Skip to main content

இறந்து போனவர் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி-போலீசார் விசாரணை

Published on 21/10/2022 | Edited on 21/10/2022

 

Shock as mysterious man comes alive - police investigation

 

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஏ.எம்.சி சாலையில் கடந்த 17ம் தேதி தனியாக நடந்து வந்த சுமார் 65 வயது மதிக்க நபர் ஒருவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில் சுயநினைவின்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

 

ஆனால் அவர் யார், எந்த ஊரை சேர்த்தவர் என்ற விவரம் தெரியாத நிலையில் அவரது புகைப்படத்தை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். மேலும் இவரை குறித்து விவரம் தெரிந்தவர்கள் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருமாறு தகவல் வெளியிட்டிருந்தனர்.

 

Shock as mysterious man comes alive - police investigation

 

வாட்ஸ் அப்பில் வந்த தகவலை பார்த்த அவரது மகன் சின்னதம்பி மற்றும் மகள் வனிதா ஆகியோர் இவர் தனது தந்தை என்றும், திண்டுக்கல் அருகே உள்ள பெரிய கோட்டை அருகே பாறைப்பட்டி சொந்த கிராமம் என்றும், அவரது பெயர் பழனிசாமி இவரது தந்தை பெயர் அய்யாவு என்றும் கூறினார். இதனிடையே பழனிசாமி சுயநினைவு அற்ற நிலையில் சிகிச்சை பலனிற்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது மகன் சின்னத்தம்பி தந்தையின் உடலை பெற்றுச் சென்று பாறைபட்டியில் அவருக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை செய்து அடக்கம் செய்தனர்.

 

இந்தநிலையில் நேற்று 20.10.22 இறந்து போனதாகக் கூறப்பட்ட பழனிசாமி திண்டுக்கல் நகருக்குள் சுற்றி திரிந்துள்ளார். இதனைப் பார்த்த ஊர் மக்கள், நீ இறந்து விட்டதாக கூறி உனது உடலை அடக்கம் செய்து காரியங்கள் அனைத்தும் செய்து விட்டதாக' தெரிவித்துள்ளனர். இதில் அதிர்ச்சியடைந்த பழனிசாமி பாறைப்பட்டிக்கு சென்றுள்ளார். இதைப் பார்த்த அவரது மனைவி, மகன் மற்றும் மகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக பழனிச்சாமியின் மகள் வனிதா மகன் சின்னத்தம்பி ஆகியோர் இறந்ததாகக் கூறப்பட்ட தனது தந்தை உயிருடன் வந்து விட்டதாகக் கூறி வடமதுரை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்ததாகக் கருதப்பட்ட நபர் மீண்டும் ஊருக்குள் வந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.