
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி நான்கு ஏ.டி.எம். இயந்திரங்களை உடைத்து சுமார் 75 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க திருவண்ணாமலை போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு பேரை கைது செய்து திருவண்ணாமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கே.கே. நகரில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை மர்ம கும்பல் நேற்று நள்ளிரவு கல்லால் உடைக்க முயன்றுள்ளது. ஆனால், கல்லால் இயந்திரத்தை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கே.கே. நகர் காவல்துறையினர் ஏ.டி.எம். இயந்திரம் அமைந்துள்ள பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஏ.டி.எம். மற்றும் சுற்றியுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.