தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (09/10/2021) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 626 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், 1,324 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. அதேபோல், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குகளும் வரும் அக்டோபர் 12ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
எந்தெந்த ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறித்து பார்ப்போம்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், காட்டாங்குளத்தூர் ஒன்றியங்களிலும், விழுப்புரம் மாவட்டத்தில் கானை, கோலியனூர், மயிலம், மரக்காணம், மேல்மலையனூர், வல்லம் ஒன்றியங்களிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்ன சேலம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன் மலை, தியாக துருவம் ஒன்றியங்களிலும், வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு, கணியம்பாடி, திருப்பத்தூர், ஆலங்காயம், மாதனூர் ஒன்றியங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர் ஆகிய ஒன்றியங்களிலும், நெல்லை மாவட்டத்தில் களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய ஒன்றியங்களிலும், தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், சங்கரன்கோவில், குருவிக்குளம், செங்கோட்டை, தென்காசி ஆகிய ஒன்றியங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.