
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் தற்காலிக மார்க்கெட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக காந்திஜி நினைவு மார்க்கெட் இடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு இருந்த வியாபாரிகள் அனைவரும் கூட்டாக இணைந்து தாலுகா அலுவலகத்திற்கு அருகில் தற்காலிகமாக தனியார் மார்க்கெட் ஒன்றைத் திறந்து செயல்பட்டு வந்தனர்.
தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் அருகே அரசு சார்பில் புதிய மார்க்கெட் கட்டப்பட்டுள்ளது. தற்காலிக தனியார் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் அரசு சார்பில் கட்டப்பட்ட புதிய மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதில் வைப்புத் தொகை மற்றும் வாடகை அதிகமாக உள்ளதாக வியாபாரிகள் அந்த கடைகளுக்கு செல்ல மறுத்து தற்காலிக தனியார் மார்க்கெட்டிலேயே செயல்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் இன்று அதிகாலை தனியார் மார்க்கெட் பகுதிக்கு வந்த வட்டாட்சியர் பரமசிவன் தலைமையிலான அதிகாரிகள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் தனியார் மாட்டிற்கு சீல் வைத்தனர். வியாபாரிகள் சீல் வைக்க கூடாது என வாக்குவாத்தில் ஈடுபட்ட போதிலும் அதிகாரிகள் இறுதியாக சீல் வைத்து சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.