Skip to main content

சேலம் உருக்காலையை வாங்க ஒருவரும் விண்ணப்பிக்காததால் மீண்டும் அவகாசம் நீட்டிப்பு! வலுக்கும் தொழிலாளர்கள் போராட்டம்!!

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

சேலம் உருக்காலையை தனியார் ஒப்பந்தம் எடுப்பதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை இரண்டாம் முறையாக மீண்டும் செப்டம்பர் 10ம் தேதி வரை நீட்டித்து செயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 


சேலம் உருக்காலை, கடந்த 1981ம் ஆண்டு உற்பத்தியைத் துவக்கியது. ஆரம்பத்தில் ஆண்டுக்கு 32 ஆயிரம் டன்னாக இருந்த இந்த ஆலையின் உற்பத்தித்திறன், காலப்போக்கில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், கார்பன் சுருள்கள் உற்பத்தித்திறனில் ஆண்டுக்கு 3.60 லட்சம் டன் அளவுக்கு விரிவாக்கம் பெற்றது. இந்த ஆலையில் இருந்து 37 நாடுகளுக்கு ஸ்டீல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு சராசரியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. 


இந்நிலையில், ஆலை விரிவாக்கத்திற்காக வெளியில் இருந்து 2300 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது. புதிய ஆர்டர்கள் இல்லாதது, மூலப்பொருள்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சாக்குபோக்குகளைக் காரணம் காட்டி, ஆலை நட்டத்தில் இயங்குவதாக செயில் அறிவித்தது. அதனால், இந்த ஆலையை தனியாருக்கு விற்றுவிடலாம் என்று மத்திய அரசின் நிதி ஆயோக் குழுவும் பரிந்துரை செய்தது.

 

Salem steel plant tender date extension again Workers struggle to strengthen

 


சேலம் உருக்காலை மட்டுமின்றி, விஸ்வேஸ்வரய்யா உருக்காலை (கர்நாடகா), அலாய் ஸ்டீல் ஆலை (துர்காபூர்) ஆகிய பொதுத்துறைக்குச் சொந்தமான ஆலைகளையும் தனியாருக்கு விற்றுவிட நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. அதையடுத்து, செயில் நிர்வாகம் இம்மூன்று ஆலைகளையும் தனியாருக்கு விற்று விடும் பணிகளில் முழு வீச்சில் களமிறங்கியது. தனியாருக்கு விற்பதற்கான பகிரங்க அறிவிக்கையை, கடந்த ஜூலை 4ம் தேதி செயில் நிர்வாகம் வெளியிட்டது. ஆகஸ்ட் 1ம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என அவகாசம் அளித்திருந்தது.


செயிலின் முடிவை எதிர்த்து, உருக்காலையில் பணியாற்றி வரும் 950 நிரந்தர தொழிலாளர்களும் ஜூலை 5ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் செயில் தரப்பில் சிறு அசைவும் இல்லாது போகவே, தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை பல்வேறு பரிமாணங்களில் இன்று வரை தொடர்ந்து வருகின்றனர். தர்ணா, உண்ணாவிரதப் போராட்டம், செயிலைக் கண்டித்து ஊர்வலம் என பல்வேறு கட்ட போராட்டங்களை அடுத்து அவர்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.


இதற்கிடையே, உருக்காலையை வாங்குவதற்கு ஒருவரும் முன்வராததால் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஆகஸ்ட் 26ம் தேதி வரை நீட்டித்தது செயில். அப்போதும் தனியார் ஒப்பந்ததாரர்கள் சேலம் உருக்காலை மீது பெரிய அளவில் கவனம் செலுத்தாததால், இப்போது இரண்டாம் முறையாக செப்டம்பர் 10ம் தேதி வரை ஒப்பந்தம் எடுப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்திருக்கிறது செயில். இதற்கு தொழிலாளர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து நாம் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி சுரேஷ்குமாரிடம் பேசினோம்.


''சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பது குறித்து எப்போது அறிவிப்பு வெளியிட்டார்களோ அதற்கு அடுத்த நாளில் இருந்து போராடி வருகிறோம். ஆலையை வாங்க விருப்பம் உள்ள நிறுவனத்தினர் இங்கே நேரில் பார்வையிட வரலாம் என்பதால், ஆகஸ்ட் 5ம் தேதி முதல் நுழைவாயில் அருகே தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறோம். எங்களைக் கடந்து எந்த ஒரு வெளிநபரும் உள்ளே சென்று விட முடியாது. அதில் உறுதியாக இருக்கிறோம்.
 

Salem steel plant tender date extension again Workers struggle to strengthen


இந்த ஆலையை வாங்குவதற்கு தனியார் முதலாளிகள் யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அதனால் ஆலையை வாங்க விரும்புவோர் விண்ணப்பிக்கும் அவகாசத்தை இப்போது இரண்டாவது முறையாக செப்டம்பர் 10 வரை நீட்டித்துள்ளனர். ஒருவேளை, ஆலையின் மதிப்பை மேலும் குறைப்பதற்காகவோ அல்லது மத்திய, மாநில ஆட்சியாளர்களுக்கு வேண்டிய நபர்களுக்கு விற்பதற்காக அப்படியொரு நாடகத்தை ஆடவும் வாய்ப்பு இருக்கிறது. தொழிலாளர்கள் ஒருபுறம் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அவகாசத்தை நீட்டித்து இருப்பது குறித்து ஆலை நிர்வாகம் எங்களுக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. 


நாங்கள் சுழற்சி முறையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும் உருக்காலையில் உற்பத்திக்கு எந்த விதத்திலும் இடையூறாக இருந்ததில்லை. என்றாலும், சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். எங்கள் போராட்டம் மேலும் வலுவடையும்,'' என்றார் சுரேஷ்குமார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.