Skip to main content

சேலத்தில் முஸ்லிம் மகளிர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் 3 பேர் கைது!

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

salem incident police investigation

 

சேலத்தில் முஸ்லிம் மகளிர் சங்க நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவர் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் அம்மாபேட்டை பாலாஜி நகர் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பாஷா. இவருடைய மனைவி உமைபானு (45). இவர், சேலம் முதல் அக்ரஹாரத்தில் உள்ள ஈஸ்வரன் கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் துணிக்கடை நடத்தி வந்தார். அரசு சார்பில் இயங்கி வரும் சேலம் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் மையத்தின் செயலாளராகவும், அல்-அமானத் அறக்கட்டளை என சொந்தமாக ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து, அதன் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

 

இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி, வீட்டிற்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உமைபானு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து அவருடைய கணவர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அரசு வேலை வாங்கித் தருவதாகவும், வங்கிகளில் கடன் பெற்றுத் தருவதாகவும், நிலம் வாங்கிக் கொடுப்பதாகவும் கூறி பலரிடம் பணம் வசூலித்துக்கொண்டு ஏமாற்றி வந்திருப்பது தெரிய வந்தது. இதனால் பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட மோதலில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகித்தனர்.

 

இதையடுத்து, கொலையாளிகளைப் பிடிக்க அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கணேசன், கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் அன்பழகன், அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பொன்ராஜ், அம்மாபேட்டை மகளிர் காவல் ஆய்வாளர் சிவகாமி, எஸ்ஐக்கள் சதீஸ்குமார், கார்த்திகேயன், கார்த்தி, ஆனந்தகுமார், ரங்கராஜன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

 

சம்பவத்தன்று அவருடைய வீட்டுக்கு வந்து சென்ற மர்ம நபர்கள் குறித்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்டறிந்தனர். மேலும், அவருடைய செல்ஃபோனில் இருந்து யார் யாருக்கு அடிக்கடி பேசப்பட்டுள்ளது? அவரை அடிக்கடி தொடர்புகொண்ட நபர்கள் யார் யார்? என்பது உள்ளிட்ட விவரங்களையும் தனிப்படையினர் சேகரித்தனர்.

 

salem incident police investigation

 

கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த அக்தர் மகன் அக்பர் பாஷா (43) என்பவர், உமைபானுவிடம் வியாபாரம் தொடர்பாக 40 லட்சம் ரூபாய் கொடுத்திருந்ததும், அந்தப் பணத்தை அவர் திருப்பிக் கேட்டபோது உமைபானு திருப்பிக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

 

இதனால் அவரிடம் எப்படியாவது பணத்தை வாங்கியாக வேண்டும் என்ற நோக்கத்தில் மார்ச் 12ஆம் தேதியன்று அக்பர் பாஷா, உமைபானு வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்குத் தெரிந்த சேலம் பொன்னம்மாபேட்டை, திப்பு நகர் ரயில்வே லைன் தெற்கு தெருவைச் சேர்ந்த பாஷா மகன் அப்சர் என்ற சொச்சோ (29), பொன்னம்மாபேட்டை மஜித் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ரகுபதி (29) ஆகியோரையும் அழைத்துச் சென்றுள்ளார்.

 

உமைபானுவிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, அவர் பணம் தர முடியாது என்று மறுத்திருக்கிறார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த அக்பர் பாஷா உள்ளிட்ட மூவரும் உமைபானுவை கை, கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணியை வைத்து அடைத்து மூச்சுத்திணறல் ஏற்படுத்தி கொலை செய்துள்ளனர். அதன்பிறகும், சுவரில் அவரது தலையை மோதச் செய்திருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

இந்நிலையில், அவர்கள் மூன்று பேரும் பொன்னம்மாபேட்டையில் ஓரிடத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர், மூவரையும் புதன்கிழமை (மார்ச் 17) கைது செய்தனர். கைதான மூவரையும் சேலம் மாவட்ட 5வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் அன்பு முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவருடைய உத்தரவின்பேரில் மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்