Skip to main content

ஜாமீனில் வெளியே வந்தார் செந்தில் பாலாஜி

Published on 26/09/2024 | Edited on 26/09/2024
nn

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அதனைத் தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீதான வழக்கில் இன்று (26.09.2024) காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் மூலம் சுமார் 15 மாதங்களுக்குப் பின் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியில் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளாவது, 'வாரம் தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி கையெழுத்திட வேண்டும்; சாட்சிகளை கலைக்க எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளக்கூடாது; எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும்; 25 லட்சத்திற்கு இருநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜியின் ஜாமீன் குறித்த ஆவணங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் புழல் சிறைத்துறைக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருந்த நிலையில் தற்போது அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். 471 நாட்களுக்கு பின் வெளியே வந்த அவரை  அங்கு கூடியிருந்த திமுக தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பூக்களை தூவி வரவேற்று ஆரவாரம் செய்தனர்.

சார்ந்த செய்திகள்