்பரங்கள் இன்னும் அகற்றப்படாமல் அப்படியே இருப்பதும், அதை நெட்டிசன்கள் எடுத்து வைரலாக்குவதும் திமுகவினரை எரிச்சல் அடையவே செய்துள்ளது.

 

SKV's BJP advertisement; Vedaranyam DMK in grief

 

இதுகுறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தோம், "கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை. ஆனாலும், அதிமுகவின் அமைச்சரை எதிர்த்து இங்கு அரசியல் செய்தோம். கஜா புயல், நிவர் புயல், புரெவி புயல் எனப் பல பேரழிவுக் காலங்களில் சொந்தப் பணத்தில் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் நிவாரணம் வழங்கி கட்சியைக் கலகலக்கவிடாமல் கட்டிக்காத்தோம். இருந்தபோதும் தற்போது எஸ்.கே.வி.க்கு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பரவாயில்லை, கட்சிக்காக உழைக்கலாம் என்றாலும், தற்போது சுவர் விளம்பரம் செய்யக் கால அவகாசம் இல்லாததால், அவர் ஏற்கனவே வரைந்த சுவர் விளம்பரங்கள் இன்றுவரை அழியாச் சின்னமாக இருப்பது சிறு வருத்தத்தை தருகிறது" என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேதாரண்யம் பட்டாசு ஆலையில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

Firecracker factory incident in Vedaranyam

 

வேதாரண்யத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள ஆயக்காரன்புலத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில், திடீரென ஏற்பட்ட விபத்தில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. இதில் பட்டாசு ஆலை உரிமையாளரின் தந்தை மணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆலையில் பணியாற்றிய மேரி, சித்ரா, கலா, கண்ணன் உள்ளிட்ட பணியாளர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர்.

 

மீட்கப்பட்ட அனைவரும் வேதாரண்யம் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து வருகின்றனர். இந்த விபத்திற்கு மின்கசிவு காரணமா அல்லது ஊழியர்கள் செய்த தவறால் ஏற்பட்டதா என்பது தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலை வெடி விபத்தால் அந்தப் பகுதியே புகைமூட்டத்தில் மூழ்கியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

Next Story

‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ - 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியரிடம் அடி வாங்கிய மாணவர்கள்

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

nagapattinam vedaranyam boys government school students reunion

 

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 1985 - 1987 ஆம் ஆண்டுகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படித்த மாணவர்கள் தங்கள் படித்த பள்ளியில் மீண்டும் ஒருவர் ஒருவரை சந்தித்துக் கொள்ள முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அதன்படி 36 ஆண்டுகளுக்குப் பின் நேற்று முன்தினம் தங்கள் படித்த பள்ளியில் சந்தித்துக் கொண்டனர்.

 

இவர்களுக்கு தற்போது 60 வயது ஆகிறது. மேலும் இவர்களில் பலர் ஆசிரியர், மருத்துவர், பொறியாளர் மற்றும் காவல்துறை எனப் பல்வேறு பதவிகளில் பணியாற்றி தற்போது  ஓய்வு பெற்றிருக்கின்றனர். இன்னும் சிலர் தொழில் அதிபர்களாகவும் உள்ளனர். இந்த சந்திப்பின்போது தங்களுக்கு கற்பித்த 8 ஆசிரியர்களையும் பள்ளிக்கு அழைத்து வந்து பொன்னாடை அணிவித்தும், நினைவுப் பரிசுகள் வழங்கியும் சிறப்பித்தனர்.

 

இந்த சந்திப்பின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்து, ஆசிரியரை பாடம் நடத்துமாறு கேட்டுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் ஆசிரியர்களும் பாடம் நடத்தினர்.  அப்போது ஆசிரியர் கையில் குச்சியைக் கொடுத்து நாங்கள் மாணவர்களாக இருந்தபோது அடித்ததைப் போலவே மீண்டும் எங்களை அடிங்க சார் என கையை நீட்டி ஒவ்வொருவராக ஆசிரியரிடம் அடி வாங்கி மகிழ்ந்தனர். அதன் பின்னர் முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள் என அனைவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் தங்களது பள்ளிக் கால நினைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

 

இந்த நிகழ்வில் முன்னாள் மாணவர்களின் மகன்கள், மகள்கள், பேரன் மற்றும் பேத்திகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்  இறுதியில் தங்களது ஆசிரியர்களை காரில் அழைத்துச் சென்று அவர்களது வீட்டில் விட்டுவிட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி பிரியா விடை கொடுத்துச் சென்றனர். முன்னாள் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களைப் பள்ளிக்கு அழைத்து சந்தித்து மரியாதை செய்த இந்த சம்பவம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.